Sunday, April 29, 2012

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒத்துவரக் கூடிய மற்றும் ஒத்துவராத உணவு வகைகள் [1 Attachment]




நம் உடம்பிற்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தண்ணீர் என நான்கு வகையென நாம் தெரிந்து கொண்டோம். அடுத்த கட்டமாக இந்த நான்கு ஊட்டச்சத்துகளில் இருந்து என்ன அடிப்படையில் நமக்குத் தேவையான உணவை தேர்வு செய்ய வேண்டும் என இப்பொழுது பார்ப்போம். நம் உடம்பிற்கு முக்கியமாக தேவைப்படுகின்ற ஊட்டங்கள் ஏழு ஆகும். ஆகவே இந்த ஏழு ஊட்டச் சத்துக்களை வழங்கும் உணவு வகைகளைத்தான் நாம் உட்கொள்ள வேண்டும் என்றாகின்றது. அந்த ஏழு ஊட்டச் சத்துக்கள் முறையே விட்டமின்கள், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ், நார்ச்சத்து, என்சைம்கள் எண்ணெய் மற்றும் தண்ணீராகும்.
விட்டமின்கள்: நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களுக்கு தேவையான எனர்ஜியை வழங்குகின்றன. மேலும் நாம் உண்கின்ற உணவு சரியாக பயன்படவும் உதவுகின்றன. உதாரணமாக விட்டமின் அ, ஆ காம்ளக்ஸ் விட்டமின் மற்றும் விட்டமின் ஈ ஆகியவற்றைச் சொல்லலாம்.
தாதுக்கள்: தாதுக்கள் எலும்பு மற்றும் பல் வளர்ச்சி, தசை இயக்கம், நரம்பு செயல்பாடு ஆகியவற்றிற்கு உதவுகின்றன. நம் உடம்பிற்கு பயன்படும் தாதுக்களுக்கு உதாரணமாக கால்சியம், பொட்டாசியம், மக்னீஷியம் மற்றும் குரோமியம் ஆகியவற்றைச் சொல்லலாம்.
ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்: இந்த ஊட்டசத்து நம் உடம்பில் நிகழும் தேவையற்ற ஆக்ஸைடேஷனை தடுக்க உதவுகின்றது. இவற்றிற்கு உதாரணமாக விட்டமின் இ, விட்டமின் உ மற்றும் செலேனியம் ஆகியவற்றைச் சொல்லலாம்.
நார் சத்து: இதே நார் சத்துக்கள் நம் உடம்பிலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றது. உதாரணமாக சைலியம் பௌடர் , தவிடு ,மற்றும் பெக்டின் ஆகியவற்றை கூறலாம்.
என்சைம்கள்: நாம் உண்கின்ற உணவு செரிமானம் ஆவதற்கு இந்த என்சைம்கள்தான் உதவுகின்றன. நாம் உட்கொள்கின்ற மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து என்று இவற்றையெல்லாம் ஜீரணம் செய்வதற்கு இந்த என்சைம்கள் உதவுகின்றன.
எண்ணெய்: நம் உடம்பிலுள்ள திசுக்கள் மற்றும் மூட்டுகளுக்கெல்லாம் நல்ல இயக்கம் வருவதற்கும் உராய்வு ஏற்படாமல் இருப்பதற்கும் எண்ணெய் உதவுகின்றது. ஆலிவ் எண்ணெய் மற்றும் மீன் எண்ணெயை உதாரணமாகச் சொல்லலாம்.
ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற ஊட்டச் சத்துக்கள்
மேற்கூறியவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது ஆரோக்கியமான உணவு வகைகள் மேற்சொன்ன ஊட்டச்சத்துக்களை எல்லாம் நமக்கு வழங்கக் கூடியதாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவு வகைகள் இந்த ஊட்டச் சத்துக்களை தராதவைகளாக இருக்கும்.

ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற மாவுச்சத்துக்கள்
பிரகாசமான நிறம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழவகைகள் மேற்கண்ட ஏழு ஊட்டச் சத்துக்கள் கொண்டு இருப்பதால் இவையும் ஆரோக்கியமான மாவுச்சத்துகள் என்று பெயர் பெறுகின்றன. பார்லி மற்றும் ஓட்ஸ் தானிய வகைகளும், விட்டமின் கள், தாதுக்கள், நார்ச்சத்து, எண்ணெய் மற்றும் என்சைம்கள் ஆகியவற்றை கொண்டிருப்பதால் இவையும் ஆரோக்கியம் உள்ள மாவுச் சத்துகளாக கருதப் படுகின்றன. செயற்கையாக பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவு பண்டங்கள் விட்டமின்கள், தாதுக்கள், என்ஸைம்கள் ஆகியவை இல்லாதிருப்பதால் ஆரோக்கியமற்ற மாவுச் சத்துக்களாக கருதப்படுகின்றன. மேலும் இந்த பதப்படுத்தப் பட்ட உணவுப் பண்டங்கள் நம்முடைய ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அளவை வேகமாக ஏற்றுவதால், ஆரோக்கியமான உணவு என்ற தகுதியை இழக்கின்றன. இப்படித் தகுதி இழக்கும் உணவு பண்டங்களில் பாட்டில் செய்யப்பட்ட பழச்சாறுகள், உருளைக்கிழங்கு வறுவல்கள், வெள்ளை சாதம், வெள்ளை ரொட்டி, மற்றும் தக்காளி கெட்சப் ஆகியவை அடங்கும். இவையெல்லாம் நம் உடம்பிற்கு ஊட்டம் தருவதில்லை, பாதுகாப்பதில்லை, சுத்தப்படுத்துவதும் இல்லை.

ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற புரதச் சத்துக்கள்
கொட்டைகள், விதைகள், பீன்ஸ் வகைகள், மீன் மற்றும் இயற்கை முறையில் வளர்க்கப்படும் கோழிகள் இடும் முட்டைகள், சோயாபீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் இவை எல்லாம் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பெரும் பாலானவற்றை கொண்டு இருப்பதால் ஆரோக்கியமான புரதச் சத்துக்களாகக் கருதப்படுகின்றன. மேலும் ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்து இவைகளில் அதிகமாகக் காணப்படுவதில்லை என்பதும் ஒரு நல்ல விஷயமாகும். மேலை நாடுகளில் சோளம் சாப்பிட்டு வளரும் கால்நடைகளுக்கு நிறைய வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் அன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுவதால் இக்கால்நடைகளிலிருந்து பெறப்படும் இறைச்சி ஆரோக்கியமற்ற புரதமாக கருதப்படுகின்றது. இந்தக் கால்நடைகளிலிருந்து பெறப்படும் இறைச்சி புற்று நோயைத் தூண்டும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும் மற்றும் இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும். ஆனால் புல் தின்று வளரும் கால்நடைகளுக்கு வளர்ச்சி ஹார்மோன்கள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை என்பதால் அவைகளினுடைய இறைச்சி ஆரோக்கியமான புரதமாகக் கருதப்படு கின்றது.
ஆரோக்கியமான மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புச் சத்துக்கள்
ஆலிவ் எண்ணெயிலுள்ள தனி கலப்பில்லாத கொழுப்புச் சத்து நம்முடைய ரத்தக் குழாய்கள் மற்றும் உடம்பிலுள்ள மூட்டுக்கள் ஆகியவற்றிற்கு நல்லதொரு உராய்வில்லாத இயக்கத்தை கொடுப்பதால் ஆரோக்கியமான கொழுப்புச் சத்தாகக் கருதப்படுகின்றது. மீன் எண்ணை மற்றும் வால்நட் கொட்டைகள் ஆகியவற்றில் காணப்படுகின்ற சில கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் நம் உடம்பிற்கு மிகவும் தேவையான ஒமேகா 3 என்றழைக்கப்படும் அவசியமான கொழுப்பு அமிலத்தை கொண்டிருக்கின்றன. இவை நம்முடைய ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தின் அடர்த்தி ஆகியவற்றை கட்டுப்படுத்துவதால் நல்ல கொழுப்புச் சத்தாகக் கருதப்படுகின்றன.
மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள், பிராணிகளிடம் காணப்படும் சில ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்கள், ஒமேகா 6 )கொழுப்பு அமிலம் போன்ற சில கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் ஆகியவை ஆரோக்கிய மற்ற கொழுப்புச் சத்துக்களாக கருதப்படுகின்றன. மார்ஜரின், உருளைக்கிழங்கு வறுவல் மற்றும் வறுவல் செய்யப்படுகின்ற பதார்த்தங்கள் ஆகியவை மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் ஆகும். மேலும் பதப்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் ஆயில் ஆகியவை இரண்டும் ஆரோக்கியமற்ற ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களாகக் கருதப்படுகின்றன. சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பருத்திக் கொட்டை எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் ஆகியவை ஆரோக்கிய மற்ற கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்களாகக் கருதப்படு கின்றது. மேற்கூறிய ஆரோக்கியமற்ற கொழுப்புச் சத்துக்கள் எல்லாம் நம்முடம்பில் கொலஸ்ட்ராலை அதிகரித்து அதன் காரணமாக ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக் கூடியன.
மேற்சொன்ன ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமற்ற என்ற இரு பிரிவுகளின் கீழ் நாம் சாப்பிடும் எல்லா உணவு வகைகளையும் பயனற்றது, பயனுள்ளது என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
பயனற்ற உணவு வகைகள்: பயனற்ற உணவு வகைகள் என்பவை நம் உடம்பை வியாதிக்கு உள்ளாக்கி நம்முடைய ஆயுளை குறைக்கக் கூடியவை. செயற்கையாக மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எல்லாம் இந்தப் பிரிவின் கீழ் அடங்கும். உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் இவற்றில் இருக்காது. மேலும் இந்த பயனற்ற உணவுப் பண்டங்கள் புற்றுநோய், சர்க்கரை நோய், இதயக் கோளாறுகள் ஆகியவற்றை உண்டு பண்ணக் கூடியவை.

பயனுள்ள உணவுப் பண்டங்கள்:
இந்தப் பண்டங்கள் நம்முடைய உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதே சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன. இவ்வுணவுப் பண்டங்கள் பெரும்பாலும் மிதமாக சமைக்கப்படுகின்றன என்பதால் நம்முடம்பிற்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச் சத்துக்கள் வீணாகாமல் காப்பாற்றப்படுகின்றன. இந்த உணவுப் பண்டங்கள் சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகளிலிருந்து மீட்கக் கூடியவை.
ஐந்து பயனற்ற உணவுகள்:
ஐந்து பிரதான உணவுப் பண்டங்களை நாம் பயனற்ற உணவுகள் எனலாம். இவைகளை நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் பொழுது இவை நம் உடம்பை பலஹீனப்படுத்தி புற்று நோய், சர்க்கரை நோய் மற்றும் இதயக் கோளாறுகளுக்கு ஆளாக்கிவிடுகின்றன. இந்த ஐந்து பிரதான உணவுப் பண்டங்கள் வெள்ளை சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட மாவு, மாற்றம் செய்யப்பட்ட கொழுப்பு, ஹைட்ரஜன் சேர்க்கப்பட்ட கொழுப்பு மற்றும் நம் உடல் நலத்தைப் பாதிக்கும் கெமிக்கல்ஸ் ஆகும்.
1. வெள்ளை சர்க்கரை: இந்தப் பிரிவின் கீழ் கார்ன்சிரப், சுக்ரோஸ், மால்டோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை கலந்து செய்யப்பட்ட உணவுகள் எல்லாம் அடங்கும். மேலும், குளிர்பானங்கள், பாட்டிலில் போடப்படும் பழச்சாறுகள், ஜாம், மற்றும் கேக் வகைகளும் அடங்கும்.
உடல் நலத்தாக்கம்: மேற்கூறிய சர்க்கரை அதிகமான இந்தப் பண்டங்கள் எல்லாம் நம் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை உடனே அதிகப்படுத்தி அதன் விளைவாக இன்சுலின்களையும் நம் உடம்பு எதிர்க்கும் பொழுது இந்த சர்க்கரைமயமான உணவுப் பண்டங்களில் இருக்கின்ற கூடுதல் மாவுச் சத்து எல்லாம் உடம்பில் கொழுப்புச் சத்தாக மாற்றப்பட்டு சேகரம் செய்யப்படுகின்றது. மேலும் இந்தச் சர்க்கரைமயமான உணவுப் பண்டங்கள் நம் உடம்பிலுள்ள பயனுள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்களை குறையச் செய்கின்றன. சர்க்கரைக்கு மாற்றாக விற்கப்படுகின்ற செயற்கை இனிப்பு வகைகளில் சர்க்கரை இல்லாவிட்டாலும் இவை நம்மை அதிகமாகச் சாப்பிடச் செய்கின்றன. அப்படி நாம் அதிகமாகச் சாப்பிடும் பொழுது அதன்மூலம் நம் உடல் நலத்தை அவை பாதிக்கின்றன.
2. பதப்படுத்தப்பட்ட வெள்ளைமாவு: இந்தப் பிரிவின் கீழ் வெள்ளை மாவால் செய்யப்படுகின்ற வெள்ளை ரொட்டி, வெள்ளை சாதம், நூடுல்ஸ் மற்றும் கேக் வகைகள், மற்றும் உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த காய்கறிகள் அடங்கும்.
உடல் நலத்தாக்கம்: மேற்கண்ட ஸ்டார்ச் சத்து மிகுந்த உணவுப் பண்டங்கள் எல்லாம் சர்க்கரைப் பண்டங்கள் போலவே குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவுகளை ஏற்றிவிடுகின்றன. இன்சுலினை உடம்பு எதிர்க்கும் பொழுது இந்த கூடுதலான ஸ்டார்ச் சத்தும் கொழுப்புச் சத்தாக மாற்றப்பட்டு சேகரம் செய்யப்படுகின்றது. இப்படி வெள்ளை மாவை சாப்பிடுவதற்குப் பதிலாக முழு கோதுமை மற்றும் அரிசியிலிருந்து செய்யப்படுகின்ற உணவுப் பண்டங்களை சாப்பிட்டால் மேற்கண்ட பாதிப்புகளை நாம் தவிர்க்கலாம்.
3. மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்து: இப்பிரிவின் கீழ் ஹைட்ரஜன் கலந்த எண்ணெயால் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களான மார்ஜரின், உருளைகிழங்கு வறுவல் மற்றும் பேக்கரிப் பண்டங்கள் எல்லாம் அடங்கும். ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் பண்டங்களை பயன்படுத்தும் பொழுது இந்த எண்ணெயில் இருக்கின்ற கொழுப்பு அமிலங்கள் அழிக்கப்பட்டு குறைபாடுள்ள மாற்றம் செய்யப்பட்டுள்ள கொழுப்புச் சத்துக்கள் வந்துவிடுகின்றன.
உடல் நலத் தாக்கம்: இப்படி மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் நம் உடல் நலத்திற்கு ஒத்துவருவதில்லை. நம்முடைய ரத்தக் குழாய்களில் இவை அடைப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் நம் உடம்பிலுள்ள செல்களில் இன்சுலினுக்கு வழிவிடும் கதவுகளை மூடுகின்றன.
4. ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்கள்: இந்தக் கொழுப்புச் சத்து மாமிச உணவிலும், வறுவல் செய்யப்பட்ட உணவிலும், வெண்ணெய், ஐஸ்கிரீம், மற்றும் பதப்படுத்தப்பட்ட பாலிலும் இருக்கின்றன. தேங்காய் எண்ணெய் மற்றும் பாமாயிலிலும் இந்தக் கொழுப்புச் சத்து இருக்கின்றது.
உடல் நலத் தாக்கம்: ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களை நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், இவற்றை சாப்பிடும் பொழுது தேவையில்லாத கொழுப்புச் சத்து நம் உடம்பில் சேருகின்றது மற்றும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகின்றது. இன்சுலின் உபயோகம் குறைகின்றது. தேங்காய் எண்ணெயில் இந்தக் கொழுப்புச்சத்து மிகுந்து உள்ளது இருந்தாலும் பதப்படுத்தப்படாத தேங்காய் எண்ணெய் சமையலுக்கு மிக நல்லதாகும். தேங்காய் எண்ணையில் உள்ள நடுத்தரமான கொழுப்பு அமிலங்கள் நம் ரத்த ஓட்டத்தில் சேராமல் ஈரலுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே ஈரலில் அவை நேரடியாக எனர்ஜியாக மாற்றப்படு கின்றன.
5. கெமிக்கல்ஸ்: இந்தப் பிரிவின் கீழ் தாது வகைகள், புகையிலை, காபி மற்றும் தேநீரில் உள்ள கஃபின் என்ற கெமிக்கல் ஆகியவை அடங்கும்.
உடல் நலத் தாக்கம்: மதுபானங்களும், புகையிலையும் நம்முடைய ஈரல், இதயம், நுரையீரல் ஆகியவற்றில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. காபியில் இருக்கும் கஃபின் கெமிக்கல் நம் நரம்புகளைத் தூண்டி விடுகின்றது. கஃபினால் நமக்கு இன்சுலின் சுரப்பது அதிகரிக்கலாம். கார்ன்சிரப் மற்றும் வெள்ளை சர்க்கரை மற்றும் ஹைட்ரஜன் கலந்த சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள் எல்லாம் ஜீரணமாவதற்கு மிகவும் காலதாமதம் ஆவதால் அந்த அளவிற்கு நம்முடைய உடம்பிலுள்ள எனர்ஜி விரயமாகின்றது. மேலும் மருந்துக் கடைகளில் டாக்டருடைய மருந்துச் சீட்டு இல்லாமல் வாங்கப்படும் பல மருந்துகளால் நம்முடைய ஈரல் மற்றும் சிறுநீரகம் மற்றும் இதயத்திற்கெல்லாம் பாதிப்பு ஏற்படுகின்றது.
ஐந்து பயனுள்ள உணவுப் பண்டங்கள்:
நம் உடம்பிற்கு ஏற்ற கெமிக்கல் பாலன்ஸை உண்டுபண்ணி நம் உடம்பை நன்றாகப் பராமரித்து நோய் நொடியிலிருந்து காப்பாற்றும் சக்தி படைத்த உணவுப் பண்டங்கள் 5 உள்ளன. அவையாவன. காய்கறிகள் மற்றும் பழவகைகள், வடிகட்டப்பட்ட தண்ணீர், மெலிந்த புரதச் சத்து, தனிப்பட்ட கலப்பில்லாத ஒமேகா 3 கொழுப்புச் சத்து மற்றும் முழு தானிய வகைகள்.
1. காய்கறிகள், பழவகைகள்: பயனுள்ள காய்கறிகள் மற்றும் பழவகைகள் என்று நாம் நிறைய சொல்லலாம். பெரும்பாலான பயனுள்ள காய்கறிகளும், பழவகைகளும் நல்ல பிரகாசமான நிறம் கொண்டவைகளாக இருக்கும். முட்டைக்கோஸ், காலிபிளவர், வெள்ளரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ் வகைகள் மற்றும் டர்னிப் ஆகியவைகளை உதாரணமாகச் சொல்லலாம். பீட்ரூட், கேரட், தக்காளி ஆகியவைகளும் இவற்றில் அடங்கும். ஆப்பிள், திராட்சை, ஏப்ரிகாட், எலுமிச்சை, ஆரஞ்ச், பப்பாளி, மாதுளம்பழம் போன்ற பழங்களும் இவற்றில் சேரும்.
உடல்நலத் தாக்கம்: முட்டைக்கோஸ், பிராக்கோலி போன்ற காய்கறிகள் நிறைய நார்சத்து கொண்டவைகளாக இருப்பதால் உணவை நிதானமாக ஜீரணம் செய்ய உதவுகின்றது. அப்படி நிதானமாக ஜீரணம் செய்யும் பொழுது சர்க்கரை ரத்தத்தில் கலப்பதும் நிதானமாக நடக்கிறது. ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழவகைகளும் இதேமாதிரியே செயல்படுகின்றன. இப்பழங்களிலும், காய்கறிகளிலும் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்திற்கும் கொலஸ்ட்ராலையும் அகற்றவும் உதவுகின்றது.
அதிக நார்ச்சத்து கிடைப்பது மட்டுமில்லாமல், மேற்கண்ட பழங்களும் காய்கறிகளும் புரதச்சத்து, என்சைம்கள் மற்றும் விட்டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றையும் உடலுக்கு வழங்குகின்றன. மேலும் இவற்றில் காணப்படுகின்ற பொட்டாசீயம், மக்னிசீயம். ஃபாலிக் ஆசிட் மற்றும் என்சைம்கள் நம்முடைய ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களை விரிவுபடுத்தி உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமலும் வழி செய்கின்றது.
பூண்டு, வெங்காயம் போன்ற காய்கறிகள் நம் உடம்பிற்கு நல்ல கொலஸ்ட்ராலை வழங்குகின்றன. ரத்த அழுத்தத்தையும் குறைக்கின்றன. ஏப்ரிகாட் மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களில் உள்ள அமிலங்கள் புற்றுநோயை தடுக்க உதவுகின்றன. மேலும் ஈரலின் பாதுகாப்பிற்கு உதவுகின்றன. எலுமிச்சம் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உபயோகமான ஒன்று. ஏனென்றால், உடம்பில் சர்க்கரை அதிகமாக சேரும் பொழுது ஏற்படக் கூடிய கூடுதல் அமிலத்தன்மையை எலுமிச்சம்பழம் குறைக்கின்றது. மேலும் மற்ற பழங்களைவிட, எலுமிச்சம் பழத்தில் சர்க்கரை குறைவு. மேலும் நமது பற்கள் மற்றும் ஈறுகளை பலப்படுத்தவும் எலுமிச்சம் பழம் உதவுகின்றது. எலுமிச்சம் பழம் புளிப்பாக இருந்தாலும் உடம்பில் அதனுடைய செயல்பாடு காரத்தை கூட்டுவதாக அமைந்துள்ளது. அமிலத்தன்மை உடம்பில் அதிகரிப்பதால் விளைகின்ற மூட்டுவலிக்கு இது ஓர் எதிர்ப்பாக அமையும். ஆங்கிலத்தில் கிரேப் புரூட் என்றழைக்கப்படும் பம்பளிமாஸ் பழம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கின்றது. பம்பளிமாஸ் விதைகள் மலச்சிக்கல், வாயு தொந்திரவு ஆகியவற்றைத் தடுக்கின்றன. இந்த நார்ச்சத்து மிகுந்த மேற்கண்ட காய்கறிகள் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்துவதால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று வருகின்ற ஆர்வத்தையும் குறைக்கின்றது. இருந்தாலும் வாழைப்பழம், பைன் ஆப்பிள், வாட்டர் மெலன் போன்ற பழங்களில் நிறைய சர்க்கரை சத்து இருப்பதால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

2. வடிகட்டிய தண்ணீர்
: முனிசிபல் குழாய்களிலிருந்து கிடைக்கும் தண்ணீர் சுத்தமான தண்ணீர் என்று சொல்ல முடியாது. அதில் குளோரின், மற்றும் தேவையில்லாத தாதுக்கள் கலந்திருக்க வாய்ப்புண்டு. ஆகவே முனிசிபல் குழாய்களில் வரும் தண்ணீரை வடிகட்டுவதற்காக வீட்டில் அக்வா கார்டு என்ற வடிகட்டும் மெஷினை வைத்துக் கொள்வது நல்லது. பழம் மற்றும் காய்கறிகளில் இருக்கின்ற நீர் குழாய்களில் வரும் நீரைவிடத் தூய்மையானது. காய்கறிகளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் சாறை அப்படியே சாப்பிட்டால், அது நம் உடம்பிற்கு மிகவும் நல்லது. குடிநீரில் குளோரின் அதிகமாக இருந்தால் அதுவே சிறுநீரை சேகரிக்கும் பிளேடரில் புற்றுநோய் வருதற்கு காரணமாக அமையும். அக்வாகார்டின் மூலம் குளோரினை அகற்றி விட்டு அக்குடி நீரை உபயோகப்படுத்தினால், அக்குடி நீர் நம்மை பாதிக்காது.
உடல் நலத்தாக்கம்: தண்ணீரின் மூலமாகத்தான் நம் உடலிலுள்ள செல்களுக் கெல்லாம் ஊட்டச்சத்துக்கள் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் செல்களுக்குள் தண்ணீர் இருப்பதால்தான் செல்களும் மென்மையாக இருக்கின்றன. நம் உடம்பின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும் தண்ணீர் உதவுகின்றது. இப்படித் தண்ணீருக்கு பல உபயோகங்கள் இருப்பதால், இருப்பதிலேயே மிகச் சிறந்த தண்ணீரான வடிகட்டிய தண்ணீரை நம் உடம்பிற்கு வழங்குவது நல்லது. தண்ணீர் உடம்பிற்கு நல்லது என்றாலும் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் தவறுதான். நாம் அளவிற்கு அதிகமாக குடிக்கும் பொழுது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். அதன் விளைவாக நம் உடம்பிற்கு தேவையான பல வகை தாதுக்கள் சிறுநீர் மூலம் வெளியேறுவதால் இவற்றை யெல்லாம் உடம்பு இழக்க நேரிடும்.
3. மெலிந்த புரதச்சத்து: இந்தப் பிரிவின் கீழ் சால்மன், சார்டின், டூனா, மேக்கரல், டிலாப்பியா ஆகிய மீன் வகைகளும், கொட்டைகள், விதைகள், பீன்ஸ் வகைகள், தோல் எடுக்கப்பட்ட கோழிக்கறி, தோல் எடுக்கப்பட்ட வான் கோழிக்கறி, ஆட்டுப் பால், கொழுப்புச்சத்து குறைந்த தயிர், இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கோழிகள் இட்ட முட்டைகள் ஆகியவை இவற்றில் அடங்கும். கடல்வாழ் உயிரினங்களான இறால், நண்டு போன்றவைகளும் இதில் அடங்கும்.

உடல் நலத்தாக்கம்
: மேற்கண்ட உணவு வகைகள் நம்முடம்பிற்குத் தேவையான அமினோ ஆசிடுகளை வழங்குகின்றன. அதே சமயத்தில் பால் பண்ணைகளில் கிடைக்கும் தீவனங்களை உண்டு வளரும் கால்நடைகளின் மாமிசத்தை சாப்பிடுவதால் நமக்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச ஹைட்ரஜன் கலந்த கொழுப்புச் சத்துக்களையும் தவிர்க்கின்றன. மேலும் இந்த உணவு வகைகள் நம் ஈரலில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் க்ளோககான் என்ற சர்க்கரை பொருளை திறம்பட உபயோகிப்பதற்கு நம் உடம்பிற்கு உதவுகின்றன. திறம்பட உபயோகிப்பதால் இன்சுலின் சுரப்பதும் குறைகின்றது. இன்சுலின் சுரப்பு குறைவதால், கொழுப்புச்சத்து மற்றும் கொலஸ்ட்ரால் சத்து நம் உடம்பில் கூடுவதும் குறைகின்றது. புளிப்படைந்த தயிர் சாப்பிடுவதால் நம் சிறுகுடலில் உள்ள ஜீரணத்திற்கு உதவுகின்ற நுண்ணுயிர்கள் வளர்கின்றன. இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கோழிகளின் முட்டைகளை உண்ணும் பொழுது, அவைகளின் மூலம் நம்முடம்பிற்கு ஃபாலிக் ஆசிட், கோலின் மற்றும் ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை கிடைக்கின்றன. இவை மூன்றும் நம்முடைய இதயம் மற்றும் இரத்த ஓட்ட அமைப்புகளுக்கு உதவுகின்றன.

4. ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள்:
இப்பிரிவின் கீழ் தனித்த ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து, ஒமேகா 3 கூட்டு ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து, மற்றும் ஒமேகா 6 கூட்டு ஹைட்ரஜன் சேராத கொழுப்புச்சத்து ஆகியவை அடங்கும். தனித்த ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்து ஆலிவ் எண்ணெயிலும், முந்திரி கொட்டைகளிலும், மணிலா கொட்டைகளிலும், ஆல்மண்ட் கொட்டைகளிலும் நிறைய இருக்கின்றது. மேலும் இந்தக் கொழுப்புச் சத்து ஆலிவ் எண்ணெயில் 75 % அளவிற்கு இருக்கின்றது. மேலும் ஹைட்ரஜன் சேராத இந்த தனித்த கொழுப்புச்சத்தை உண்ணும் பொழுது, ஹைட்ரஜன் சேர்ந்த கொழுப்புச் சத்துக்கள், மாற்றம் செய்யப்பட்ட கொழுப்புச் சத்துக்கள் ஆகியவற்றினால் விளைகின்ற உடல் நல பாதிப்புகள் இருப்பதில்லை. ஆகவே நாம் ஆலிவ் எண்ணெயை சமையலுக்கு சிறந்த எண்ணெயாக எடுத்துக் கொள்ளலாம்.
ஒமேகா 3 கூட்டு ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச்சத்தும் ஓர் ஆரோக்கிய மான கொழுப்புச் சத்தாகும். இந்தக் கொழுப்புச் சத்து பூசணி விதைகள், வால்நட் கொட்டைகள் மற்றும் சால்மன், சார்டின், டூனா மற்றும் மேக்ரல் ஆகிய மீன் வகைகளில் கிடைக்கின்ற எண்ணெயிலும் இருக்கின்றது. ஒமோக 3 கொழுப்பு அமிலங்கள் முட்டைக்கோஸ், ப்ராக்கோலி மற்றும் பார்ஸ்லி போன்ற தாவரங்களில் இருந்து கிடைக்கும். ஒமேகா 6 கூட்டு ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்கள் வால்நட் கொட்டைகளிலும் மற்றும் சூரியகாந்தி விதைகளிலும் கிடைக்கின்றன.
உடல் நலத்தாக்கம்: தனித்த ஹைட்ரஜன் கலப்பில்லாத கொழுப்புச் சத்துக்களும் அத்தியாவசிமான கொழுப்பு அமிலங்களும் நம்முடைய இதயம் மற்றும் ரத்த ஓட்ட ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகின்றன. உடம்பு இவற்றை தானே தயார் செய்து கொள்ள முடியாதபட்சத்தில் தாவர பொருட்கள் மற்றும் காய்கறிப் பொருட்களிலிருந்து இவற்றை நம் உடம்பு சேகரிக்கின்றது. இவை நம்முடைய இதயம் மற்றும் மூளையின் செயல்பாடு மற்றும் தசை வளர்ச்சி மற்றும் எலும்பு வளர்ச்சிக்கெல்லாம் உதவுகின்றன. அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் பிராணிகளிடமிருந்து கிடைக்கும் கொழுப்புச் சத்தை போல் நம் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவது இல்லை.

5. முழுதானியங்கள்:
இப்பிரிவின் கீழ் பார்லி, ஓட்ஸ் மற்றும் பதப்படுத்தப்படாத முழு அரிசி ஆகியவை அடங்கும். இவைகளிலிருந்து நமக்கு பி காம்பளக்ஸ் விட்டமின்கள், விட்டமின் உ, குரோமியம், மக்னீஷியம் போன்ற தாதுக்களும், செல்லுலோஸ் என்ற கரையாத நார்ச்சத்தும் கிடைக்கின்றன.
உடல் நலத்தாக்கம்: முழு ஓட்ஸ் தானியங்களில், 55 % கரைகின்ற நார்ச்சத்தும், 45 % கரையாத நார்ச்சத்தும் அடங்கி இருக்கின்றன. இவற்றை உட்கொள்ளும் பொழுது நம்முடைய ரத்தத்தில் குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறைகின்றது. மேலும் நமக்கு ரத்த அழுத்தமும் குறைகின்றது. வெள்ளை ரொட்டியில் உள்ள ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் நீக்கப்படுவதால், முழு தானியத்திலிருந்து செய்யப்பட்ட ரொட்டியை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் அந்த ரொட்டியில் நமக்கு வேண்டிய புரதச்சத்து மற்றும் விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து எல்லாம் அப்படியே இருக்கும். மேற்கூறிய 5 பயனுள்ள உணவு வகைகளும் எளிதில் ஜீரணம் ஆகக்கூடியவை. ஆகவே இவற்றை உட்கொள்ளும் பொழுது நம்முடைய ஜீரண சிஸ்டம் அதிக சிரமப்படாமல் வேலை செய்கின்றது.
பயனுள்ளவைகளாகக் கருதப்படும் உணவு வகைகள் எல்லாம் காரத்தன்மை கொண்டவை. அதே சமயத்தில் நம் உடம்பை சுத்தப்படுத்தி நம்முடைய எடையை குறைக்கும் தன்மை கொண்டவை. பயனற்ற உணவுகளாக கருதப்படுபவை எல்லாம் அமிலத்தன்மை கொண்டிருப்பவை. அதே சமயத்தில் நம்முடம்பில் வேண்டாத கழிவுகள் சேகரமாவதற்கும் எடை கூடுவதற்கும் காரணமாக இருப்பவை. நம்முடைய உடம்பின் செல்களுக்குள் சேகரமாகும் அமிலக் கழிவுகள் நம்முடைய செல்களின் சுவர்களை இறுக வைக்கின்றது. இப்படி இறுகிப் போவதால் செல்களால் ஊட்டச் சத்துக்களை ரத்த ஓட்டத்திலிருந்து எடுத்துக் கொள்ள முடியாமல் போகின்றது. இதனால் நம் உடம்பின் செல்கள் ஊட்டமின்றி பட்டினி கிடக்க நேரிடுகின்றது. இப்படி அமிலக் கழிவுகள் செல்களுக்குள் அதிகமாகச் சேர்வதால் நம்முடைய ஈரல், சிறுநீரகம் போன்றவைகள் பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு இருக்கின்றது.
பெரும்பாலானவர்கள் 80% அமிலத்தன்மை கொண்ட உணவுகளையும், 20% தான் காரத்தன்மைக் கொண்ட உணவுகளையும் சாப்பிடுகின்றார்கள். இதன் விளைவாக நம் உடம்பின் செயல்படும் திறன் நாளடைவில் குறைந்து கொண்டே போகின்றது. இந்த விகிதங்களை மாற்றி காரத்தன்மை கொண்ட உணவுகளை 80%ஆகவும், அமிலத் தன்மை கொண்ட உணவை 20%ஆகவும் நாம் மாற்ற வேண்டும். மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிடுவதை குறைக்கும் பொழுது அமில உணவுகளை உட்கொள்ளுவது குறைகின்றது. பச்சை காய்கறிகளை நிறைய உண்ணும் பொழுது காரத்தன்மை கொண்ட உணவுகள் நம் உடம்பில் அதிகம் சேருகின்றது.
நார்ச்சத்து: நார்ச்சத்து ஒரு பிரதான ஊட்டச்சத்தாகக் கருதப்படவில்லை. என்றாலும், 7 முக்கியமான ஊட்டச்சத்துக்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மேலும் குளுக்கோஸ் லெவலை குறைப்பதற்கு நார்ச்சத்து மிகவும் உதவுகின்றது. நார்ச்சத்து கரைவது, கரையாதது என்று இரு வகைப்படும்.
கரைகின்ற நார்ச்சத்து சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது ஏனென்றால் நம் உடம்பில் நிகழும் செறிமானத்தை அது நிதானப்படுத்துகின்றது. செறிமானம் நிதானப்படுவதால் சர்க்கரை நம் ரத்த ஓட்டத்தில் கலப்பதும் சீராக இருக்கின்றது. நம்முடைய சிறு குடலில் சேருகின்ற கெமிக்கல்களை இந்த நார்ச்சத்துக்கள் உறிஞ்சிக் கொள்வதால் இந்த கெமிக்கல்களிலிருந்து கொலஸ்ட்ரால் தயாரிக்கப்படுவது குறைகின்றது. கரைகின்ற நார்ச்சத்து வயிறு நிரம்பிவிட்ட உணர்வைக் கொடுப்பதால் நம்முடைய பசியும் அந்த அளவிற்கு குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஓட்ஸ், தவிடு மற்றும் சைலியம் தவிடு கரையும் நார்ச்சத்திற்கு சிறந்த மூலப்பொருட்கள் ஆகும். கரையாத நார்ச்சத்து சிறுகுடலில் உள்ள உணவுப் பிண்டத்திற்கு பருமன் சேர்க்கின்றது. அப்படிப் பருமன் சேர்ப்பதால் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு எளிதாக மலம் கழிக்க முடிகின்றது. முழுத்தானியங்கள், ஆப்பிள் தோல், மற்றும் அரிசித் தவிடு ஆகியவை கரையாத நார்ச்சத்திற்கு சிறந்த மூலப் பொருட்கள் ஆகும்.
சர்க்கரை, உப்பு, சாக்லேட் மற்றும் காபிக்கான மாற்றுப் பொருட்கள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள், சர்க்கரை,உப்பு, சாக்லேட் ஆகியவற்றிற்கான மாற்றுப் பொருட்கள் என்ன உட்கொள்வது என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சர்க்கரை:
இருபதாம் நூற்றாண்டின் பாதியிலேயே சர்க்கரையின் உபயோகம் ஏராளமாக அதிகரித்து விட்து. இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் அமெரிக்காவில் ஒரு தனி நபர் 5 பவுண்டு சர்க்கரைதான் ஓராண்டிற்கு உபயோகித்து வந்தார். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் பாதியில் இத்தனி நபர் சர்க்கரை உபயோகம் 130 பவுண்டாக அதிகரித்து விட்டது. இது 26 மடங்கு உபயோகம் அதிகரிப்பதைக் காட்டுகின்றது. பால் மற்றும் பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. ஆனால் உணவு தயாரிப்பாளர்கள் செயற்கையாக தாங்கள் தயாரிக்கும் எல்லா உணவுகளிலும் சர்க்கரையை சேர்க்கின்றார்கள். கார்ன் சிரப், குளுக்கோஸ், புருக்டோஸ், லாக்டோஸ், மால்டோஸ், சுக்ரோஸ் ஆகியவை எல்லாம் சர்க்கரையின் பல்வேறு வடிவங்களாகும்.
பதப்படுத்தபட்ட சர்க்கரை ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை விரைவில் ஏற்றுவதால், உணவு தயாரிப்பாளர்கள் இப்படி விரைவில் குளுக்கோஸின் அளவை ஏற்றாத செயற்கை இனிப்புகளைத் தயாரித்துள்ளார்கள். இந்த மாற்று இனிப்புப் பொருட்களால் உடல் நலத்திற்கு கெடுதல் வர வாய்ப்புள்ளது. இவற்றிற்கு பதிலாக நாம் சின்னமன், வனிலா, மிண்ட் ஆகியவற்றை சாப்பிடலாம். இவைகளில் இனிப்புச் சுவை இருக்கும். ஆனால் அதே சமயத்தில் இவை நம் உடம்பில் சர்க்கரையையோ, அல்லது கூடுதல் கலோரிகளையோ சேர்க்காது.
உப்பு:
உப்பு என்று நாம் அழைக்கும் சோடியம் குளோரைடு என்பது நம் உடம்பிற்கு மிகவும் அவசியமான ஒரு கெமிக்கல் ஆகும். நம்முடைய தற்போதைய உணவுப் பழக்க வழக்கங்கள் தேவைக்கதிகமாக நம்மை உப்பை சாப்பிட வைக்கின்றன. அதே சமயத்தில் தேவையான பொட்டாஸியம் போன்ற கெமிக்கல்களை உட்கொள்ளுவதை யும் குறைக்கின்றன. நாம் உப்பு உட்கொள்வதைக் குறைத்து, பொட்டாசியம் உட்கொள்ளுவதை அதிகரிக்க வேண்டும். நம் உடம்பில் ஒரு முறையான உப்பு மற்றும் பொட்டாசியம் விகிதம் இருக்க வேண்டும். விகிதம் அதிகமாக இருந்தால் செல்லுக்குள் உப்பு அதிகமாகத் தங்கிவிடும். அப்படித் தங்கும் பொழுது தண்ணீரும் அதிகமாக செல்லுக்குள் வந்து விடும். இதனால் செல் வீக்கமடைந்து வெடிக்க நேரிடும். கடலில் தயாராகும் உப்பு, இந்த உப்பு மற்றும் பொட்டாசியத்திற்கிடையே உள்ள விகிதத்தை சரியாகக் கொடுக்கின்றது. ஆகவே, நாம் கடல் உப்பை பயன்படுத்துவது நல்லது. அதே சமயத்தில் நாம் கேனில் விற்கப்படும் ஜுஸ் மற்றும் சூப் வகையறாக்களை உட்கொள்ளுவதைக் குறைப்பது நல்லது.
சாக்லேட்:
சாக்லேட்டில் கஃபின் என்ற கெமிக்கல் இருக்கின்றது. அதன் காரணமாக சாக்லேட் சாப்பிடும் பொழுது நமக்கு ஓர் உற்சாகம் கிடைக்கின்றது. இது நாளடைவில் நமக்கு ஒரு விடமுடியாத பழக்கமாக மாறலாம். வெள்ளை சாக்லேட் மற்றும் பால் சாக்லேட்டுகள் சுகர் மற்றும் கொழுப்புச் சத்து அதிகம் கொண்டவை. ஆனால் கறுப்பு நிறச் சாக்லேட் ஆன்டி ஆக்ஸைடண்ட் திறன் கொண்டது. ஆகவே நாம் பால் சாப்பிடுவதற்குப் பதிலாக கறுப்பு சாக்லேட் சாப்பிடுவது நல்லது.
காபி:
காபி தற்போது மிகவும் பிரபலமான பானமாக இருக்கின்றது. இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று கப்பிற்கு மேல் நாம் காபி குடிக்கும் பொழுது நம்முடைய இன்சுலின் அளவு அதிகமாகி அதன்மூலம் நம் உடம்பில் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ரெகுலராக நாம் குடிக்கின்ற காபியைவிட சிக்கோரி, வேர்கனன், பொடியாக்கி அதிலிருந்து தயாரிக்கப்படும் சிக்கோரி காபி மிகவும் நல்லது. சிக்கோரி காபியில் கஃபின் குறைவாக உள்ளது. அதே சமயத்தில் நம் ஈரலையும் பலப்படுத்தக் கூடியது. சோயா பீனிலிருந்து தயாரிக்கப்படும் சோயா காபியும் கஃபின் இல்லாமல் இருக்கின்றது. இயற்கையான முறையில் வளர்க்கப்படும் காபிச் செடிகளிலிருந்து தயாரிக்கப்படும் காபியை நாம் ரேஷி என்றழைக்கப்படும் காளானுடன் சாக்லேட் கலந்து சாப்பிட்டால் அது நம்முடம்பிற்கு மிகவும் நல்லது. மேலும் பச்சை நிற டீயில் கஃபின் குறைவாக உள்ளது என்பதால் ரெகுலர் காபியைவிட பச்சை நிற டீ நல்லது.
உணவு தயாரிப்பு:
நம் உடம்பிற்குத் தேவையான உணவுப் பொருட்களை நாம் சாப்பிடும் பொழுதும் நாம் சரியான முறையில் அதை சமைக்காவிட்டால் அதில் உள்ள ஊட்டச் சத்துக்கள் எல்லாம் வீணாகிப் போகின்றன. உதாரணமாக ஆப்பிளை நாம் பச்சையாக சாப்பிடும் பொழுது அதில் உள்ள விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்தெல்லாம் நமக்கு வீணாகாமல் அப்படியே கிடைக்கின்றன. ஆனால் அதை நம் பழச்சாறாக மாற்றும் பொழுது, அதிலுள்ள நார்ச்சத்தையெல்லாம் நாம் இழக்க நேரிடுகின்றது. தவறான சமையலின் காரணமாக மற்ற உணவு வகைகளும் இம்மாதிரியே விட்டமின்களையும், என்சைம்களையும், தாதுப் பொருட்களையும் இழக்க நேரிடலாம். ஆகவே இம்மாதிரி இழப்புகள் நேராமல் இருக்கும் பொருட்டு நம் சமையல் சம்மந்தமான சில முக்கிய விதிமுறைகளை பார்ப்பது நல்லது.
காய்கறிகளை அதிக வெப்பத்தில் வேக வைக்கும் பொழுது அவற்றில் இருக்கும் விட்டமின் சி மற்றும் பிகாம்ளக்ஸ் விட்டமின்கள் 30 % அளவிற்கு வீணாகின்றன. கொதிக்க வைத்தால் 75 % அளவிற்கு விட்டமின்கள் பறிபோகின்றன. இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் காய்கறிகள் தண்ணீரில் மூழ்கிவிடாத அளவிற்கு மட்டத்தைக் குறைத்துக் கொண்டு வேக வைக்க வேண்டும். காய்கறிகள் நிறம் மாறி வலுவிழந்து குழம்புபோல் மாறியிருந்தால் அவை வீணாகிவிட்டன என்று அர்த்தம். பாத்திரத்திலிருந்து எடுக்கும் பொழுது அவற்றின் இயற்கையான நிறத்துடன் நொறுங்காமல் இருந்தால்தான் அவை முறையாக சமைக்கப்பட்டுள்ளன என்று அர்த்தம். கறி மற்றும் மீன் வகைகள் அதிக சூடு வைத்து வறுக்கும் பொழுது அவை நம் உடல் நலத்தை பாதிக்கும் பொருட்களாக மாறுகின்றன. அளவுக்கு மீறிய சூடு வைக்கும் பொழுது கறி மற்றும் மீன் வகைகளிலுள்ள புரதச்சத்தும்,கொழுப்புச் சத்தும் அவற்றின் இயற்கை தன்மையை இழந்து சர்க்கரை நோயாளிகளுடைய ரத்தக் குழாய்களை பாதிக்கும் தன்மை பெறுகின்றன. இத்தகைய பாதிப்பு வரக் கூடாது என்றால் மெலிந்த கறித்துண்டுகளைக் குறைந்த வெப்பத்தில் அதிக நேரத்திற்கு நாம் சமைத்துக் கொள்வது நல்லது. மேலும் கறியை வறுத்து எடுக்கும் பொழுது ஆலிவ் ஆயிலை நாம் தடவி விட்டோம் என்றால் வறுத்த கறி உடன் ஒட்டிக் கொள்ளாமல் தடுக்கலாம்.
எண்ணெயை போட்டு சமைக்கும் பொழுது, எண்ணை மிகவும் சூடு ஏறினாலும் சமையலை அது பாதிக்கும். வேகவைத்த காய்கறிகளின் மேல் பச்சை எண்ணெயை விட்டுக் கொள்வது நல்லது. சமையலுக்கு ஆலிவ் ஆயிலை பயன் படுத்துவது எப்பொழுதும் நல்லது. அதே எண்ணெயை மீண்டும் மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தி சூடு ஏற்றிக் கொண்டு இருந்தால், அந்த எண்ணெயின் தன்மையே மாறி புற்று நோயை உண்டாக்கக்கூடிய வேண்டாத எண்ணெயாக மாறிவிடுகின்றது. ஆகவே எண்ணெயில் சமைக்கும் பொழுது சூட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது. சோயாபீன் எண்ணெய் சூடேறினால் கெட்டுப் போகும் தன்மைக் கொண்டது. ஆகவே அதற்குப் பதிலாக சூட்டைத் தாங்கக் கூடிய தேங்காய் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது நல்லது.
மைக்ரோவேவ் ஓவனில் குளிர்ந்து போன பண்டங்களை சூடேற்றுவதற்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமையலுக்கு அதை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் அந்த மைக்ரோவேவ் கதிர்கள் முக்கியமான என்சைம்களை அழித்துவிடக் கூடியவை.
பழச்சாறு: தினமும் 6 முதல் 9 கப் காய்கறிகளையும் பழங்களையும் பச்சையாக சாப்பிடு வது பிடிக்கவில்லை என்றால் பழச்சாறாக மாற்றி சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழச்சாற்றைவிட காய்கறிகள் சாற்றை அதிகம் சாப்பிடுவது நல்லது. பழச்சாறுகள் நம் உடம்பில் காரத்தன்மையை சேர்க்கக் கூடியவை. இப்படி உடம்பில் காரத்தன்மை சேரும் பொழுது அமிலத்தன்மை சேருவது குறைக்கப்படுகின்றது. பச்சைக் காய்கறிகளில் உள்ள குளோரோபில் நம்முடைய சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகின்றது. ஊட்டச்சத்து பொடிகளை மாத்திரைகளாக உட்கொள்ளாமல் நாம் காய்கறிச் சாற்றோடு கலந்து உட்கொள்ளும் பொழுது அவை வேகமாக ஜீரணிக்கப்படுகின்றன.
பழச்சாறுகளில் ஜீரணத்திற்கு உதவக்கூடிய என்சைம்கள் நிறைய உள்ளன. இதன் பலனாக, பழச்சாறுகளை நம் உடம்பு சிரமமில்லாமல் ஜீரணித்துக் கொள்கின்றது. மேலும் பழச்சாற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கும். உதாரணமாக நாம் இரண்டு கப் கேரட் ஜீஸ் சாப்பிடும் பொழுது அது ஒரு பவுண்ட் பச்சை கேரட் சாப்பிடுவதற்குச் சமமாகின்றது.
பச்சைக் காய்கறிச் சாறுகள் ஆன்டிஆக்சிடண்ட் மற்றும் ஆன்டிபயோடிக் போன்ற மருத்துவச் சக்தி வாய்ந்த ஊட்டச் சத்துக்கள் கொண்டுள்ளன. கேரட், செலரி, லெட்டூஸ் ஆகியவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் சர்க்கரை நோயாளிகளுக்கு உதவக்கூடியவை. ப்ராக்கோலியில் உள்ள குரோமியம் இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது. பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியிலிருந்து பெறப்படும் பழச்சாறுகள் ஆன்டிபயோடிக் தன்மைக் கொண்டவை. வெள்ளரிக்காய் மற்றும் முட்டைக் கோஸிலிருந்து எடுக்கப்படும் சாறு ரத்த அழுத்தம் மற்றும் அசிடிடியை குறைக்கும் தன்மை கொண்டவை.

உணவின் தரம்:
இயற்கை உணவு மற்றும் செயற்கை உணவு: பூச்சி மருந்து அடிக்காமலும், கெமிக்கல் உரங்களை பயன்படுத்தாமலும் வளர்க்கப்படும் தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவு இயற்கை உணவாகக் கருதப்படும். பூச்சி மருந்து மற்றும் கெமிக்கல் உரங்களுடைய உதவியுடன் வளர்க்கப்படும் தாவரங்களிலிருந்து கிடைக்கும் உணவைவிட, இயற்கையாக தயாரிக்கப்படும் உணவில்தான் அதிக விட்டமின்களும், தாதுக்களும் உள்ளன என்று நிரூபணமாகி உள்ளது. இயற்கை உணவை வாங்குவது செலவு கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது ஒத்துவராது என்றால் செயற்கையாக வளர்க்கப்பட்ட பழம், காய்கறிகளை வாங்குபவர்கள் அவற்றை நன்றாகத் தண்ணீரில் கழுவிவிடுவது நல்லதாகும்.
கேன்களில் விற்கப்படும் பழங்கள் அதிக சர்க்கரை கொண்டிருக்கும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. இம்மாதிரி கேன்களில் விற்கப்படும் காய்கறிகள் மற்றும் சூப் வகைகள் ஆகியவற்றில் சோடியம் அதிகமாக இருக்குமென்பதால் இவற்றையும் தவிர்ப்பது நல்லதாகும்.
உணவுப்பண்டங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள்:
கொழுப்புச் சத்து உடம்பில் அதிகம் சேருவது கெடுதல் என்பது ஒரு பக்கம் உண்மை என்றாலும் அதற்காகக் கொழுப்புச்சத்தை உணவிலிருந்து முற்றிலும் அகற்றுவதும் தவறாகும். தகுந்த அளவில் கொழுப்புச்சத்தை நாம் உட்கொள்வது உடம்பிற்கு நல்லது. நல்ல கொழுப்புச்சத்தை நாம் மீன்வகைகள், தாவர எண்ணெய் கள் மற்றும் தானியங்கள் கொட்டைகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
கொலஸ்ட்ரால் அதிகமாக உடம்பில் சேர்ந்தால் நம் உடம்பிற்கு நல்லது இல்லை என்றாலும் சரியான அளவில் சாப்பிடும் பொழுது அது நமக்கு நல்லதுதான் செய்கிறது. கொலஸ்ட்ரால் நம்முடைய ஈரலில் தயாரிக்கப்படுகிறது. நம்முடைய உடம்பில் உள்ள செல்களுக்கு அது ஒரு திண்மை வழங்குகிறது. கொலஸ்ட்ரால் கூடுதலாக இருக்கும் பொழுது நம்முடைய ரத்தக் குழாய்களை அடைக்கிறது என்றாலும் அளவோடு அது இருக்கும் பொழுது இதயத்தை பாதிக்கக்கூடிய தனித்து சுதந்திரமாக இயங்கும்  ஆக்ஸிஜன் கூறுகளின் பாதிப்பிலிருந்து காப்பாற்றுகிறது.
கொலஸ்ட்ராலை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்தினால் நிறைய பேர் முட்டையை முழுவதுமாகத் தவிர்க்கிறார்கள். ஆனால் இது ஒரு தவறான அணுகு முறையாகும். ஏனென்றால் முட்டையில் நிறைய புரதச்சத்துள்ளது. இதில் சோளின் ஒமேகா 3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஃபாலிக் ஆசிட் ஆகியவை கிடைக்கின்றன. இவையெல்லாம் நம்முடைய இதயத்திற்கு நல்லதாகும். முட்டையில் 200 மி.கி கொலஸ்ட்ரால் இருக்கிறது. அதுபோக 4 மி.கி. கொழுப்புச்சத்துள்ளது. இக்கொழுப்புச்சத்தில் 2.4 கிராம் தனித்த கலப்பில்லாத கொழுப்புச் சத்தாகும். 0.6 கிராம் அளவிற்கு கூட்டுக் கலப்பில்லாத கொழுப்புச் சத்தும் உள்ளது. இவையிரண்டும் நல்ல வகையான கொழுப்புச் சத்தாகும். ஹைட்ரஜன் கலந்துள்ள தவிர்க்கப்பட வேண்டிய கொழுப்புச்சத்து முட்டையில் 1.6 கிராம் அளவிற்குத்தான் உள்ளது. முட்டையில் உள்ள மஞ்சளை நாம் விலக்கினோம் என்றால் அதன் வழியே நாம் கொலஸ்ட்ராலை தவிர்த்து விடலாம். முட்டையிலுள்ள வெள்ளை பாகத்தில் மஞ்சளில் இருப்பதைவிட அதிக புரதச்சத்துள்ளது. மேலும் அதே சமயத்தில் வெள்ளைப் பாகத்தில் கொலஸ்ட்ரால் எதுவுமேயில்லை.
கொழுப்புச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதைப் பற்றி மக்களிடையே ஒரு அச்சம் ஏற்பட்டிருப்பதைப் போல் கார்போஹைட்ரேட் மாவுச் சத்துள்ள உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது பற்றியும் அச்சம் எழுந்துள்ளது. மாவுச் சத்தை அறவே தவிர்ப்பது என்பதும் சரியில்லை. தேவையான அளவிற்கு நாம் காய்கறிகள், தானியங்கள், பழவகைகளை சாப்பிடவில்லை என்றால் நம் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை கிடைக்காது போய்விடும். இவை பற்றாக்குறையானால் நாளடைவில் உடம்பில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமானவை என்று வர்ணிக்கப்படும் உணவுகள்:
தற்பொழுது மார்க்கெட்டில் நிறைய உணவுப் பண்டங்கள் ஆரோக்கிய மானவை என்று விளம்பரப்படுத்தப்படுகின்றன. இப்படிச் சொல்லப்படுகின்ற பல உணவு வகைகள் உண்மையில் உடம்பிற்கு நல்லவையில்லை. விளம்பரதாரர்கள் நம்மை அப்படி நம்ப வைக்கிறார்கள். கீழ்கண்ட உணவுப் பண்டங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.
1. செயற்கை இனிப்புகள்: இந்த இனிப்புகளுடைய கலோரி மதிப்புகள் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இவற்றை ஆர்வமாக உட்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த இனிப்புகள் நம்முடைய பசியைத் தூண்டிவிடுகின்றன. இந்த வகை இனிப்புகள் பல சாதாரண டேபிள் சர்க்கரையுடன் குளோரினை கலப்பதால் உண்டாக்கப்படுகின்றன. பிர்ச் மரத்தின் பட்டையில் இருந்து எடுக்கப்படும் சைலீட்டால் என்ற இயற்கையான சர்க்கரை இந்த செயற்கை இனிப்புகளைவிட நம் உடம்பிற்கு நல்லது. ஏனென்றால் சைலீட்டால் சாப்பிடும் பொழுது நம் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு வேகமாக ஏறுவதில்லை.
2. அஸ்பிரின்: டாக்டர்கள் வலியை குறைப்பதற்கும், இதயத்தின் பாதுகாப் பிற்கும் நம்மை அஸ்பிரின் சாப்பிடச் சொல்கிறார்கள். ஆனால் அஸ்பிரின் சாப்பிடுவதால் நம்முடைய வயிறு புண்ணாகி வெந்து போகக்கூடிய அபாயம் உள்ளது. ஆகவே அஸ்பிரினுக்குப் பதிலாக மீன்எண்ணெய் மற்றும் இஞ்சியைச் சாப்பிட்டால் நாம் விரும்பும் பாதுகாப்பு நம் இதயத்திற்குக் கிடைக்கும்.
3. பாட்டில் ஜுஸ்: இந்தப் பழச்சாறுகளில் சர்க்கரை மிகவும் அதிகமாக இருப்பதால் பழச்சாறை சாப்பிட்டவுடன் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக ஏறுகிறது. பதப்படுத்தப்பட்ட பழங்களிலிருந்துதான் இந்த பாட்டில் ஜுஸ் செய்யப்படுகிறது. இப்படி செய்யும் பொழுது இந்தப் பழங்களிலுள்ள விட்டமின்கள் தாதுக்கள் மற்றும் என்சைம்கள் ஆகியவையெல்லாம் வீணாகிப் போகின்றன.
4. பாட்டில் குடிநீர்: மினரல் வாட்டர் பாட்டில் என்று விற்கப்படுகின்ற இந்த குடிநீர் பாட்டில்கள் இவைகளை விற்கும் கம்பெனிகள் சொல்வதைப் போல கிருமிகள் இல்லாமல் இருக்கும் என்று நிச்சயம் சொல்ல முடியாது. ஆகவே அவரவர் வீட்டில் காய்ச்சிய வடிகட்டி பெறப்படும் குடிநீரை குடிப்பது நல்லது.
5. கால்சீயம் மாத்திரைகள்: கால்சீயம் கார்பனேட் கலந்துள்ள இந்த மாத்திரைகள் எலும்பு மெலிவு நோயை தவிர்க்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை. ஏனென்றால் இந்த மாத்திரைகளில் காணப்படும் கால்சீயம் நாளைடைவில் நம் உடம்பில் சேர்ந்து சிறுநீரகத்தில் கல்லாக மாற வாய்ப்புள்ளது. நம்முடைய வழக்கமான உணவிலேயே நிறைய கால்சியம் இருப்பதால் நாம் இப்படி செயற்கை கால்சியம் மாத்திரைகளைச் சாப்பிடத் தேவையில்லை.
6. சீரியல்: கடைகளில் விற்கப்படும் ஓட்ஸ் சீரியல் போன்றவைகளெல்லாம் மிகவும் அதிகமாகப் பதப்படுத்தப்பட்டவையாகும். அதே சமயத்தில் செயற்கை விட்டமின்களும் அதில் கலந்துள்ளன. மேலும் இப்படிப்பட்ட சீரியல்களில் சர்க்கரை அதிகமாகவும், இயற்கை விட்டமின்களும், நார்ச்சத்துக்களும் குறைவாகவும் இருக்கும். ஆகவே உண்மையிலேயே ஊட்டம் மிக்க காலை உணவு சாப்பிட விரும்புகிறவர்கள் இந்த சீரியல்களுக்குப் பதிலாக முழுமையான தானியங்களால் செய்யப்பட்ட சீரியல்களை உணவாக உட்கொள்ள வேண்டும்.
7. பால்: பால் மூலம் நமக்கு நிறைய கால்ஷியம் கிடைக்கிறது என்றாலும் நாம் பாலை அதிகமாக உட்கொண்டால் நம் உடம்பில் மக்னீஷியம் சேருவது தடைப்படும். அது நமக்கு நல்லதில்லை. ஏனெனில் மக்னீஷியம் நம் உடம்பிற்குத் தேவையான ஒரு ஊட்டமாகும். sterilized செய்யும் பொழுது பாலில் உள்ள கேசின் என்ற பால் புரோட்டீன் கெட்டுவிடுகிறது. அது கெடுவதால் உடம்பிற்குத் தேவையான என்ஸைம்கள் மற்றும் விட்டமின்கள் ஆ-6 மற்றும் ஆ-12 ஆகியவற்றையும் சேர்த்துக் கெடுக்கிறது. மேலும் sterilized செய்யும் பொழுது பாலிலுள்ள நல்ல பாக்டீரியாக்களும் அழிந்து போகின்றன. ஆகையால் நமக்கு கால்ஷியம் வேண்டுமென்றால் பாலுக்குப் பதிலாக சார்டின் மீன்களிலிருந்தும், கொட்டைகளிலிருந்தும் பெற்றுக் கொள்வது நல்லது.
8. சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு: இந்த உணவுப் பண்டங்களில் சர்க்கரை குறைவாக இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் நம் உடம்பைப் பாதிக்கக்கூடிய கார்ன்ஸிரப், ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் மற்றும் சோடியம் ஆகியவை கலந்திருக்கும். உண்மையில் சொல்லப்போனால் சர்க்கரை நோயாளிகளுக்கென்று தனிப்பட்ட உணவுப் பண்டங்கள் கிடையாது. உணவுப்பண்டங்களை விற்கின்ற கம்பெனிகள் மக்களை கவருவதற்காக இப்படி போலியான விளம்பரங்களை செய்கின்றன.

9. மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, கொலஸ்ட்ரால் குறைந்த பண்டங்கள்:
இவை எல்லாமே மிகவும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களாக இருப்பதால் ஊட்டச்சத்து குறைவாகவும், நம் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடிய கெமிக்கல் அதிகம் கொண்டதாகவும் இருக்கும். குறைந்த மாவுச்சத்து என்றால் கலோரியும் குறைந்து விட்டதாக அர்த்தமில்லை. கொழுப்புச்சத்து குறைந்த பண்டங்கள் அதே சமயத்தில் சர்க்கரை அதிகமாகக் கொண்டிருப்பதால் இந்த சர்க்கரை நம்முடைய உடம்பில் கொழுப்பாக மாற்றப்படுவதால் இதுவும் நல்லதில்லை என்றாகிறது. இவற்றை உட்கொள்ளும் பொழுது இவை கூடுதலாக இன்சுலின் சுரப்பதற்குக் காரணமாகின்றன.
10. மாற்று கொழுப்புச்சத்து இல்லாத உணவுப் பண்டங்கள்: சில உணவுப் பண்டங்களில் இப்படியொரு முத்திரை குத்தி இருந்தாலும் அதனால் மாற்று கொழுப்புச் சத்து இல்லையென்றோ, ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் இல்லை என்றோ அர்த்தமில்லை. ஒரு கரண்டி அளவிற்கு எடுத்துக் கொண்டால் அதில் 0.4 அளவிற்கு மாற்று கொழுப்புச் சத்து இருந்தால்தான் நாம் உண்மையில் மாற்று கொழுப்புச் சத்து இல்லை என்று சொல்லலாம். கச்ஞிடுடிணஞ் உள்ளிருக்கும் உணவுப் பண்டங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் தான் ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் இருக்கின்றதா இல்லையா என்று தெரியும்.
11. பீட்ஸா: பீட்ஸா உலகம் முழுவதும் பாப்புலராகி விட்டது. ஆனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தானது. ஏனென்றால் பீட்ஸாவிலுள்ள இடஞுஞுண்ஞுஇல் ஹைட்ரஜன் கலந்து கொழுப்புச் சத்து இருக்கிறது. அதிலுள்ள கறியிலுமிருக்கிறது. அதிலுள்ள கோதுமையில் மாவுச்சத்தும் அதிகமாக உள்ளது. ஆகவே, அசைவ பீட்ஸாவைவிட சைவ பீட்ஸாவை சாப்பிடுவதே நல்லது.
12. சோடா: சோடா பாப்புலரான பானமாக இருந்தாலும் அதில் நிறைய சர்க்கரை இருக்கிறது. மேலும் அதில் பாஸ்பரஸ் உள்ளது. இந்த பாஸ்பரஸ் கால்சியம் உடம்பில் சேர்வதைத் தடுக்கிறது. இதன் காரணமாக உடம்பில் அமிலத் தன்மை அதிகமாகிறது. 12 அவுன்ஸ் சோடா பாட்டிலில் 10 டீஸ்பூன் அளவிற்காவது சர்க்கரையிருக்கும். அது 120 கலோரிக்குச் சமமாகும்.
13. சர்க்கரையில்லாத தின்பண்டங்கள்: சர்க்கரையில்லாத திண்பண்டங்களில் ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் மற்றும் பசியைத் தூண்டும் மறைமுகமான சர்க்கரை பொருட்கள் உள்ளன. இவற்றின் காரணமாக நம் உடலில் கூடுதல் கொழுப்புச் சத்து சேருகிறது.
14. விட்டமின் மாத்திரைகள்: இந்த மாத்திரைகளில் விட்டமின் அளவு குறைவாகவும், பிறசத்துகள் அதிகமாகவுமிருக்கும். ஆகவே, இவற்றின் மூலம் நமக்குக் கிடைக்கும் விட்டமின் ஊட்டச்சத்து குறைவாகத்தானிருக்கும். ஆகவே இவற்றிற்குப் பதிலாக இயற்கையாக நமக்கு விட்டமின் தரக்கூடிய உணவு பண்டங்களைச் சாப்பிடுவது நல்லது.
15. தயிர்: இயற்கையான தயிரை சாப்பிடுவது நல்லது.
ஊட்டத்திற்காகச் சாப்பிடும் கூடுதல் பண்டங்கள்
இவற்றை சாப்பிடுகின்றவர்களுடைய அடிப்படை உணவு ஊட்டம் மிக்கதாகவும் அவர் நன்றாக உடற்பயிற்சி செய்பவராகவும், இருந்தால்தான் இந்தக் கூடுதல் தின்பண்டங்கள் உதவியாக இருக்கும். அடிப்படை ஊட்டம் போதுமானதாக இல்லாத பொழுது இந்தக் கூடுதல் தின்பண்டங்களால் பயனில்லை.
ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்தால் அவர் முதலில் அந்த நோயை எதிர்க்கக்கூடிய சக்தியைக் கொடுக்கின்ற உணவை உட்கொள்வது நல்லது. அதற்கும் மேல் கூடுதலாக ஊட்டமயமான தின்பண்டங்களை சாப்பிட்டால் பலனிருக்கும். பொதுவாகவே நம்முடைய பிரதான உணவு ஊட்டமயமானதாக இருந்தால் நமக்கு வேண்டிய விட்டமின்களும், தாதுக்களும் அதிலேயே நிறைய கிடைக்கின்றது. அப்பட்சத்தில் நாம் கூடுதலாக சாப்பிடவும் தேவையில்லாமல் போகிறது.
உணவு விருப்பம்
சர்க்கரை நோயாளிகள் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்ன வென்றால் நிறைய கெமிக்கல்ஸ் நிறைந்த மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடுவதால் நமக்குத் தேவையில்லாமல் பசி எடுக்கிறது. இந்த கூடுதல் பசியை அவர்கள் தவிர்க்க வேண்டும். இந்தக் கூடுதல் பசி எப்படி உண்டாகிறது என்று பார்ப்போம். ஹார்மோன்களுடைய நார்மல் பேலன்ஸ் கெட்டுப் போவதால் இந்த கூடுதல் பசி வருகிறது. உதாரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது நோயாளிக்கு பசி எடுக்கிறது. இந்தப் பசியை தவிர்ப்பதற்காக அவர் கூடுதலாக சர்க்கரை சாப்பிடுகிறார். இதன் காரணமாக தற்காலிகமாக அவருடைய ரத்தத்தில் சக்தி அதிகரிக்கிறது. ஆனால் சிறிது நேரத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது மீண்டும் எனர்ஜி லெவல் குறைகிறது. அவர் மீண்டும் சர்க்கரை சாப்பிட்டால் மீண்டும் இம்மாதிரியேதான் நிகழும். அப்பட்சத்தில் இதற்கு முடிவு இல்லாமல் போகிறது. ஆகவே இதைத் தவிர்க்க வேண்டுமென்றால் நோயாளி நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஒமேகா3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் மிகுந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடுவது நல்லது.
தேவையில்லாத பசி எடுக்கிறதென்றால் நம் உடம்பிற்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதற்குக் கிடைக்கவில்லை என்று அர்த்தமாகும். உடம்பிற்குத் தேவையானது விட்டமின்களும் தாதுக்களும் என்று புரிந்து கொள்ளாமல் நோயாளி கூடுதலாக மாவுச் சத்து மிகுந்த பண்டங்களைச் சாப்பிட்டால் உடம்பு வழங்கும் சிக்னலை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றாகிறது. அதனால் இந்தப் பசி மீண்டும் மீண்டும் திரும்ப வருகிறது. இந்தப் பசி இரு வகையானது. 1.உணர்வு மயமான பசி, 2. உடல் ரீதியான பசி.
1. உணர்வுமயமான பசி: நாம் சர்க்கரையும், கொழுப்புச் சத்தும் மிகுந்த உணவுகளைச் சாப்பிடும் பொழுது நம் உடம்பில் செரடோனின் என்ற ஹார்மோன் இருக்கிறது. அது சுரக்கும் பொழுது நமக்கு சந்தோஷம் அதிகரிக்கிறது. இதனால்தான் வருத்தமாக இருப்பவர்கள் அந்த நேரம் ஐஸ் கிரீம் சாப்பிடுகிறார்கள். இப்படி ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்குப் பதிலாக இந்த வருத்தத்திலிருந்து விடுபடுவதற்காக நாம் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது யாரேனும் நண்பரோடு பேசலாம். இப்படி செய்வதாலும் வருத்தம் குறைவதற்கு வாய்ப்புண்டு.
பண்டிகை நாட்களிலும், கொண்டாட்டங்கள் நிகழும் நாட்களிலும் மக்கள் அதிகமாகச் சாப்பிடுவதுண்டு. இதற்குப் பரிகாரமாக பண்டிகை நாட்களுக்கு முன்பே 5 நாட்களுக்கு நல்ல சாப்பாட்டை நிறைய சாப்பிட வேண்டும். அப்படி செய்யும் பொழுது பண்டிகை நாளன்று அதிகமாக சாப்பிட முடியாது. மேலும் பண்டிகை நாளுக்கு அடுத்த நாளும் நார்ச்சத்து மிகுந்த உணவுப் பண்டங்களை அதிகம் சாப்பிட்டு, அதே சமயத்தில் நிறைய தண்ணீரும் குடித்தால், பண்டிகையன்று சாப்பிட்டதெல்லாம் சீக்கிரம் வெளியேறிவிடும்.
2. உடல் ரீதியான பசி: ஒருவருடைய ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது சர்க்கரை மிகுந்த உணவுப் பண்டங்களைச் சாப்பிடத் தூண்டுகிறது. இதனால் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் வேகமாக ஏறுகிறது. ஆனால் எவ்வளவு வேகமாக ஏறுகிறதோ அதே வேகத்தில் பின்னர் இறங்கியும் விடுகிறது. அதற்குப் பரிகாரமாக நிறைய நார்ச்சத்தையும் ஒமேகா3 அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களையும், ப்ராக்கோலி மற்றும் பழவகைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழச்சாறுகளை குடிப்பதற்குப் பதிலாக காய்கறி சாற்றை சாப்பிடுவது நல்லது.

__._,_.___
 
 
.

__,_._,___

Friday, April 27, 2012

வெள்ளைப்படுதா? உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்துங்க!

வெள்ளைப்படுதா? உடல் உஷ்ணத்தை கட்டுப்படுத்துங்க!

பெண்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கும் அம்சம் வெள்ளைப்படுதல். இதனால் மன அழுத்தமும், வேறு எந்த விசயத்திலும் கவனம் செலுத்த முடிவதில்லை. உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் இந்த வெள்ளைப்படுதலுக்கு இயற்கையிலே மருந்திருக்கிறது என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப் படுதல் இருக்கும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும். அதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும். சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.

அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது. 

இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

தலைவலி

வெள்ளைப் படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல். இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை உண்டாதல். வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல். சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறும் என்கின்றனர் மருத்துவர்கள்

உஷ்ணமான உணவு

வெள்ளைப்படுதலை தவிர்க்க உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

எண்ணெய் தேய்ங்க

அதிக காரம், புளிப்பு, உப்பு இவற்றை குறைக்க வேண்டும்.உணவில் வெண்ணெய், பால், மோர் போன்ற உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடல் சூட்டை குறைக்க தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இது மனது தொடர்பான விசயம் என்பதால் பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

மணத்தக்காளி சூப்

இந்த வெள்ளைப் படுதல் நோயை குணப்படுத்த வீட்டிலே மருந்துள்ளன. மணத்தக்காளி கீரை சூப் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. மணத்தக்காளியுடன், பூண்டு, மிளகு, சின்னவெங்காயம், சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் உஷ்ணம் குறையும், வெள்ளைப்படுதல் குணமாகும்.

அருகம்புல்

ஓரிதழ் தாமரை இலைகளை நன்கு நீர்விட்டு அலசி அரைத்து எலுமிச்சம் பழம் அளவு உருண்டை எடுத்து காய்ச்சாத பசும் பால் அல்லது வெள்ளாட்டுப் பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் எளிதில் குணமாகும்.

அருகம்புல்லை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 4 குவளை நீரில் கொதிக்க வைத்து அது நன்கு வற்றிய உடன் அதனுடன் மிளகுத்தூள் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

இதனை முறையாக செய்து அருந்தினால், வெள்ளை நோயின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்

Wednesday, April 25, 2012

நமது அழைப்புப்பணி




 

Post image for நமது அழைப்புப்பணி

அல்லாஹ்வின் மார்க்கத்தை பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அல்ஹம்துலில்லாஹ் இன்று எல்லோரிடமும் பரவலாக காணப்படுகிறது. தனி நபர்களாகவும்   பல குழுக்களாகவும் நாம் இந்த இஸ்லாமிய அழைப்புப்பணியை செய்து வருகிறோம். ஆனால்   அன்று சஹாபாக்கள் காலத்தில் இஸ்லாம் பரவியது போல இன்று பரவுவதில்லை. அன்று மக்களை இஸ்லாம் ஈர்த்தது போல் இன்று ஈர்க்கவில்லை. இஸ்லாம் ஏனைய மார்க்கங்களைப் போல இடைச் செருகல்களுக்கும்   மாற்றத்திற்கும் ஆட்பட்டுவிட்டதா என்றால் அதுவும் இல்லை. பிறகு இதற்கு காரணம் என்ன?

இஸ்லாம் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டிலேயே அன்றைய நிலப்பரப்பில் மூன்றில் இருபங்கை தன்வயப்படுத்தியது. கொள்கையிலும்   வணக்க வழிபாடுகளிலும் எவ்வித மாறுதல்களுக்கும் உட்படாத அதே இஸ்லாம் தான் இன்றும் இருக்கிறது. இத்தனைக்கும் அன்றைய காலத்தில்   டிவி   ரேடியோ   பத்திரிக்கை   இன்டர்நெட் போன்ற எவ்வித தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லை. அப்படியென்றால் வேறெங்கோ எங்கோ கோளாறு இருக்கிறது. ஆமாம் நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதில் தான் கோளாறு செய்கிறோம். நாம் எதை இஸ்லாம் என்று மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறோம். எதனை மையப்படுத்தி இஸ்லாமை மக்களிடம் கொண்டு போகிறோம் என்பதை கவனமாக ஆராய வேண்டும்.

உலகில் காணப்படும் சமயங்களோடு பத்தோடு பதினொன்றாக இருக்கட்டும் என்றெண்ணி அல்லாஹ் இஸ்லாமை இறக்கவில்லை. அனைத்து மார்க்கங்களைக் காட்டிலும் மேலோங்க வேண்டும் என்பதற்காக இறக்கி வைத்தான். ஆனால்   இன்று உலகில் உள்ள மதங்களில் இஸ்லாமும் ஒன்று என்கிற நிலைமைதான் உள்ளது.

1. நமது மக்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆதாரமாகக் கொண்டு இதுவே உண்மையான மார்க்கம்   அறிவியல் பூர்வமான மார்க்கம் என்று இஸ்லாமை அறிமுகப்படுத்துகிறார்கள்.

2. யாரேனும் பிரபலங்கள் இஸ்லாமை தழுவினால் அவர்களின் புகழை பெரிதுபடுத்தி இஸ்லாமை சரியான மார்க்கம் என்று சித்தரிக்க முயல்கின்றனர்.

3. அல்லது பிரபலமானவர்களின் இஸ்லாமைப் பற்றிய அபிப்பிராயங்கள் அவர்களது பேட்டிகள்   பாராட்டுகள்   கருத்துகளை முன் வைத்து இஸ்லாமை உயர்த்திக் காட்ட முற்படுகின்றனர்.

4. இஸ்லாமின் அழகான வழிபாடுகளையும் அதன் அழகான வழிமுறைகளையும் விளம்பரப்படுத்தி அதன் வாயிலாக இஸ்லாமை மற்றவர்களுக்கு பிரச்சாரம் செய்கின்றனர்.

மேற்கண்ட இந்த நான்கு வகையான வழிமுறைகளை கையாண்டே இன்று உலகம் முழுவதும் இஸ்லாம் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இது தவிர இன்னும் சிலர் இஸ்லாமின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கும்   ஆட்சேபணைகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்கிறார்கள்.

குர்ஆன் வசனங்களை இறைவசனங்கள் என்று மெய்ப்பிக்க கடந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் குர்ஆன் வசனங்களோடு ஒத்ததாக அமைந்துள்ளமையை காண்பிக்கின்றனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டவை இன்று இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் ஆராய்ச்சி செய்து மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே சாதாரணமாக ஒரு மனிதர் இதைக் கூறியிருக்க முடியாது. முக்காலமும் அறிந்த இறைவனே இதை கூறியிருக்க முடியும். குர்ஆன் இறைவன் வாக்கேயாகும் என்று நிரூபிக்கிறோம். உண்மையில் கடந்த நூற்றான்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல அறிவியல் உண்மைகள் குர்ஆனில் சொல்லப்பட்டவையே. ஆனால் இதை வைத்து குர்ஆன் இறைவனின் வேதம்   இஸ்லாம்தான் சரியான மார்க்கம் என்று நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதை நாம் கைவிட வேண்டும்.

இஸ்லாமில் எத்தனையோ வழிபாடுகள்   அறிவுரைகள்   அறிவியல்பூர்வமாக அமைந்துள்ளது நாம் இதனை அறிவியலின் துணை கொண்டு மக்களிடம் கொண்டு செல்லும் போது அறிவியலை முதன்மைப்படுத்தியும் முக்கியப்படுத்தியும் விடுகிறோம். இவ்வாறு நம்மையும் அறியாமல் அறிவியலை புனிதமாக்கி உயர்ந்த அந்தஸ்த்திற்கு கொண்டு சென்று விடுகிறோம். இதனால் இஸ்லாமின் ஏதாவது ஒரு வழிகாட்டுதல் விஞ்ஞானத்திற்கு முரணாக இருந்தால் அதைப் புறக்கணிக்கும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதனை செயல்படுத்த முன்வரும் மனிதன் விஞ்ஞானத்தின் அடிப்படையில் அச்செயல் அமைந்துள்ளதால் அதனை செய்ய முன்வருகிறான். அல்லாஹ்வும்   அவன் தூதரும் ஏவி இருக்கிறார்கள் என்பதை இரண்டாம் பட்சமாகவே எண்ணுகிறான். சரியோ தவறோ   நன்மையோ தீமையோ தலைவன் ஏவியதற்கு அடிபணிவதையே வழிபடுதல் என்கிறோம். இங்கே அத்தன்மை ஒளிந்து கொள்வதை பார்க்கிறோம். குர்ஆன் அறிவியல் கண்டுபிடிப்புகளின் புதையலோ   விஞ்ஞானத்தின் முன்னறிவிப்போ அதன் வழிகாட்டியோ அல்ல. அது வாழ்வியல் வழிகாட்டி புத்தகம்.

இன்று கண்டறியப்பட்டுள்ள குர்ஆனோடு ஒத்ததாக அமைந்துள்ள விஞ்ஞான உண்மைகளை நாம் சத்திய மார்க்கத்திற்கு சான்றாக கொள்ளலாம். அவற்றை வைத்து இஸ்லாம் அறிவியல் மார்க்கம்   இஸ்லாம் விஞ்ஞான பூர்வமான மார்க்கம் என்று இஸ்லாமை அறிமுகப்படுத்துவதம் சரியாகாது.

ஹிந்து மதத்தின் வழிபாடுகளிலும் எத்தனையோ அறிவியல் உண்மைகள் உள்ளன. வீட்டு முற்றத்தில் மாட்டுச் சாணி தெளிப்பதால் எத்தனையோ பூச்சிகள்   விஷ ஜந்துக்கள் வீட்டை அண்டாது. முகத்திற்கு மஞ்சள் பூசுவதால் முகக் கிருமிகள் இறந்து போகின்றன. முகத்திற்கு பொலிவு கிடைக்கின்றது சூரிய நமஸ்காரம் செய்யும் போது அதிகாலை வெயில் உடல் மேல் படுவதால் வைட்டமின் 'D' சக்தி கிடைக்கின்றது. நெற்றியில் திருநீர் பூசுவதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு சமூகத்தின் கலாச்சாரத்திலும் பழக்க வழக்கங்களிலும் ஏதாவது ஒரு வகையில் அறிவியல் ரீதியான நன்மைகளும்   மருத்துவபலன்களும் இருக்கத்தான் செய்கின்றன. நாம் 'அறிவியல்பூர்வமாய்' என்று மக்களிடம் இஸ்லாமை கொண்டு சென்றால் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தத்தமது பழக்க வழக்கத்தில் இருக்கும் அறிவியலை கண்டு தம் மதத்தையே பெருமையாக கொள்வர். இது அவர்களை மேலும் வெளியே வர முடியாதபடி செய்து விடும்.

இவற்றையெல்லாம் நாம் நமது மக்களிடம் சொல்லலாம். நம்மை நாமே திருப்திப்படுத்திக் கொள்வதற்காக இவற்றைச் சொல்வதில் தவறில்லை. பறவை இறைச்சிக்கு உயிரூட்டி இப்ராஹிம் (அலை) அவர்களது ஈமானையும்   மிஃராஜ் மூலமாக முஹம்மத் (ஸல்) அவர்களின் ஈமானையும் அல்லாஹ் திருப்தி அடையச் செய்தான். அவர்கள் இறைத்தூதர்கள். அல்லாஹ்வின் அருளை நேரில் கண்டவர்கள். நாம் கொள்கையளவில் இஸ்லாமை அதன் ஏவல்   விளக்கங்களில் நன்மை இருக்கின்றதா? என்று நாம் பார்ப்பதில்லை. நோன்பு வைப்பதால் இன்ன மருத்துவ பலன் இருக்கிறது என்பதால் நோன்பு நோற்பதில்லை. கேட்டோம்   கட்டுப்பட்டோம் என்கிற அடிப்படையிலே நாம் வழிபட்டு கொண்டு இருக்கிறோம். இதுதான் உண்மையான ஈமானும் கூட. அதே வேளையில் உலகியல் அடிப்படையில் சில நன்மைகளும் இருக்கும் போது நமது மனம் திருப்தி அடைகின்றது. செய்யும் காரியத்தில் ஒரு ஆர்வமும்   உறுதியும் ஏற்படுகின்றது. ஆகவே இதை நம் மக்களிடம் சொல்லலாமே தவிர இதை வைத்து பிற மக்களிடம் இஸ்லாமை அறிமுகப்படுத்தலாகாது.

கேரள பிரபல இலக்கியவாதி கமலா சுரைய்யா (மாதவி குட்டி) பிரபல மேற்கத்திய பாப் இசைப் பாடகர் யூசுப் இஸ்லாம் போன்றோரின் இஸ்லாமிய தழுவலை அவர்களின் பிரபலத்தை முன்வைத்து இஸ்லாமை பிறருக்கு பிரச்சாரம் செய்கிறோம். இத்தகைய பிரபல மனிதர்கள் இஸ்லாமை தழுவியிருக்கிறார்கள். நீங்களும் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.

சிலர் இஸ்லாமிற்குள் வராவிட்டாலும் இஸ்லாமைப்பற்றி தங்களது நல்ல அபிப்பிராயங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அதன் கொள்கையைப் பற்றியும்   போதனைகளைப் பற்றியும் அது ஏற்படுத்திய சமூக மாற்றத்தைப் பற்றியும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

இன இழிவிற்கு இஸ்லாமே அருமருந்து என்று பெரியார் ஈ.வே. ராமசாமியும் முஹம்மத் இன்று இருந்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டிருப்பார் என்று ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறியிருக்கிறார். இது போன்று எத்தனையோ தலைவர்கள் இஸ்லாமை தழுவாவிட்டாலும் இஸ்லாமை போற்றியிருக்கிறார்கள்.

இவர்களது பேட்டிகளையும்   அறிக்கைகளையும் முன்வைத்து இஸ்லாமை பிரச்சாரம் செய்கிறோம். இப்படிப்பட்ட பிரபலமானவர்களின் நற்கருத்துக்களை மக்களிடம் சொன்னால் மக்கள் இஸ்லாமை ஆர்வத்தோடு படிப்பார்கள். இஸ்லாமினுள் நுழைவார்கள் என்று நம்புகிறோம். உண்மையில் சகோதரர்களே! இதனால் அவர்களுக்கு இஸ்லாத்தின் மீது நன்மதிப்பே ஏற்படுத்துமே தவிர அவர்களை இஸ்லாமிற்குள் நுழைக்கச் செய்யாது. சாதாரணமான ஒருவருடைய மனதில் " அவர்கள் (அந்த பிரபலங்கள்) உண்மையானவர்களாக இருந்தால் இஸ்லாமை தழுவியிருக்கலாமே " என்ற எண்ணம் கண்டிப்பாக தோன்றும்.

அருமைச் சகோதரர்களே! நாம் இஸ்லாமை இவ்வாறு கொண்டு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இத்தகைய கவர்ச்சி நாயகர்களின் வசீகர பேச்சுக்கள் இஸ்லாமை அறிமுகப்படுத்த தேவையே இல்லை. இஸ்லாமே கவர்ச்சி மார்க்கம்   உண்மையான இஸ்லாமை மக்களிடம் சொன்னாலே மக்கள் சாரை சாரையாக வருவார்கள். அதன் கடவுட் கொள்கை ஒன்றே போதும்.

மேலும் தொழுகை   நோன்பு போன்ற வழிபாடுகளின் அழகையும்   அதன் செயல் வடிவ வசீகரத்தையும்   கல்விக்கு இஸ்லாம் அளித்துள்ள முக்கியத்துவம்   தாயை பேணுவதற்கான கட்டளைகள். இன்னும் எத்தனையோ சமூக சீர்திருத்த கருத்துகள்   மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற அழகான அறவுரைகளை எடுத்துக் கூறி இஸ்லாமை பிரச்சாரம் செய்கிறார்கள். எத்தனையோ பேர் இதைக் கேட்டு இஸ்லாமிற்குள் வருகிறார்கள்.

இஸ்லாமில் தீண்டாமை இல்லை என்று கருதி இஸ்லாமினுள் வருகிறார்கள். இவ்வாறு எவ்வளவோ அழகான நெறிமுறைகள் தாங்கிய மார்க்கமாக இஸ்லாம் இருக்கின்றது. ஆனால் இதை மட்டும் கருத்தில் கொண்டு இஸ்லாமைத் தழுவியவர்களிடம் அவ்வளவு கொள்கை பிடிப்பு இருக்காது. நிலைகுலையாமை இருக்காது. "உலகில் எத்தனையோ நல்ல கருத்துகளை மதங்கள் கூறுகின்றன. அவற்றுள் இஸ்லாமும் ஒன்று. இஸ்லாமும் சிலவற்றை கூறுகின்றது! " என்ற கருத்தோட்டத்தையே இது பலரிடம் ஏற்படுத்தி விடும். இந்த நல்ல அறிவுரைகளுக்காக இஸ்லாமை தழுவ வேண்டிய அவசியம் இல்லை என்கிற எண்ண நிலைப்பாட்டை தோற்றுவித்துவிடும்.

அருமைச் சகோதரர்களே! உலகில் நல்ல அறவுரைகளுக்கும்   தத்துவங்களுக்கும் பஞ்சமில்லை. எல்லா சமயங்களிலும் நல்ல அறவுரைகள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் நல்ல அறவுரைகளை மையப்படுத்தி இஸ்லாமை கொண்டு சென்றால் மக்கள் அதைப் போற்றத்தான் செய்வார்களே தவிர இதற்காக ஒரு மதத்தை தழுவி அதில் கட்டுண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றே மக்கள் கருதுவார்கள்.

இஸ்லாம் ஓர் அழகான வாழ்க்கை நெறியாக உள்ளது. அது மனிதனின் அனைத்து செயல்பாடுகளுக்கும் வழிகாட்டும் நெறியாக உள்ளது என்று கூறுகிறோம். தனிமனித   மற்றும் பொதுவாழ்க்கை என எல்லா விஷயங்களிலும் மனிதன் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இஸ்லாம் தீர்வளிக்கிறது என்று பிரச்சாரம் செய்கிறோம்.

இது உண்மை என்றாலும் இதை நாம் அழைப்புப்பணியின் பிரச்சார வழிமுறையாக கொள்ளக்கூடாது. இது ஒரு வகையில் கிறித்தவ மிஷினரிகளின் பிரச்சார வழிமுறையை ஒத்ததாக அமைந்திருக்கின்றது. அவர்கள் தான் "நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டீர்களானால் நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். நோய்   நொடிகள் குணமாகும். கடன் தொல்லைகள் தீரும். முடவர்கள் நடப்பார்கள். மனநிம்மதி கிடைக்கும்! " என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

மார்க்கத்தின் கவர்ச்சியே கலிமத்து தய்யிபாதான். அந்த "லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

ஏகத்துவ பிரச்சாரம் செய்தாலே நமக்கு போதுமானது. அதற்கு இருக்கும் வசீகரத் தன்மை வேறு எந்த வாக்கியத்திற்கும் கிடையாது. இதை ஒன்றை மட்டும் வைத்தே தங்களது 23வருட நபித்துவ வாழ்க்கையில் இறைத்தூதர் (ஸல்) இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள். இஸ்லாத்தின் ஏனைய எந்த ஒரு அம்சத்தையும் பிரச்சார வழிமுறையாய் அண்ணல் நபி (ஸல்) கையிலெடுக்கவில்லை. அனைத்து நபிமார்களும்   "என் சமூகமே அல்லாஹ்வை வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்றும் "அல்லாஹ்வை வணங்குங்கள் தாகூதை விட்டும் விலகி இருங்கள்!" என்றும்தான் பிரச்சாரம் செய்தார்கள்.

அன்றைய அரபு தீபகற்பத்தில் ஷிர்க்கும் இருந்தது. ஏனைய அனாச்சாரங்களும் இருந்தன. விபச்சாரத்தை ஒழிக்கவும் மதுவிலக்கை கொண்டு வரவும் இறைத்தூதர் (ஸல்) ஓர் இயக்கத்தை உருவாக்கவில்லை. அப்படி தீமைகள் ஒழிப்பு இயக்கம் என ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருந்தால் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இருந்த வெறுப்பும் எதிர்ப்பும் அந்தளவிற்கு ஏற்பட்டு இருக்காது.

உண்மையில் இஸ்லாம் எதிர்ப்பிலேயே வளர்ந்திருக்கின்றது. பொய்க் கடவுளர்களைக் கொண்டு மக்களை நம்ப வைத்து அதை வைத்தே மக்களை தமக்குக் கீழே அடிமைகளாக நடத்திக் கொண்டிருந்தனர்   அன்றைய தலைவர்கள். அவ்வேளையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதுவையும் விபச்சாரத்தையும் இன்னபிற தீமைகளையும் ஒழிப்பதையே முன்னிறுத்தி போராடி இருந்தால் அத்தலைவர்களது எதிர்ப்பிற்கு ஆளாகி இருக்கமாட்டார்கள். இது ஏனென்றால் அப்போராட்டம் அவர்களது தலைமைக்கும் பதவிக்கும் இது எவ்விதத்திலும் ஆபத்து ஏற்படுத்தாது. ஷிர்க்கை எதிர்த்த போது தான் தம் தலைமைக்கே இது வேட்டு வைக்க கூடியதாக உள்ளது என்பதை உணர்ந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களை எதிர்த்தார்கள்   துன்பம் தரலானார்கள்   நாடு கடத்தினார்கள்   கொலை செய்யவும் முற்பட்டார்கள்.

எந்த கற்சிலைகளை கடவுளர்கள் என்று மக்களை நம்ப வைத்து தமக்கு கட்டுப்படுபவர்களாக ஆக்கி வைத்திருந்தார்களோ அச்சிலைகள் கடவுள்கள் கிடையாது என்னும் போது எப்படி அத்தலைவர்களால் பொறுத்துக் கொள்ள முடியும். அவர்களது தலைமையையே பறிக்கக் கூடியதாக அல்லவா அது இருந்தது?

தலைமையும்   அதிகாரமும் கையில் இருக்கும் போது எல்லா சமூக கேடுகளையும் ஒழிக்க அவர்களால் முடியும். ஆனால் அது அவர்களுக்கு எவ்விதத்திலும் உதவாது. சிலைகளை கடவுளர்களாக மக்களை நம்பவைக்கும் போதுதான் அத்தலைவர்களுக்கு பற்பல வழிகளில் செல்வமும் கிடைக்கின்றது செல்வாக்கும் கிடைக்கின்றது. உலகம் முழுவதும் இதுதான் இன்றும் நடந்து கொண்டு இருக்கிறது.

நன்மைகளை செய்கிறோம். தீமைகளுக்கு எதிராக போராடுகிறோம் என்று மக்களை ஒன்றிணைத்து பின்னர் படிப்படியாக இஸ்லாமை பிரச்சாரம் செய்யலாமே என்று நாம் நினைக்கலாம். இதுவும் சரியான வழிமுறை அன்று!. ஒரு வேளை ஏதாவது ஈமானிய சோதனை ஏற்பட்டால் அப்படி இஸ்லாமிற்குள் வருபவர்களிடம் ஈமானிய உறுதி இஸ்திகாமத் நிலைகுலையாமை தென்படாது.

ஏகத்துவ கலிமாவை சொல்லித்தான் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்தார்கள். அதன் ஆழ   அகலத்தை நன்றாக விளங்கிக் கொண்டபின்புதான் குறைஷித் தலைவர்கள் எதிர்த்தார்கள்.

ஒரு முறை அபு ஜஹ்லிடம் அவனைச் சார்ந்த கூட்டத்தாரில் ஒருவன் இப்படி கேட்டான். "நீங்கள் ஏன் முஹம்மதை இந்தளவிற்கு எதிர்க்கிறீர்கள்?. அவர் ஒன்றும் அன்னியர் கிடையாதே. உங்கள் சித்தப்பா மகன் தானே! அவர் சொல்வதை கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது?

" அதற்கு அபுஜஹ்ல் "அவர் சொல்வது உண்மைதான்!. ஆனால்   அவர் தன்னை எப்படி அறிமுகப்படுத்துகிறார் தெரியுமா? தன்னை ரசூலுல்லாஹ் அல்லாஹ்வின் தூதர் என்று பிரகடனப்படுத்துகிறார். அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? அவர் "நில்" என்றால் நிற்க வேண்டும்   "உட்கார்" என்றால் உட்கார வேண்டும். இது என்னால் முடியாது!" என்று கூறினான். இது தான் அவர்கள் புரிந்து கொண்ட இஸ்லாம்! அதனால் கடுமையாக எதிர்த்தார்கள். எங்கே தம்மை விட்டும் தலைமை போய்விடுமோ என்று அஞ்சினார்கள்.

இஸ்லாமை சொல்லும் போது அடி விழும். உதை வாங்க நேரிடும். அப்பொழுது தான் நாம் உண்மையான இஸ்லாமைச் சொல்கிறோம் என்று பொருள்!. அனைத்து நபிமார்களும் இஸ்லாமை சொன்ன போது எதிர்ப்பு இல்லாமல் இருந்தது இல்லை. இஸ்லாமை சொன்ன போது நபி (ஸல்) அவர்களுக்கும் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. இது எப்பொழுது ஏற்படும் என்றால் அல்லாஹ்வை விட்டு விட்டு மற்றவைகளை வணங்காதீர்கள் என்று நாம் பகிரங்கமாக பிரச்சாரம் செய்யும் போது தான் ஏற்படும்!.  இஸ்லாமை இப்படித்தான் அறிமுகப்படுத்த வேண்டும்!. நபிமார்கள் வாழ்க்கையிலிருந்து படிப்பினையாக இதனையே பெறுகிறோம்!!.

ஆகவே மற்ற மற்ற சிறப்பம்சங்களை காட்டிலும் இஸ்லாத்தின் இந்த அடிப்படையை மையப்படுத்தி இஸ்லாமை நாம் அறிமுகப்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்!!Thanks;---

 

MUST READ :: MUST READ :: MUST READ :: MUST READ


 

Assalamu alaikkum...

எனது அன்பான இஸ்லாமிய சஹோதர சஹோதிரிகளே. ஓமன் நாட்டில் ஒரு பிணம் தோண்டி எடுக்கப்பட்ட சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை படுகிறேன்

பிணம் தோண்டி எடுக்கப்பட்டது(மண்ணறை வேதனை)

இந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது. இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் பதைகுழியில் இருந்து இந்த இளைஞனின் பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

இந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்தபிறகு அதேநாளில் இஸ்லாமிய சடங்குகள்படி புதைக்கப்பட்டது. ஆனால் மருத்துவரின் சிகிச்சையின் மீது சந்தேகப்பட்ட இவனது தந்தை தனது மகன் இறந்ததற்கான உண்மையான காரணம் அறிய ஆசைப்பட்டதால் இவனது பிணம் தோண்டி எடுக்கப்பட்டது.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பிணத்தை தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர்.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.

சற்று முன்பு புதைக்கப்பட்ட இடம் என்பதால் எளிதாக மணலைத் தோண்ட முடிகின்றது. மூடிய குழிகள் மெல்ல மெல்ல தோண்டப்பட்டு வருகின்றது. முழுவதுமாய் தோண்டி அந்த இளைஞனின் பிணம் வெளியே எடுக்கப்படுகின்றது. சிலருக்கு மயக்கம் வராத குறை. சிலர் முகம் சுளிக்கின்றனர்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அப்பிணத்தைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைகின்றனர் அவனது தந்தையால் அந்த பிணத்தை காண முடியவில்லை. சற்று முன் புதைக்கப்ட்ட பிணமாக அந்த உடல் தெரியவில்லை.

3 மணி நேரத்தில் அவனது உடலில் பயங்கர மாற்றம் ஏற்பட்டுளள்ளதை அனைவரும் திகிலோடு கவனிக்கின்றனர். அந்தப்பிணத்தின் உடல் ஒரு விதமான சாம்பல் நிறமாக காட்சி அளிக்கின்றது. 18 வயதான அந்த இளைஞனின் உடல் ஒரு முதியவரின் உடல் போல தோற்றமளிப்பதைக்கண்டு அனைவருக்கும் பயம் கலந்த ஆச்சர்யம்.

சுமார் 1000 பேர் சேர்ந்து அந்த பிணத்தை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து இரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது.உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.

அனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் கண்கள் மூடியபடி அடக்கப்பட்ட அந்தப் பிணத்தின் விழிகள் முற்றிலுமாய் திறக்கப்பட்டு எதையோ பார்த்து பயந்து போய் வலி தாங்க முடியாமல் சொக்கி போனதுபோல காட்சி அளித்தது. உடலில் உள்ள இரத்தம் வெளியே வந்து மிகுந்த சித்திரவதைக்கு உட்பட்டவனைப் போல காட்சி அளித்தது.


இரண்டு பக்கம் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களால் மனித உடலை நசுக்கினால் எப்படி சிதையுதோ அந்த அளவிற்கு சிதைவுகளின் கோரம் இருந்தது.
புதைத்து 3 மணிநேரத்திற்குள் இப்படி மோசமாக உடல் சிதைக்கப்பட்டுப் போனதன் காரணம் தெரியாமல் அனைவரும் திகிலடைந்து போய் இருந்தனர்.

உறவினர்கள் அந்தப் பிணத்தை எடுத்து இஸ்லாமிய மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்து ஆராயச் சொன்னபொழுது அவர்களின் விளக்கப்படி இந்தப்பிணமானது குழிக்குள் மிகுந்த சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது என்றும் தீய வழியில் நடப்பவர்கள் குழிக்குள் வேதனைப்படுத்தப்படுவார்கள் என்று அல்லாஹ் மற்றும் அவனது தூதுவரான நபிகள் நாயகத்தின் ஏற்கனவே கூறப்பட்டுள்ள எச்சரிக்கைதான் என்றும் விளக்கமளித்தனர்..

திகிலில் இருந்து உறையாமல் பயத்துடன் இருந்த அவனது தந்தையிடம் கேட்டபொழுது அவர் தனது மகன் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டான் என்பதையும் தொழுகையை ஒழுங்காக பேணி தொழுபவன் இல்லை என்றும் வாழ்க்கையில் சரியான வழியில் அவன் செல்லவில்லை என்றும் விளக்கமளித்தார்.

அல்லாஹ்வின் பாதையில் இறந்தவனைத்தவிர மற்ற அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு. கியாமத் நாளுக்கு ( இறுதி நாள் ) முன்பு வேதனைகள் வெளிக்கொணரப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.

"ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போதுஇ அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால் என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால்இ கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1314 அபூஸயீத் அல்குத்ரி (ரலி))

"ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு ( முன்கீர் - நக்கிர்) வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர்.
அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான்.

பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும்இ 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான்.
அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள்இ ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 1338 அனஸ் (ரலி))

இதுவெல்லாம் நடக்கவா போகிறது என்று வீண் அலட்சியத்தில் இருப்பவர்களுக்கு இது அல்லாஹ்வின் இறுதி எச்சரிக்கையாக இருக்ககூடுமோ?

ஹதீஸில்தானே சொல்லப்பட்டிருக்கின்றது. இதுவெல்லாம் நமக்கு வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள் நண்பர்களே. மண்ணறையின் வேதனையை மட்டும் மனிதர்களுக்கு கேட்குமானால் அவன் மயக்கமுற்று விடுவான் என்கிற அளவுக்கு வேதனைகள் கடுமையாக இருக்கும்.

அய்யோ வேதனையைத் தாங்க முடியவில்லையே.. அலட்சியமாக இருந்துவிட்டோமே என்று அந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவுதான் மன்றாடினாலும் வேதனைகள் விட்டு விலகாது. அது காலம் கடந்த ஞானயோதயம்.

ஒன்று புரிந்து கொள்ளுங்கள் : எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது வரும் என்று திட்டமிட்டு தெரியாததால் நாம் இவ்வளவு அலட்சியமாக இருக்கின்றோம்.

எனக்கு மெயிலில் வந்த இந்த சம்பவத்தை என்னால் முடிந்தவரை அனைவருக்கும் தெளிவுபடுத்தியுள்ளேன். இது உண்மையாக இருக்குமா அல்லது பொய்யான தகவலா என்று ஆராய்வதும் அல்லது இதன் மூலம் தன் வாழ்க்கையைளிவுபடுத்திக்கொள்வதும் அவரவர் கைகளில் உள்ளது.

யா அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து,நல்வழிப்படுத்தி,இந்த மாதிரி கொடுமைகளை எல்லாம் சந்திக்காவண்ணம் நம்மை சொர்க்கவாசியாக்கி வைப்பானாக!..ஆமின்...

Tuesday, April 24, 2012

மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா?

0மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா?


 மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம்.
இந்த சாப்ட்வேர் ஒரு சில மொபைல் போன்களுக்கு சப்போர்ட் செய்வதில்லை.  மேலும் இந்த தளத்திலேயே எந்த எந்த 

மொபைல்களுக்கு சப்போர்ட் செய்யும் என்ற விபரமும்
கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்காக அந்த தளத்தில் உள்ள Compatible phones என்ற டேப் ஐ அழுத்தி காணலாம்.  இந்த சாப்ட்வேர்க்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   முதலில் இந்த தளத்திற்கு சென்றவுடன் அதன் Header பகுதியில் உங்கள் போனுக்கான மாடலை செட் செய்து கொள்ளவும்.  பிறகு உங்கள் மொபைலுக்கான Panini Tamil ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தவும். 



panini tamil                                                              Download

ஸ்கைப் (SKYPE) - முழுமையாக பயன்படுத்துவது எவ்வாறு?

ஸ்கைப் எனப்படும் ஒரு எளிய மென்பொருள் இன்றைய தொலைதொடர்பு யுகத்தில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. இந்த மென்பொருளானது VoIP எனப்படும் நவீனத் தொழில்நுட்பத்தைக் கையாள்கிறது.

நடைமுறையில் நாம் பயன்படுத்தும் தொலைபேசிக் கருவிகளை விட அதி நவீன வசதிகளைக் கொண்டதாக இருந்தாலும், பயன்படுத்தும் செலவுடன் ஒப்பு நோக்கும்போது மிக மிக மலிவானது.

நமது மடிக்கணினியில் ஸ்கைப் மென்பொருளை நிறுவி இருந்தால், நாம் எங்கெங்கு பயணம் செய்கிறோமோ, அங்கெல்லாம் ஸ்கைப் பயன்படுத்தலாம்.

இதைப் பயன்படுத்துவதற்காக உங்களிடம் ஒரு கணினி, வேகமான இணைய இணைப்பு, ஒலிப்பானுடன் கூடிய ஒலிவாங்கி, மேலும் ஒரு வெப்கேமரா தேவைப்படும்.

ஸ்கைப் இணையதளத்தில் இருந்து இந்த இலவச மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவ வேண்டும்.

ஸ்கைப் உடன் ஒரு பயனர் கணக்கைத் துவங்க வேண்டும்.

இதில் பல்வேறு இலவச சேவைகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம்.

மேலும் ஸ்கைப்பில் உள்ளே / வெளியே என இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளன.
அவற்றை நாம் பயன்படுத்த வேண்டும் எனில் பயனர் கணக்கை உருவாக்கும்போது உங்கள் கடனட்டை பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

பேபால் தளம் மூலமாகவும் உங்களது ஸ்கைப் பயனர் கணக்கில் பணம் செலுத்தலாம்.

உங்களது பெயர், மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு உங்களுக்கான கணக்கைத் துவங்கிய பிறகு மற்ற நண்பர்களது முகவரிகளை உள்ளிட்டு அவர்களை உங்களுடன் இணைத்துக்கொள்ளவும்.

இந்தச் செயல்பாட்டுக்கு நீங்கள் எதுவும் பணம் செலுத்தத் தேவையில்லை.

ஸ்கைப் வெளியே எனப்படும் சிறப்பைப் பயன்படுத்தி செல்பேசி, வீட்டுத் தொலைபேசிகளுக்குப் பேசி மகிழலாம்.

வெகுதொலைவில் உள்ளவர்களுடனும், வெளிநாட்டில் உள்ளவர்களுடனும் தொடர்புகொள்வதற்கு பணம் செலுத்த வேண்டி வரும். ஆனால் இது வழக்கத்தில் உள்ள விட்டுத் தொலைபேசி, செல்பேசிக் கட்டணங்களுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைவானதாக உள்ளது.

ஸ்கைப் உள்ளே என்கிற சிறப்பியல்பைப் பயன்படுத்தும்போது ஒரு வருடத்திற்கு எவ்வளவு சந்தாத்தொகையோ அதை ஸ்கைப் நிறுவனத்திற்குச் செலுத்தி விடவேண்டும்.

நிறுவனமானது உங்களுக்காக ஒரு தனிப்பட்ட தொலைபேசி எண்ணைக் கொடுப்பார்கள். அதை நீங்கள் வெளிநாடு வாழ் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் உங்களுடன் இலவசமாக பேசி மகிழ இது ஒரு வாய்ப்பு.

உங்களுக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு பணம் செலவாகாது. ஏனெனில் நீங்கள் ஸ்கைப்பிற்கு வருடச்சந்தா செலுத்திவிட்டீர்கள். இதுவே ஸ்கைப் உள்ளே என்கிற அம்சம்.

வாய்ஸ் மெயில் வசதியும் இதில் உண்டு. ஆனால் அதற்காக மேலதிகப் பணம் செலுத்த வேண்டும்.

நீங்கள் கணினியில் இணைய இணைப்பின்றி இருக்கும்போது யாரேனும் உங்களுக்கு வாய்ஸ் மெயில் அனுப்பி இருந்தால், அதை எப்போது இணையத்துடன் இணைகிறீர்களோ அப்போதே பெற்றுக்கொள்ளலாம்.

கையடக்கக் கணினிகளுக்காகவும் தனிப்பட்ட ஸ்கைப் மென்பொருள் அதே தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அது தேவையெனில் அதையும் தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.

குறைந்த செலவில் அதிக நேரம் வெளி நாட்டு நபர்களுடன் பேசி மகிழ அருமையான பயன்பாடு இது.

மேலதிக விவரங்களுக்கும், மென்பொருள் தரவிறக்கத்துக்கும் நீங்கள் நாடவேண்டிய தளம் : http://www.skype.com/


கலைச்சொற்கள் :
ஸ்கைப் - Skype
மடிக்கணினி - Laptop
வேகமான இணைய இணைப்பு - Fast Internet Connection
ஒலிப்பான்+ஒலிவாங்கி - Head phone with Mic
வெப்கேமரா - Web camera
மென்பொருள் - Software Application
தரவிறக்கம் - Download
பயனர் கணக்கு - User Account
ஸ்கைப் உள்ளே / வெளியே - Skype In / Skype Out
கடனட்டை - Credit Card
பேபால் - Paypal
வீட்டுத் தொலைபேசி - Home based Fixed Wired / Wireless phone
செல்பேசி - Mobile / cell phone
வருடச் சந்தா - Yearly fee
வாய்ஸ் மெயில் - Voice Mail
கையடக்கக் கணினி, கருவிகள் - PDA - Personal Digital Assistant, Hand held devices

கட்டண மென்பொருள்களை இலவசமாக பெற வேண்டுமா?

 
கணினியில் நாம் பல்வேறு மென்பொருள்களை பயன்படுத்துகிறோம் , சில மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும் சில பயனுள்ள மென்பொருள்களை நாம் விலை கொடுத்துதான் பயன்படுத்த வேண்டும்.

அத்தகைய கட்டண மென்பொருள்களை இலவசமாக தர சில இணையதளங்கள் உள்ளன , இத்தளங்கள் தினமும் ஒரு கட்டண  மென்பொருளை இலவசமாக தருகின்றன, அத்தகைய இணையதளங்களில் மூன்று தளங்களை இப்பதிவில் காண்போம்.

               
 
 

 
 


 
 


__,_._,___

மாணவர்களுக்கு பயனுள்ள வீடியோ தளம்

அறிவியல் ,வரலாற்று தகவல்களை அறிய விரும்புவோருக்கும் மிக சிறந்த பயனுள்ள தளமாக watch know learn .org எனும் தளம் விள ங்குகிறது.
இது முற்றிலும் மாண வர்களுக்கு பயன்படும் வகையில் mathe matics, scince, history, social studies ,computer and technology, இன்னும் பல 16 பிரிவுகளையும் ஒவ் வொன்றிற்கும் பல உபபிரிவுகளிலும் 16239957 வீடியோகள் தொகுக்கபட்டுள்ளன. 

அத்துடன் ஒவ்வொரு வீடியோவும் எந்த வயதினரின் கல்வித் தே வைக்கு பொருத்தமானது என கொடு க்கபட்டுள்ளது. 
இந்த தளம் மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர் களுக்கும் மற்றும் பெற்றோ ருக்கும் மாணவர்களுக்கான கற்பித் தல் செயற்பாட்டுக்கு மிகவும் வழிகாட்டியாக அமையும். நண்பர் களே இந்த பதிவு ,இந்த தளத்தி னை பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் பலரை சென்றடையட்டும் .

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?


நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.  அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.
ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது. 

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், ந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும். 
"இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்" என்று ஆதங்கப்படுகிறார் பிரபல டயட்டீஷியன் ஷோனாலி. 

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் கேஸ்கள்தான் என்று கூறுகிறார் ஷோனாலி. 
அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள். 

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள். 

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ: 

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். வ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேப்போன்று உவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள். 

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். 

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்.