Wednesday, October 28, 2009

உயிர்காக்கும் ஓசோன் (OZONE)
அழைக்கும் விஞ்ஞானம்.
மேல்கார்த், மோலாக், ரா, போபஸ், அப்போலோ, சமாஷ், கிசால்கோட் யாரில்..பகவான்(?)..மேற்கண்ட பெயர்களாலும், இன்னும் மேலே குறிப்பிடப்படாத பெயர்களாலும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த மக்கள் வெள்ளத்தால் அனுதினமும் பக்தி சிரத்தையோடு கடவுளாக(?) வழிபட்டு வரபட்ட அப்பொருள்தான் சூரியன் எனும் நெருப்புக் கோளமாகும். இப்பொருள் மக்கள் எண்ணிக் கொண்டிருப்பதைப் போன்று கடவுள் இல்லை. மாறாக அது ஒரு நூறு கி.மீ. குறுக்களவைக் கொண்ட எரியும் பாறைப் பொருள்தான் என கி.மு. 434ல் கூறிய அனக்ஸாகரஸ் (Anaxagoras 500-428 B.C.)எனும் அறிவியல் சிந்தனையாளர் மூட நம்பிக்கையாளர்களால் சித்திரவதைக்குள்ளாகிய வரலாறுகள் இந்த பூமியில் நிகழ்ந்த பின்னும் சத்தியத் திருமறையாம் தூய குர்ஆன் மூட நம்பிக்கையாளர்களின் கடவுளைப்(?) பற்றித் தெள்ளத் தெளிவான குரலில் ஓங்கி ஒலிக்கிறது.
சூரியனையும் சந்திரனையும் அவனே படைத்தான. (அல்-குர்ஆன் அத்தியாயம் 21 ஸூரத்துல் அன்பியாவின் 33வது வசனத்தின் ஒரு பகுதி)
அவைகளில் சூரியனை விளக்காகவும், சந்திரனை பிரகாசமாகவும் ஆக்கியிருக்கிறான். (அல்-குர்ஆன் அத்தியாயம் 71 ஸூரத்துந் நூஹ் - ன் 16வது வசனம்)
மேலும் சூரியனையும், சந்திரனையும் அவை (தவறாமல்) தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் வண்ணம் (மானிடர்களாகிய) உங்களுக்கு வசப்படுத்தி தந்துள்ளான். (அல்-குர்ஆன் அத்தியாயம் 14 ஸூரத்துல் இப்ராஹிம் 33வது வசனம்)
மேற்கண்ட வசனங்கள் சூரியனைப் படைக்கப்பட்ட பொருள் எனக் கூறுவதால் சூரியன் படைப்பாளன் (கடவுள்) இல்லை: அது ஒரு படைப்பினமே எனக் கூறுகிறது. மேலும் சூரியனை விளக்கு என்று கூறுவதால் அது ஓர் எரியும் பொருள் எனக் கூறுகிறது. அத்துடன் சூரியன் தன்னுடைய இயற்பியல் விதியிலிருந்து இம்மியும் பிசகாமல் இயக்கப்படுவதால் இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி வளமும் வலிமையும் பெற்றுவரும் மனித சமுதாயத்திற்குத் தான் சூரியன் வசப்படுத்தப் பட்டுள்ளதேயன்றிச் சூரியனுக்கு வசப்பட்டவர்களாக மனிதர்கள் இல்லை எனக் கூறுகிறது.
குர்ஆன் கூறுகின்ற சூரியன் சம்பந்தப்பட்ட இந்த அறிவியல் தகவல்கள் யாவும் உண்மையென்றால் இதற்குப் பிறகும் கடவுளுக்குரிய இடத்தில் சூரியனை வைத்துப் பார்ப்பது கடவுளை நிந்திக்கும் செயலாகும். அத்துடன் தமக்கு வசப்பட்டிருப்பதற்கு மட்டுமே சக்தி பெற்ற ஒன்றைத் தாமே வழிபடுவது என்பது தம்மைத்தாமே நிந்தனை செய்யும் செயலாகவும் அமைந்து விடுகிறது
தம்மைத் தாமே நிந்தனையில் தள்ளும் ஒருவர் மதிக்கப்படல் சாத்தியமா?
நவீன வானியல் விஞ்ஞானம் சூரியன் என்பது அதற்குரிய இயற்பியல் விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் ஓர் எரியும் கோளம் எனக் கூறுவதை அறியாதோர் யாரும் இந்த நூற்றாண்டில் இருக்க மாட்டார்கள். பதின்மூன்று இலட்சத்துத் தொள்ளாயிரம் கி.மீ.விட்டமும், பூமியைப் போன்று முப்பது இலட்சத்து முப்பதாயிரம் மடங்கு எடையும் (பூமியின் எடை 5,974,000,000,000,000,000,000 டன்கள்) கொண்ட இப்பொருளின் உள்ளே நமது கடல் மட்டத்தில் காணப்படும் அழுத்தத்தைக் காட்டிலும் நூறு கோடி மடங்கு அழுத்தமும் காணப்படுகிறது.
இப்படிப்பட்ட படுபயங்கரமான அழுத்தத்தின் கீழ் சூரியனுடைய உடலின் பெரும்பகுதியாகிய ஹைட்ரஜன் (Hydrogen) அணுக்கள் ஒன்றோடொன்று இணைந்து ஹீலியமாக (Heleum) மாறி வெளியிடப்படுகிறது. இதன் காரணமாக சூரியனின் மையத்தில் 1.5 -, 2 ஆயிரம் கோடி சென்டிகிரேட் வெப்பமும் புறப்பரப்பின் மீது ஆறாயிரம் டிகிரி வெப்பமும் காணப்படுகிறது. இவ்வாறு ஒரு பொருள் மற்றொரு பொருளாக இரசாயண மாற்றம் அடைந்து வெப்பத்தை வெளியிடும் நிகழ்ச்சி சூரியனில் நடைபெற்று வருவதால் இயற்பியல் அடிப்படையில் சூரியன் ஓர் எரியும் பொருள் என்று கூறுகிறோம்.
இப்படிப்பட்ட பிரம்மாண்டமான அணு உலையாம் சூரியனிலிருந்து விண்ணெங்கும் பாய்ந்தோடி வரும் அதன் ஒளிக்கதிர்களில் புற ஊதாக் கதிர்கள் (Ultra Violet Rays) என்பதும் ஒன்று. இந்த ஒளிக்கதிர்கள் மனிதர்கள் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்துக்குமே பெரும்கேடு விளைவிக்கக் கூடியவையாகும். இக்கதிர்கள் நேராக பூமியை அடையுமானால் இப்பூலகின் மீது மனிதர்கள் மட்டுமின்றிப் புற்பூண்டுகள் முதற்கொண்டு அழிக்கப்பட்டு உயிரின் சுவடே இல்லாத ஒரு கோளாக இந்த பூமி ஆக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த பூமியன் மீது பலகோடி வருடங்களாக அழிவைத் தரும் இக்கதிர்களால் எவ்விதப் பாதிப்புமின்றி உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன! இது எப்படி சாத்தியமாயிற்று!?.
ஒருகால்..'அந்தோ பரிதாபம்! நமது புற ஊதாக் கதிர்கள் உயிரினங்களுக்குப் பெரும் கேடு விளைவிக்கக் கூடியவை. எனவே அக்கதிர்களில் எதையும் நாம் பூமிக்கு அனுப்பக் கூடாது'. எனக் கருதி, சூரியன் தானே தன் அழிவுக்கதிர்களை பூமிக்கு அனுப்பாமல் விலகிக் கொண்டதா? அதனால்தான் மானிடர்களில் பலர் இன்னமும் இதனை கடவுளாய் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்களா?.
அப்படியெல்லாம் எதுவுமில்லை! ஒரு மைக்ரோ செகண்ட் (ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு) கூட ஓய்வின்றித் தன் அழிவுக் கதிர்களை நமது பூமியின் மீது வாரி வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது இந்த நெருப்புக் கோளம் எனக் கூறுகிறார்கள் நவீன அறிவியல் வல்லுனர்கள்.
அன்பார்ந்த நண்பர்களே! இந்த இடத்தில் நாம் ஒரு கணமாவது சிந்திக்கக் கடமை பட்டுள்ளோம். கணமும் தப்பாமல் சூரியனுடைய அழிவுக் கதிர்கள் மடையுடைத்த வெள்ளமாய் நம்மீது கொட்டப்படுகின்றன. ஆனால் நாமோ பல்லாயிரம் வருடங்களாக அதன்கீழ் அழிவின்றி வாழ்ந்து வருகிறோம். உண்மைநிலை இதுவென்றால் சிந்தனைத் திறனை உலகப் பேரரங்கில் அடகு வைக்காத அறிவியல் அன்பர்களே! நீங்கள் கூறுங்கள்! நம்மீது படாதவாறு தடுத்துக் கொண்டிருக்கும் அதியற்புதத் தடுப்பொன்று நமக்கு மேல் இருக்க வேண்டுமா வேண்டாமா?
சிந்தனைத் திறம் பெற்றவர்களே! அறிவுசார், அறிவியல் சார் அன்பர்களே! நம்மீது பாய்ந்து வரும் இந்த அழிவுக்கதிர்கள் நம்மீது விழா வண்ணம் தடுக்கும் கூரையொன்று நமக்கு மேல் இல்லாவிடில் நம்மால் இங்கு வாழ முடியுமா? இதற்கு மேலும் சத்தியத் திருமறையின் கூற்றாம்
'வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக அமைத்தோம்.எனினும் அவர்கள் (நிராகரிப்போர்) அதிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணிக்கின்றார்கள்.' (அல்-குர்ஆன் 21வது அத்தியாயம் ஸூரத்துல் அன்பியா - 32வது வசனம்)
எனும் ஜீவ வசனத்தை ஒருவர் மறுத்து, பூமிக்குக் கூரை கிடையாது எனக் கூறத் துணிவார்?. அப்படிக் கூறினால் குர்ஆனை மறுப்பதாக நினைத்துக் கொண்டு அவர் செய்யும் காரியத்தால் 'அவர் பத்தும் சொல்வார்;. போகட்டும்' என அவரைக் கண்டு கொள்ளாமல் அறிவியல் உலகம் விட்டுவிடும் என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். எனவே இப்படிப்பட்ட காரியத்தை எந்த அறிவியல் வாதியும் செய்யத் துணிய மாட்டார்.
சூரியப் பேருலையிலிருந்து ஓயாது பாய்ந்து வரும் இப்புற ஊதாக் கதிர்களை எங்கள் மீது விழா வண்ணம் தடுத்துக் கொண்டிருக்கும் கூரையே! நீ எங்கிருக்கிறாய்? மெய்யான உன் படைப்பாளனின் வார்த்தைகள்தாம் குர்ஆன் என்பதற்கு நீ வழங்கிக் கொண்டிருக்கும் சாட்சியமெங்கே!?.
இதோ..! ஓசோன் (OZONE) என்பதே இக்கூரைக்கு அறிவியலாளர்கள் சூட்டியிருக்கும் பெயர். உயிரினங்களின் ஜீவகவசமாகிய இப்பொருள் நமது கூரையின் மொத்த உருவமாகிய காற்று மண்டலத்தின் ஒரு மெல்லிய கீற்று (அடுக்கு) ஆகும். இப்பொருள் நமக்கு மிகவும் அறிமுகமான பிராண வாயுவின் (Oxygen) வேறொரு வடிவமாகும். இதைச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம்.
எந்த ஒரு பொருளையும் துண்டு துண்டாக வெட்டிக் கொண்டே சென்றால் ஒரு குறிப்பிட்ட நிலையில்; அதை வெட்ட முடியாத நிலையை அடையும். கட்புலணாகாத இப்பொருளை மூலக்கூறு (Molecule) எனக் கூறலாம். மிக நுண்மையான இப்பொருளைத் தேவையான ஆற்றல் செலுத்தி மேலும் தனித் தனிப் பொருட்களாக பிரிக்கலாம். இவ்வாறு பிரியும் அந்த மிக, மிக நுண்ணிய பொருட்கள் அணு (Atom) எனப்படும். (அதை மேலும் பிரிக்க ஏராளமான ஆற்றல் தேவை) ஒரு பொருளைத் தனித்தனி அணுக்களாகப் பிரித்து அவைகளைச் சுதந்திரமாக விட்டுவிட்டால் அவைத் தொடர்ந்து அணுக்களாகவே இருந்து விடாது. அவை உடனே மூலக் கூறுகளாக இணைந்து விடும். இப்படிப்பட்ட மூலக் கூறுகளின் தொகுப்புகளே பொருட்களாகும்.
நமது பிராணவாயு என்பதும் மூலக்கூறுகளின் தொகுப்பேயாகும். மூலக்கூறுகள் அனைத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களின் தொகுதிகளாகும். பிராணவாயுவைப் பொருத்தவரை அதனுடைய மூலக் கூறில் இரண்டு அணுக்கள் இருக்கும். சில காரணங்களால் பிராணவாயு அதன் மூலக் கூறில் மூன்று அணுக்களைக் கொண்டிருக்கும். இவ்வாறு பிராண வாயுவின் மூன்று அணுக்கள் அதன் மூலக் கூறில் இடம்பெற்றால் அதன் பிறகு அது பிராண வாயுவின் குணத்திலிருந்து மாறுபட்ட பொருளாக மாறும். இதுவே ஓசோனாகும். ஓசோன் என்னும் இந்த வாயுப் பொருள்தான் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களைப் பூமியின் மீது விழ விடாமல் உட்கிரகித்துப் பூமிக்கு கூரையாக செயல்பட்டு வருகிறது எனக் கூறி 20 ஆம் நூற்றாண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள் தூய குர்ஆன் மெய்யான இறைவேதம் என்பதற்கு சாட்சியாக நிற்கின்றன.
இவ்வாறு பூமிக்குக் கவசமிட்டு நிற்கும் கூரையைப் பற்றித்தான் சத்தியத் திருமறை அது ஒரு பாதுகாக்கப்பட்ட பொருள் எனக் கூறுகிறது. எனவே நமது கூரையாக செயல்படும் ஓசோன் படலத்துக்கும், ஏதோ பிரச்னை என்றும், அப்பிரச்னையிலிருந்து அது பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்றும் இந்த வசனத்திலிருந்து இப்போதும் விளங்குகிறது. அப்படியானால் ஓசோனுக்கும் பிரச்னையுண்டா?.
ஓசோனுக்கும் பிரச்னையுண்டு எனக் கூறுகிறார்கள் அறிவியலாளர்கள். ஓசோன் என்பது பிராணவாயுவின் இரண்டு அணுக்களுக்குப் பதிலாக (O2) அதன் மூன்று அணுக்களால் (O3) ஆன மூலக்கூறு எனக் கண்டோம். அதே நேரத்தில் மூலக்கூறு (O2) ஓசோனாக (O3) மாற்றம் அடையும் போது பிராண வாயுவைப் போன்று (O2) நீடித்து நிற்கும் (Stability) தன்மையை இழந்து விரைவில் சிதைந்து தனித் தனி அணுக்களாக மாற்றமடைந்து மீண்டும் பிராணவாயுவாக (O2) ஓசோன் (O3) மாறிவிடுகிறது.
ஓசோனுடைய இந்த குறுகிய ஆயுள் காரணமாக இதைத் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதுவே ஓசோன் படலத்தில் காணப்படும் பிரச்னை என்று கூறுகிறார்கள் அறிவியலாளர்கள்.
பிரச்னை என்றால் இஃதன்றோ பெரும் பிரச்னை! எங்கள் இறைவா! என்னென்ன பிரச்னைகள் எங்களைச் சூழந்து நிற்கின்றன! கோடிக்கணக்கான வருடங்களாய் உயிரினங்கள் வாழ்ந்து வரும் இப்பூவுலகுக்குக் கூரையாய் அமைந்து நிற்கும் ஒரு பொருளுக்கு இவ்வளவு அற்ப ஆயுளா? ஒரு கணமும் ஓய்வின்றி நீ எங்கள் கூரையைப் புதுப்பித்துக் கொண்டிராவிடில் நாங்கள் இங்கு உயிர் வாழ்வது எங்ஙனம்? ஆகவே நாங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே கூரை பாதுகாக்கப்பட்டு வருகிறது என நீ கூறியதற்கு நிறைவான ஆதாரமாகும். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்கூட சுக சுந்தரமாக நீ எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே உன்னை மறுத்துரைக்க எப்படித்தான் அறிவு இடம் கொடுக்குமோ?
சூரியனுடைய புற ஊதாக் கதிர்களை உட்கிரகித்தவாறு ஓயாமல் சிதைந்து கொண்டிருக்கும் ஓசோன் படலம் பாதுகாக்கப்பட்டு வரும் மர்மம்தான் என்ன?
அன்பார்ந்த நண்பர்களே! இதற்குரிய விடையான அண்மைக்கால அறிவியல் கண்டு பிடிப்புகளைத் தெரிந்து கொண்ட ஒருவர் இத்தூய குர்ஆனின் பக்கங்களைப் புரட்டினால் அவரை வியப்படையச் செய்யும் வசனம் ஒன்றை அவர் கண்ணுறுவார். குர்ஆன் கூறுகிறது:
அச்சமும் ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலை காட்டுவதும் வானத்திலிருந்து மழை பொழியச் செய்து அதைக் கொண்டு பூமியை அது இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன. நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.' (அல்-குர்ஆன் 30வது அத்தியாயம் ஸூரத்துர் ரூம் - 24வது வசனம்)
இந்த வசனத்திலிருந்து இறந்து கிடக்கும் பூமியை உயிர்ப்பிப்பதில் மழை, மின்னல் என இரு நிகழ்ச்சிகளின் செயல்பாடுகள் உள்ளடங்கியிருப்பதாக நம்மால் காண முடிகிறது. நீரின்றி உயிரினம் இல்லை என்பதால், இதில் மழையின் செயற்பாடு என்ன என்பதை நாம் எளிதில் விளங்குகிறோம். ஆனால் இந்த வசனத்தில் உயிர்பிக்கும் நிகழ்ச்சியில் மின்னலும் இடம்பெறுவதாக காண முடிகிறதே? மின்னலுக்கும் உயிரினத்திற்கும் என்ன தொடர்பு?
மின்னல் என்பது பிரதானமான ஒளி (மின் ஒளி), ஒலி (இடியோசை), மின்சாரம் என மூன்று கூறுகளை உள்ளடக்கியது. (இம்மூன்று வார்த்தைகளையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தையாக 'இடிப்புயல்' எனும் வார்த்தையை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர்.) இப்படிப்பட்ட இந்த மின்னல் நாம் அச்சப்படவும், ஆசைப்படவும் ஏற்றது எனவும் இந்த வசனம் கூறுகிறது. மின்னலைப் பார்த்தவுடன் நாம் கண்களை மூடுவதும், காதுக்குள் விரலூன்றுவதும் மின்னலால் நமக்கு அச்சம் எற்படுவதால்தான். எனவே மின்னல் அச்சப்படத்தக்கது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இப்படி ஆபத்தை விளைவிக்கக் கூடிய இந்த நிகழ்ச்சியில் நாம் ஆசைபடத்தக்க விஷயம் என்ன இருக்கின்றது?.
ஆனால் மின்னல், மழை, உயிர்ப்பித்தல் என இம்மூன்று விஷயங்களையும் சிந்தித்துணரும் சமூகத்தவருக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் இருக்கின்றன என உத்திரவாதம் தருகிறது ஒப்பற்ற இறைவேதமாம் மாமறை குர்ஆன்! எனவே நாம் இப்போது இவைகளைப் பற்றிச் சிந்திக்கும் சமூகத்தைத்தான் அணுக வேண்டியுள்ளது.
சத்தியத்திருமறையின் சட்டங்களை அறிந்தோ, அறியாமலோ செயல்படுத்திக் கொண்டிருக்கும் அறிவியல் சிந்தனையாளர்களே! உங்களுக்குத்தான் எவ்வளவு கண்ணியத்தை இந்தச் சத்தியத் திருமறை வழங்கிக் கொண்டிருக்கிறது! உங்கள் ஆய்வுகளிலிருந்து நீங்கள் சிந்தித்துணர்ந்த விஷயங்களில் மின்னலுக்கும், உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சிக்கும் ஏதேனும் தொடர்புண்டா?
ஏதேனும் தொடர்பா? ஏராளமான தொடர்பு உண்டு! உயிரினங்களை வாழ வைக்கும் ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதில்கூட மின்னல் பங்கேற்கிறது எனக்கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள் விஞ்ஞானிகள்!
பிராண வாயுவின் அணுக்கள் பிளக்கப்பட்டு அவை மும்மூன்று அணுக்களாக இணைந்தால்தான் ஓசோன் உற்பத்தியாக முடியும் என முன்னர் கண்டோம். இந்த நிகழ்ச்சி நடைபெற வேண்டுமானால் அதற்குத் தேவையான ஆற்றல் பெறப்பட வேண்டும். ஓசோனால் உட்கிரகிக்கப்படும் சூரியனுடைய புற ஊதாக் கதிர்களுக்கே அந்த ஆற்றல் உண்டு. எனவே ஓசோனை உற்பத்தி செய்வது சூரியனுடைய செயல்பாடுதான் என விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். ஆனால் தொடர்ந்து செய்யப்பட்டு வந்த ஆய்வுகள் இந்த நம்பிக்கைக்கு ஆதாரம் தரவில்லை. ஓசோன் படலத்தினுடைய செறிவு, இரவு (சூரிய ஒளி பெறப்படாத நேரம்), பகல் (சூரிய ஒளி பெறப்படும் நேரம்) என்ற வித்தியாசமின்றி பாதிக்கபட்டு வந்ததை அவர்களுடைய ஆய்வுகளில் கண்டனர். எனவே சூரியச் செயல்பாட்டுக்கும். ஓசோனுடைய பாதுகாப்புக்கும் சம்பந்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்த விஞ்ஞானிகளுக்கு ஓசோனுடைய உற்பத்தி ஒரு புதிராகவே காணப்பட்டது. ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்பட்டதன் விளைவாக அண்மையில் இப்புதிருக்கு விடை கிடைத்தது.
ஒவ்வொரு நாளும் நமது பூகோளத்தின் மீது ஒட்டு மொத்தமாக 1 கோடியே 60 லட்சம் இடிப்புயல்கள் உற்பத்தியாகி வளி மண்டலத்தில் பரவுகின்றன. ஒவ்வொரு வினாடியிலும் இப்புவி பரப்பின் மேல் குறைந்த பட்சம் 100 முறை மின்னல் மின்னும். உடனே அவ்வளவு முறை இடியோசை ஏற்படும். இதன் காரணமாக எந்த ஒரு நேரத்திலும் இப்புவியின் மொத்த பரப்பின் மேல் 1800 இடிப்புயல்கள் ஏற்பட்டு வருகின்றன. இப்படி இடைவிடாது எற்பட்டுக் கொண்டிருக்கும் இடிப்புயல்களிலிருந்து உருவாகும் அளவிடற்கரிய ஆற்றல்தான் நமது ஓசோன் படலத்தை ஓயாது புதுப்பித்துப் பாதுகாத்து வருகின்றன எனக் கூறுகின்றன அண்மைக்கால அறிவியல் கண்டு பிடிப்புகள்.
இடி, மின்னலுடன் கூடிய மழைக்குப் பின் நமது சுவாச இயக்கம் எளிதாகி விடுவதை உணர்கிறோமே அதற்குக் காரணம்கூட ஓசோன் உற்பத்தியால் வளி மண்டலம் தூய்மையடைவதே எனவும் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
அச்சம் தரத்தக்க மின்னலில் ஆசைப்படத் தக்க காரியங்களும் இருக்கின்றன எனக் கூறிய திருமறையின் வசனத்தை மெய்ப்பித்து நிற்கும் அறிவியல் கண்டு பிடிப்புகளைப் பார்த்தீர்களா? ஓசோனை உற்பத்தி செய்யும் இடிப்புயலின் வெளியீடாகிய மின்னலில் நாம் ஆசைப்படத்தக்க காரியம் உண்டா இல்லையா?.
ஓசோன் இல்லையேல் பூமியல் உயிரினம் இல்லை எனக் கூறும் விஞ்ஞானிகள், வளி மண்டலத்தில் ஓசோன் உற்பத்தியான பிறகே உயிரினம் தோன்றியது என அறுதியிட்டுக் கூறுகிறார்கள். உயிரினத் தோற்றுவாயில் ஓசோனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் உண்டெனில் அந்த ஓசோனையே உருவாக்கும் மின்னல் உயிரினத் தோற்றுவாயின் மிக முக்கிய பங்காளியல்லவா? உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் நீருடன் மின்னலையும் இணைத்துக் கூறப்பட்ட திருமறை வசனத்தை மெய்யான இறைவேதம் என நிரூபித்துக் கொண்டிருக்கும் அறிவியல் கண்டு பிடிப்புகளைப் பார்த்தீர்களா
உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சியில் மின்னலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வியக்கத்தகு கண்டுபிடிப்புகளும், இத்தூய திருமறையை மானிட சக்திக்கு அப்பாற்பட்ட இறைவேதம் என நிரூபிக்கும் பொருட்டு அரங்கேறியிருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அவை வேறு தலைப்புகளில்.
அன்பார்ந்த நண்பர்களே! பூலோக வாசிகளாகிய நமக்கு ஆகாயம் ஒரு கூரையாகவும், அந்தக் கூரை பாதுகாக்கப்பட்ட பொருளாகவும் இருக்கிறது எனக் கருத்துணர்ந்த திருமறை வசனத்திற்குரிய அறிவியல் ஆதாரங்களாக நாம் இதுவரை பரிமாறிக்கொண்ட விஷயங்களை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். நவீன வானியல் விஞ்ஞானத்தில் கரை கண்ட ஒருவராலன்றி, ஆகாயம் பாதுகாக்கப்பட்ட கூரையாக இருக்கிறது எனக் கூறியிருக்க முடியுமா? நிச்சயமாக- மிக- மிக நிச்சயமாக- முடியவே முடியாது என்பதுதான் நேர்மைத் திறனுடன் பதில் தரும் ஒருவரது கூற்றாக இருக்க முடியும். அப்படியானால் இன்றிலிருந்து 1400 வருடங்களுக்கு முன் அப்படிப்பட்ட ஓர் அதிசய மனிதர்(?) இப்பூமியில் எங்கேனும் தோன்றியிருக்க இயலும் என நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?
குறைந்த பட்சம் செயற்கைத் துணைக் கோள்கள் இல்லாத காலத்தில் ஒருவர் இதைக் கூற வேண்டுமானால் அவர் இறக்கைகளுடன் பிறந்தவராக இருக்க வேண்டும். கிட்டப் பார்வைகளையும், தூரப்பார்வைகளையும் சரி, தூரப்பார்வைகளாக மாற்றும் கண் கண்ணாடிகளைக் கூடக் கண்டறியாத காலத்தில் இதை ஒருவர் கூற வேண்டுமானால் அவருடைய கண்களில் போலே மீட்டர்கள் (Bolometers) பிரிலியோ மீட்டர்கள் (Pyrheliometers) எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் (Electron Microscopes) ரேடியோ தொலை நோக்கிகள் (Radio Telescopes) போன்ற நவீன கருவிகளெல்லாம் முளைத்திருக்க வேண்டும். இப்படிக் கூடவா ஒரு மனிதர் இருந்திருக்க வேண்டும்?
நிச்சயமாக அப்படியெல்லாம் ஒருவர் இருந்திருக்க முடியாது என்பது நமது பதிலாக இருக்கும்போது குறைந்தபட்சம் இப்படிப்பட்ட ஒரு மனிதரால் மட்டுமே 1400 வருடங்களுக்கு முன்னால் கூற முடியக் கூடிய நவீன உலகின் அறிவியல் கண்டு பிடிப்புகளெல்லாம் - சத்தியத் திருமறையாம் அல்-குர்ஆனில் எப்படி இடம் பெற்றன?
நாம் சிந்திக்க வேண்டாமா?
காரண காரியங்களோடு நாம் சிந்திக்கத் தலைப்பட்டால் நமது சிந்தனை களஞ்சியங்களில் இப்பேரண்டம் ஒரு குருட்டாம்போக்கு செயல் இல்லை: மாறாக இது ஒரு பரிபூரணமான திட்டமிட்ட பணியின் (An absolute frame work) உருவம் என்பதை ஐயத்துக்கிடமின்றி தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே திட்டமிட்ட பணியின் திட்டங்களை வகுத்தளித்தவன் ஒருவன் இருக்கின்றான்: அவனுடைய திட்டமே பணிகளை நடத்துகிறது: அப்படிப்பட்டவன் யாரோ அவனிடமிருந்தே இச்சத்தியத் திருமறை வழங்கப்பட்டுள்ளதால் அது காலங்கடந்த காரியங்களையும் தன்னுள் கொண்டிலங்குகிறது என நம்மால் மிக மிக எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகிறது!
எனவே இத்தூய மறைக்குப் பக்கத்தில் நீங்கள் வைத்திருக்கும் முற்றுப் புள்ளிகளை காற்புள்ளிகளாக மாற்றி மேலும் உங்களுடைய சிந்தனையைத் தொடருங்கள்! உண்மை எதுவாக இருந்தாலும் அதனை ஏற்கும் பண்புடையவர்களல்லவா நீங்கள்!.
விரியும் விண்வெளி
அழைக்கும் விஞ்ஞானம்
கோள்கள், துணைக்கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் நீந்திச் செல்ல அவைகளின் படைப்பாளானால் வடிவமைக்கப்பெற்ற பேரண்டப் பெருவெளியே ஆகாயம். இது பூகோளத்தைப் போன்று பற்பல கோள்களையும், நிலவைப் போன்று பற்பல துணைக் கோள்களையும் கொண்டிருந்தாலும், அவை எவற்றிலும் வாழ்வதற்குரிய வசதியை இதுவரை கண்டறியாத அறிவியல் கண்களுக்கு இப்பூமியில் காணப்படும் வாழ்க்கை வசதி அளப்பறிய வியப்பை அளிக்கிறது. அத்துடன் முந்தைய பகுதிகளில் ஆய்வு செய்த குர்ஆனிய வசனங்களான,
'வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாகவும் அமைத்தோம்'(அல்-குர்ஆன் அத்தியாயம் 21 அல் அன்பியா - வசனம் 32)
'அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியை தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்..'(அல்- குர்ஆன் அத்தியாயம் 40 ஸுரத்துல் முஃமின் - வசனம் 64),
'அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்கு - 15வது வசனம்)
'..வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா?..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்கு - 17வது வசனம்)
மேற்கண்ட வசனங்களை மெய்ப்பித்து நிற்கிறது.
ஏனைய கோள்களை, துணைக்கோள்களைப் போல பூகோளத்திலும் வாழ்க்கை வசதி அற்ற சூழ்நிலையும், அச்சூழ்நிலையை அளிப்பதில் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் காற்று மண்டலக் கூரையும் இல்லாத நிலை நீடித்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக உயிரினம் தோன்றிய பூமியில் மட்டும் அந்த வசதியும், சூழ்நிலையும் ஏற்படுத்தப் பட்டிருப்பதிலிருந்தே பூமியில் உயிரினம் வாழவேண்டும் என்ற நாட்டமும், நோக்கமும் கொண்ட ஏதோ ஒரு சக்தி செயல் பட்டிருக்கிறது எனபதை உணரலாம். அதற்கு இதுவரை கூறப்பட்டவை அசைக்க முடியாத அறிவியல் ஆதாரங்களாகும்.
அறிவியல் அபிமானிகளே! இவற்றை மறுப்பதற்குரிய அறிவியல் ஆதாரங்கள் எவற்றையேனும் உங்களால் காட்ட முடியமா?.
மானிடக் கற்பனைகளையே கடை விரித்து வேதங்களாய் அறிமுகப் படுத்தப் பட்டதைக் காலங்காலமாய்க் கண்டு வந்ததால் இறை மறுப்பில் இறுகிப்போன உள்ளங்களே! உங்கள் முன் எடுத்துக் காட்டப்படும் மெய்யான இறை வேதத்தின் தூய வசனங்களுக்கு நவீன அறிவியல் அசைக்க முடியாத சாட்சியாய் தன்னை அர்ப்பணித்து நிற்பதை காண்கிறீர்கள் அல்லவா?. எனினும் நீங்கள் கண்டு வந்த கற்பனைப் புதினங்கள் அறிவியலோடு மோதுவதால், வேதங்கள் என்றாலே இப்படித்தான் என்ற எண்ணத்தில் இறுகிப்போன உங்களில் சிலருக்குப் பரிசுத்த குர்ஆனின் அறிவியல் ஆதாரங்கள் வியப்போடு - வினாவையும் எழுப்புகின்றனவா?. உங்கள் வினாக்குறிகள் யாவற்றையும் அகற்றக் கூடிய ஆதாரங்களை - பரிசுத்த குர்ஆன் இறை வசனங்களே என்பதற்குரிய அறிவியல் சான்றுகளை - ஒவ்வொன்றாக உங்கள் முன் எடுத்துக் காட்டுகிறோம். சிந்திக்கத் தெரிந்தவர்களே! விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு அவைகளைச் சிந்தியுங்கள்.
நவீன அறிவியல் விண்ணகப் பருப்பொருட்களின் (Clestrial Bodies) சலனங்களை, வானசாஸ்திரத்தைப் (Astronomy) பற்றி என்ன கூறுகிறதோ அதை இம்மியும் பிசகாமல் 1400 வருடங்களுக்கு முன் பரிசுத்த குர்ஆன் கூறி நிற்கும் அதிசயத்தைப் பாருங்கள். பரிசுத்த குர்ஆன் பறை சாற்றுகிறது:
'நிச்சயமாக வானங்களும், பூமியும் (ஒன்றை விட்டு ஒன்று) விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கிறான்: அவை இரண்டும் விலகுமாயின், அதற்கு பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது..'(அல்-குர்ஆன் 35வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபா(த்)திர் 41வது வசனம்).
இந்த வசனத்தில் வானங்களும், பூமியும் விலகும் வாய்ப்பைக் கொண்டன என்றும், ஆனால் அவை விலகி விடாத ஏற்பாடு ஒன்றை அமைத்து, அவை விலகும் வாய்ப்பைத் தடுத்துக் கொண்டிருப்பதாகவும் இறைவன் கூறுகிறான்.
இந்த அற்புத வசனம் அறிவியல் வாயிலாக நிரூபிக்கப்பட வேண்டுமாயின் பூமியும், ஆகாயமும் விலகும் வாய்ப்பு இருக்கிறதா? என முதலாவதாக நாம் ஆய்வு செய்ய வேண்டும். நாம் இதைக் கூறும்போது.. என்னய்யா உளறுகிறீர்கள்?. விண்ணும் மண்ணும் விலகக் கூடியதா?. முடியாது எனக் கூறித் தாங்கள் கற்றுணர்ந்ததைக் கூடப் பொருத்திப் பார்க்காத அல்லது பொருத்திப் பார்க்க விரும்பாத கல்விமான்களை இந்த நூற்றாண்டில் கூட நாம் பார்க்கிறோம். நிலமை இவ்வாறிருக்க 1400 ஆண்டுகளுக்கு முந்திய அறியாமை காலத்தில் வாழ்ந்த எந்த மனிதனாவது இந்த அறிவியல் பேருண்மையைக் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா?. இருந்தும் அந்த மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்கிறார் என்றால் இது அவருடைய சொந்த வார்த்தை அல்ல என்றும், விண்ணும் மண்ணும் படைத்து, அவை விலகாமல் இருக்கும் செயல் முறைகளையும் அவைகளில் வடிவமைத்தவன் யாரோ, அவனுடைய வார்த்தைகளே என்றும் ஏற்பதில் தயக்கம் காட்டுவது முறைதானா?.
விண்ணும், மண்ணும் விலகிப்போகும் வாய்ப்பைக் கொண்டன எனப் பறை சாற்றியதே பரிசுத்தக் குர்ஆன், அதை நிரூபிக்கக் கூடிய அறிவியல் சான்றுகள் எவை?. இதற்கு விடைகாணும் பொருட்டு இந்தப் பரிசுத்த குர்ஆனின் வசனத்திடம் மேலும் சற்று நெருங்கிச் செல்வோம்.
முதலாவதாக இவ்வசனம் விண்ணும், மண்ணும் விலகி விடாமல் தடுக்கப்படுகிறது எனக் கூறுவதிலிருந்து மண்ணானது (பூகோளம்) ஆகாயத்தில் பொருந்தியே இருக்கிறது. அவைகளுக்கிடையில் எந்த இடைவெளியும் இல்லை எனக் கூறுகிறது. இதை வலியுறுத்தும் ஏனைய ஆதாரங்களுள் மேலும் ஒன்றைக் கவனியுங்கள்.
'ஆகாயத்தில் கிரகங்களுக்கான (கோள்களுக்கான) பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து, பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் - 16வது வசனம்).
இந்த வசனமும் கோள்களைச் சுற்றி ஏதேனும் இடைவெளி இருப்பதாகவோ, அப்படிப்பட்ட இடைவெளிகளில்தான் கோள்கள் இருப்பதாகவோ கூறவில்லை. மாறாகக் கோள்கள் இருப்பது ஆகாயத்தில்தான் எனக் கூறுகிறது. இதிலிருந்து பூகோளத்திற்கு மேல் போர்த்தப் பட்டுள்ள காற்று மண்டலமும் ஆகாயத்தைச் சார்ந்த பகுதியே என்பது தெளிவாகிறது.
இந்த இடத்தில் மற்றொரு ஐயமும் எழலாம். 'ஆகாயத்தை ஒரு கூரையாக ஆக்கினான்' என்று குர்ஆன் கூறிய (40:64) வசனம், காற்று மண்டலத்தை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கிறதே. ஆகவே கூரையாக ஆக்கப்பட்ட இப்பகுதியை இதற்கு மேலும் நாம் ஆகாயம் என்று எடுத்துக் கொள்ளலாமா? என்பதே அந்த ஐயமாக இருக்கும். இந்த ஐயத்திற்கும் பரிசுத்த குர்ஆன் பதிலளிக்கிறது.
'இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்?'(அல்-குர்ஆன் அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் - 22வது வசனம்).
இந்த வசனத்தில் மழையை அனுப்புவது ஆகாயத்திலிருந்தே எனக் கூறுகிறது குர்ஆன். மழை புறப்படும் இடம் ஆகாயம் எனக் குர்ஆன் கூறுவதால், மழை புறப்படும் இடமாகிய காற்று மண்டலம் ஆகாயத்திலிருந்து தனிமைப் படுத்தப்பட்ட பகுதியல்ல என்பதையும் பரிசுத்த குர்ஆனே விளக்குகிறது. எனவே ஆகாயம் என்ற சொல் காற்று மண்டலத்தையும் உள்ளடக்கியதே என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
மேற்கண்ட வசனங்களிலிருந்து பூகோளத்தைப் பொருத்தவரை ஆகாயத்தின் கீழ் எல்லை எது எனத் தெரிந்து விட்டது. பூகோளம் (ஏனையக் கோள்களும்) இடைவெளியின்றி ஆகாயத்தில் பொருந்தியிருப்பதால், பூகோளத்தின் மேற்பரப்பிலிருந்து ஆகாயம் பரவியிருக்கிறது என்பது தெளிவாகிறது.
ஆகாயத்தின் கீழெல்லையைக் கண்டு விட்டோம். சரி. ஆகாயத்தின் மேலெல்லையைப் பற்றி திருக்குர்ஆன் ஏதேனும் கூறுகிறதா?. நிச்சயமாக கூறுகிறது. ஆகாயத்தின் மேலெல்லையைப் பற்றி அதற்குரிய ஆதாரங்களுடன் அருள்மறை குர்ஆன் கூறவே செய்கிறது.
'நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் ஆகாயத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அலங்கரித்தோம்.' (அருள்மறை குர்ஆன் 37 வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸாஃப்ஃபாத் 6வது வசனம்)
'ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?. இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.' (அருள்மறை குர்ஆன் 71வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸாஃப்ஃபாத் 6வது வசனம்).
மேற்கண்ட வசனங்களிலிருந்து இத்தலைப்புக்குத் தேவையான விபரங்களை மட்டும் பார்ப்போம். ஆகாயங்கள் மொத்தம் ஏழு எனவும், பூமிக்குரிய ஆகாயமே நட்சத்திரங்களின் அழகால் அலங்கரிக்கப் பட்டுள்ளது எனவும் எல்லா ஆகாயங்களிலும் நட்சத்திரங்கள் (சூரியன்), துணைக்கோள்கள் (சந்திரன்) உள்ளடங்கியுள்ளன எனவும் குர்ஆன் கூறுகிறது.
(குறிப்பு: இவ்வசனத்தில் காணப்படும் ஆகாயத்தின் எண்ணிக்கை ஏழு என்பதை மட்டுமே அறிவியல் இதுவரை புரிந்து கொள்ளாமல் இருக்கிறது. ஏனைய விஷயங்கள் யாவற்றையும் அறிவியல் உண்மை என நிரூபித்துவிட்டது. இன்ஷா அல்லாஹ் அவைகளை நாம் இனிவரும் அதற்குரிய தலைப்புகளில் விவாதிப்போம்.)
மேற்கண்ட வசனத்தில் ஆகாயங்கள் யாவும் நட்சத்திரங்களை உள்ளடக்கி இருக்கின்றன என கூறுவதிலிருந்து, ஆகாயத்தின் மேலெல்லையும் நட்சத்திரங்களை உள்ளடக்கி நிற்கிறது எனக் காண்கிறோம்.
'நட்சத்திரங்களை உள்ளடக்கி நிற்கிறது' என்று கூறினால் என்ன பொருள்?. பிரபஞ்சம் முழுவதும் நட்சத்திரங்கள் பரவி, அந்த நட்சத்திரங்களை உள்ளடக்கும் விதத்தில் ஆகாயமும் பரவி எல்லையே இல்லாமல் ஒரே பெருவெளிதானா?. அல்லது பிரபஞ்சத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி வரை ஆகாயமும், அதிலுள்ள நட்சத்திரங்களும் பரவி, பிரபஞ்சத்திலிருந்து தனிப்பட்ட, தனியொரு பொருளாக ஆகாயம் இருக்கிறதா? என்ற வினா இப்போது எழுகிறது. இந்த வினாவுக்கும் பரிசுத்த குர்ஆனே விடையளிக்கிறது:
'ஜின் (மற்றும்) மனித சமூகத்தினரே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்..' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 55 ஸுரத்துர் ரஹ்மான் - 33 வது வசனம்)
மேற்படி வசனம் பிரபஞ்சம் முழுவதுமே ஆகாயமன்று. ஆகாயங்களுக்கும் நிச்சயமாக ஓர்; எல்லை இருக்கிறது. எனவே ஆகாயம் எனத் தனியான ஒரு அமைப்பு இருக்கவே செய்கிறது என்பதை தெளிவாக அறிவிக்கிறது.இதுவரை நாம் கண்ட விஷயங்களில் இருந்து பூமியின் மேற்பரப்பிலிருந்து துவங்கிக் கோள்களையும், துணைக் கோள்களையும், நட்சத்திரங்களையும் உள்ளடக்கிய அகன்ற பெருவெளியாய்ப் பரவி, அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கும் உட்பட்டு தனிச் சிறப்புடன் விளங்குவதே ஆகாயம் (பேரண்டம்) எனக் கண்டோம்.விண்ணகப் பருப்பொருட்கள் யாவற்றையும் உள்ளடக்கி, நெடிதுயர்ந்து பரவிக் கிடக்கும் பேரண்டப் பெருவெளி. அதில் ஏனைய பருப்பொருட்களைப் போல் இடைவெளி ஏதுமின்றி பொருந்தி நிற்கும் பூகோளம். இந்த பூகோளம், அது பொருந்தி நிற்கும் பேரண்டப் பெருவெளியிலிருந்து விலகிச் செல்லும் வாய்ப்பைக் கொண்டதா?. ஆம் எனில் அது விலகிச் செல்கிறதா?. இல்லையெனில் அந்த விலகலைத் தடுக்கும் சக்தி ஒன்று அதற்குள் செயல்படுகிறதா?. இதுவே நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் கருப்பொருள்.பரிசுத்த குர்ஆனின் பிரகடனத்தை, அதன் உண்மை நிலையை நமக்குக் கற்றுத்தர, அருள்மறை குர்ஆன் மேலும் கூறுகிறது:
'இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான்: (அவை) யாவும் (அவைகளுக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் செல்கின்றன.'(அருள்மறை குர்ஆன் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியா - 33வது வசனம்).
அற்புதம்தான்! நவீன வான சாஸ்திரத்தின் திறவுகோலையும் நமக்களித்து, நாம் தேடிச் செல்லும் கருப்பொருளின் நுழைவாயிலுக்கே நம்மை அழைத்துச் செல்கிறது ஒப்பற்ற இறை வேதத்தின் மெய்யான இந்த பரிசுத்த வசனம்.
என்ன கூறுகிறது இந்த வசனம்? விண்ணில் காணப்படும் சூரியன், சந்திரன், உள்ளிட்ட பருப்பொருட்கள் யாவும் ஒரே இடத்தில் ஓய்ந்திருக்காமல் அவைகளுக்கென்றே இருக்கும் மண்டலங்களில் அவை ஒவ்வொன்றும் பயணம் செய்கின்றன எனக் கூறுகிறது.
அற்புதமல்லவா! இது புவி மையக் கோட்பாட்டை (Earth Centre Theory) தகர்த்தெறியவில்லையா?. (இது புவி மையக் கோட்பாட்டை Earth Centre Theory என்றால் என்ன என்பதை இன்ஷா அல்லாஹ் பின்னர் விளக்குவோம்) எங்கிருக்கிறீர்கள் நண்பர்களே!. இதில் எதை நீங்கள் மறுக்கிறீர்கள்?. விண்ணகப் பருப்பொருட்களின் (Celestial Bodies) சலனத்தை மறுக்கிறீர்களா?. அல்லது அவைகளுக்குரிய மண்டலத்தை (Orbit) மறுக்கிறீர்களா?. இல்லை. இரண்டையுமே நீங்கள் ஒப்புக் கொண்டு இந்த வசனம் மெய்யான வசனமே என உங்களை அறிந்தோ - அறியாமலோ அதற்கு சாட்சியாக நிற்கிறீர்கள்.
பரிசுத்த குர்ஆனை மெய்ப்பிக்க வந்த அறிவியல், இந்த விண்ணகப் பருப்பொருட்களின் சலனத்தைப் பற்றி என்ன கூறுகிறது?.
சந்திரன் மணிக்கு 3,600 கி.மீ. வேகத்தில் செல்கிறது. பூமியானது மணிக்கு 1,08,000 கி.மீ. வேகத்தில் ஓடுகின்றது. சூரியன் மணிக்கு 9,00,000 கி.மீ. வேகத்தில் பாய்கிறது எனக் கூறுகிறது அறிவியல்.
சூரியன் மட்டும்தான் ஓடுகின்றதா? ஏனைய நட்சத்திரங்கள் ஓடவில்லையா?. ஏனில்லை?. அனைத்தும் ஓடுகின்றன. வானியல் அறிஞர்கள் நிறமாலை நோக்கிகளின் (Spectroscops) துணை கொண்டு விண்ணை ஆய்வு செய்யக் கற்றுக் கொண்ட பின் விண்ணில் எதுவும் ஓய்ந்திருக்கவில்லை: யாவும் அவைகளுக்குரிய திசைகளிலும், திசை வேகத்திலும் (Orbital Velocity) சென்று கொண்டிருக்கின்றன எனக் கூறிப் பரிசுத்த குர்ஆன் மெய்யான இறைவேதமே என்பதற்கு தன்னையே சாட்சியாக அர்ப்பணித்து நிற்கிறது.
அறிவியல் அபிமானிகளே! நாம் வசிக்கும் இந்த பூமி ஓரிடத்தில் ஓய்ந்திருக்காமல் அதன் பாட்டுக்கு மணிக்கு 1,08,000 கி. மீ. வேகத்தில் ஓட்டம் பிடித்தால் என்றேனும் ஒரு நாள் இந்த பூகோளம் பேரண்டத்தின் எல்லையை தாண்டுமா, தாண்டாதா?. அதுதான் போகட்டும் - கோடிக்கணக்கான வருடங்களாக இந்த நிகழ்ச்சிப் போக்கு நடந்து கொண்டிருக்கையில் குறைந்த பட்சம் இந்த பூமி அது உள்ளடங்கியிருக்கும் பால்வழி மண்டலத்தையாவது (Milky Way Galaxy) என்றோ தாண்டியிருக்க வேண்டாமா?. தாண்டியே சென்றிருக்க வேண்டும். ஆனால் ஏன் தாண்டவில்லை?.
ஆகாயத்திற்கு ஓர் எல்லை உண்டு என்று பரிசுத்த குர்ஆன் கூறியதையோ, அல்லது பால்வழி மண்டலம் (அதைப்போன்று பற்பலவும்) உண்டு என அதே பரிசுத்த குர்ஆன் கூறுவதையோ (இதுபற்றிய விபரம் இன்ஷா அல்லாஹ் வேறு தலைப்பில் ஆய்வு செய்வோம்) நீங்கள் மறுக்கிறீர்களா?. இல்லை. நவீன அறிவியலின் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் (Telescope) பேரண்டத்தின் எல்லைகளையே நமக்குக் காட்டி, இப்பேரண்டம் ஓர் எல்லைக்குட்பட்டதே என 1400 வருடங்களுக்கு முன்பே அறிவியல் பேருலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய பரிசுத்த குர்ஆனை மெய்ப்பித்து நிற்கையில் நீங்கள் குர்ஆனை மறுக்க முடியாது. பேரண்டத்திற்கு ஓர் எல்லை இருப்பதும் உண்மை: அந்தப் பேரண்டத்திற்குள் பூகோளமும், ஏனைய யாவும் விண்ணோட்டம் நிகழ்த்தி கொண்டிருப்பதும் மெய்யே என ஒப்புக் கொண்ட பிறகு, விண்ணோடிக் கொண்டிருக்கும் இப்பொருட்கள் என்றேனும் ஒரு நாள் அதற்குள்ளிலிருந்து விலகிச் செல்லுமா, செல்லாதா என்ற வினா எழுகிறதா இல்லையா?.
அறிவார்ந்த நண்பர்களே! மேற்கண்ட அதே வினாவை வேறு வார்த்தைகளில் கேட்டால் எப்படிக் கேட்கலாம்?. ஆகாயமும், பூமியும் விலகுவதற்குரிய வாய்ப்பு உண்டா என்று கேட்கலாம். இப்படியொரு கேள்வியைக் கேட்க வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ஞானக் களஞ்சியமாம் பரிசுத்த குர்ஆன் (அதை மெய்ப்பிக்க வந்த அறிவியலும்) அறைந்தது: விலகாது! விலகவே விலகாது! ஏனெனில் விலகாதவாறு அவைகளைப் படைத்த அதியற்புதப் படைப்பாளனாகிய அதனுடைய படைப்பாளன்தான் அதனைத் தடுத்துக் கொண்டிருக்கிறான் என்று.
(இந்த இடத்தில் சகோதரர்கள் யாரும் அவசரப் பட வேண்டாம். இவை யாவும் ஒரு குறிப்பிட்ட தவணை (35:45) வரைதான் என்பதை வேறு தலைப்பில் நாம் விவாதிப்போம், இன்ஷா அல்லாஹ்)
விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறுகிறதே பரிசுத்த குர்ஆன். இதிலாவது உங்கள் எவருக்கும் ஐயம் ஏற்படுமா?. அப்படி ஏதேனும் ஐயம் ஏற்படுமேயானால் இரண்டு காரணங்களால் உங்கள் ஐயம் விலகியாக வேண்டும். முதல் காரணம் மெய்யாகவே பூகோளத்தின் விண்ணோட்டம் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டும் இலக்கில் அமைந்திருந்தால் தற்போது நமது பூமி பால்வழி மண்டலத்தில் இருந்திருக்க முடியாது. ஏன்?. ஏனென்றால் பூமியின் திசை வேகம் இம்மண்டலத்தை என்றோ - அதைத் தாண்டச் செய்திருக்கும். எப்படி?.
எப்படியென்பதைப் பார்ப்போம். பால்வழி மண்டலத்தின் பருமன் 10,000 ஒளியாண்டுகள் ஆகும். ஒளியாண்டு (Light year) என்பது ஒரு மூலப் பொருளிலிருந்த புறப்படும் ஒளி வருடம் முழுவதும் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால் எவ்வளவு தொலைவை அது கடக்குமோ, அவ்வளவு தொலைவு என்பது அதன் பொருள். ஒளி ஒரு வினாடியில் செல்லும் தொலைவு (தூரம்) 3,00,000 கி. மீ. ஆகும். இதன்படி நிதானமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு மணி நேர ஒளித்தூரம் என்பது 10,000 மணிநேர பூமி பயணத் தூரத்திற்கு சமமாகும். ஆகவே 10,000 ஒளி வருடப் பருமன் கொண்ட பால்வழி மண்டலத்தை பூகோளம் வெறும் 10 கோடி வருடத்திற்குள்ளாகவே கடந்து சென்றிருக்கும். ஆனால் பேரண்டத்தில் பூகோளம் உருவாகி 500 கோடி வருடங்களாக பூகோளத்தின் விண்ணோட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தும் கூட, இந்த பூகோளம் பால்வழி பெருமண்டலத்திலேயேதான் இருந்து வருகிறது. ஆகவே விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறும் பரிசுத்தக் குர்ஆனை நம்பித்தான் ஆக வேண்டும் என முதல் காரணத்தில் காணப்படும் அறிவியல் பேருண்மையே நம்மீது நிர்ப்பந்தம் செலுத்துகிறது.
அருமை நண்பர்களே! அறிவியல் அபிமானிகளே! அடுத்த காரணத்தைக் காண்போம்.
பெண்களின் ஜனாஸா
ஒவ்வொருவர் மீதும் அல்லாஹ் மரணத்தை விதித்துவிட்டான். நிரந்தரமாக இருப்பது என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சொந்தம்.''(மிக்கவல்லமையும்) கண்ணியமும் சங்கையும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.'' (அல்குர்ஆன் 55:27)
'நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் வந்தடைந்தே தீரும் மிகவும் உறுதியாக கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே" (4:78)
ஜனாஸாக்களில் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைச் செயல்படுத்துவது உயிரோடு உள்ளவர்கள் மீது கடமையாகும். அவற்றில் பெண்கள் சம்பந்தப்பட்டவைகளை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.
1. பெண்களின் ஜனாஸாவை பெண்களே குளிப்பாட்ட வேண்டும்.
ஆண்கள் பெண்கள் ஜனாஸாவை குளிப்பாட்டுவது கூடாது இறந்துபோன பெண்ணின் கணவன் மட்டும் தன் மனைவியை குளிப்பாட்ட அனுமதியுண்டு, ஆண் ஜனாஸாவை ஆண்களே குளிப்பாட்ட வேண்டும். இறந்து போன ஆணின் மனைவி மட்டும் தான் கணவனைக் குளிப்பாட்ட அனுமதியுண்டு.அலி(ரழி) அவர்கள் தம் மனைவியான பாத்திமா (ரழி) அவர்கள் இறந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.அபூபக்கர்(ரழி) அவர்கள் மரணமடைந்தபோது அவர்களின் மனைவி அஸ்மா பின்த் உமைஸ்(ரழி) அவர்களின் ஜனாஸாவை குளிப்பாட்டினார்கள்.
2. பெண் ஜனாஸா ஐந்து துணிகளில் கஃபன் செய்யப்படுவது சிறந்தது.
கீழங்கி, தலையில்போடும் துணி, சட்டை அதற்குமேல் இரண்டு துணியைக் கொண்டு ஜனாஸாவின் உடம்பு முழுவதும் மூடப்படும்.''நபி(ஸல்) அவர்களின் மகள் உம்மு குல்ஸ_ம்(ரழி) மரணமடைந்தபோது அவர்களின் ஜனாஸாவை குளிப் பாட்டியவர்களில் நானும் ஒருத்தியாக இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவிற்கு அணிவிப்பதற்காக முதல் முதலாக எங்களிடம் தந்தது கீழங்கி, பின்னர் சட்டை பின்னர் தலையில் போடும் துண்டு, பின்னர் ஜனாஸாவை மூடுவதற்குண்டான துணி, பின்னர் அதே மாதிரி இன்னொரு துணியிலும் மூடப்பட்டார்கள்'' என லைலா அத்தகபிய்யா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூதாவுத்)
3. பெண் ஜனாஸாவின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்னால் போடவேண்டும்.
நபி(ஸல்) அவர்களின் மகளுடைய ஜனாஸாவை குளிப்பாட்டுவது பற்றி உம்முஅதிய்யா(ரழி) அறிவிக்கும் போது ''அவர்களின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்பக்கம்போட்டோம்'' என்று குறிப்பிடுகிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
4. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து பெண்கள் செல்லுதல்.
''ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வது எங்களுக்கு தடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அது கண்டிப்பான முறையில் தடுக்கப்படவில்லை'' என உம்மு அதிய்யா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
5. கப்ர் ஸியாரத் பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.
''கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்'' என அபூஹாரைரா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், திர்மிதி மற்றும் இப்னுமாஜா.)
6. ஒப்பாரி வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஒப்பாரி வைப்பதும், ஆடைகளைக் கிழிப்பதும் கன்னத்தில் அடிப்பதும் முடியைப் பிடுங்குவதும் முகத்தைப் பறண்டுவதும், தகாத வார்த்தைகளைக் கூறுவதும் இதுபோன்ற அல்லாஹ் விதித்த விதியில் பதட்டத்தை ஏற்படுத்துகின்ற செயல்களைச் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது பொறுமை இழந்து நிற்பது பெரிய குற்றமாகும்.'
'துன்பத்தின்போது கன்னத்தில் அடிப்பவனும் சட்டையை கிழிப்பவனும் அறியாமை காலத்து பிரார்த்தனையைச் செய்பவனும் நம்மைச் சார்ந்தவனல்ல'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.மேலும்,
''சோதனையின்போது சப்தத்தை உயர்துப வளை விட்டும் தலைமுடியை மளிப்பவளை விட்டும், ஆடையை கிழித்துக் கொள்பவளை விட்டும் நான் ஒதிங்கிக் கொண்டேன்'' என்றும் நபி(ஸல்) கூறினார்கள்.
''ஒப்பாரி வைப்பவளையும் ஒப்பாரியைக் கேட்டு மகிழ்பவளையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.'' (நூல்: முஸ்லிம்)
முஸ்லிம் சகோதரியே! சோதனையின்போது இதுபோன்ற தடுக்கப்பட்ட செயல்களை விட்டும் ஒதுங்கிக்கொள்! சோதனையின்போது பொறுமையைக் கடைபிடித்துக் கொள்! உனக்கு ஏற்படக்கூடிய சோதனை உன்னுடைய பாவத்திற்கு பரிகாரமாகவும் உன்னுடைய நன்மையை அதிகரிக்கக் கூடியதாகவும் அமைந்துவிடும்.அல்லாஹ் கூறுகிறான்: ''நிச்சயமாக நாம் உங்களை அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச் சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம், (ஆனால்) பொறுமையுடையோருக்கு நபியே! நீர் நற்செய்தி கூறுவீராக!''
!''''அவர்களுக்கு துன்பம் ஏற்படும்போது நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், கிருபை யும் உண்டாகின்றன. இன்னும் இவர்களே நேர்வழியை அடைந் தவர்கள். (அல்குர்ஆன்: 2:155, 157)
அதேநேரத்தில் ஒப்பாரியும், அனுமதிக்கப்படாத செயல்களும், அல்லாஹ்வின் விதியின் மீது கோபப் படுவதும் இல்லாத அழுகை ஆகுமானதாகும். ஏனெனில் அப்படி அழுவது மரணித்தவரின் மீதுள்ள அன்பையும் உள்ளத்தில் மென்மையையும் காட்டுவதுடன் மனிதனால் தடுக்கமுடியாத ஒன்றாகவும் உள்ளது. எனவே அது ஆகுமானதாகிறது. சில வேளை அது அனுமதிக்கப் பட்டதாகவும் சில வேளை அது விரும்பத்தக்கதாகவும் ஆகிறது. அல்லாஹ் உதவப் போதுமானவன்

Monday, October 5, 2009

விரும்புகிறீர்களா...!


உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஒரு நாளில் நூறு தடவை سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?
ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா?
ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா?
அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?
ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா?
ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?
நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)
அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?
விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?
யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?
ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா?
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?
சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை) سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)


கண்திருஷ்டி - மந்திரித்தல் - ஓதிபார்த்தல்
ஈமானின் ஒழுங்குகள்

1. கண்திருஷ்டி என்றால் என்ன?
தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது பார்வைக்கு கண்திருஷ்டி அல்லது கண்ணேறு என்று கூறுவார்கள்.நபி (ஸல்) அவர்கள், 'கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: புஹாரி 5740, 5944,)
'ஆந்தையினால் ஏதும் இல்லை, (ஆந்தை அலறுவதால் ஏதும் இல்லை) கண்ணேறு உண்மையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹாபிஸ் அத்தைமீமி (ரலி), நூல்: திர்மிதி 2140)
2. கண்திருஷ்டி எவ்வாறு ஏற்படுகிறது?
கண்திருஷ்டி கெட்டவர்களினால் ஏற்படுகிறது, அதற்கு நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸ் ஆதாரமாகும்.
கண்ணேறு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, 'அது ஷைத்தானின் வேலையாகும்' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அபூதாவூது 3859)
3. கண்திருஷ்டியின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும்?
கண்ணேறு முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரையை உண்டாக்கும். அதற்கான ஆதாரம்.
நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில் இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5739)
கண்திருஷ்டியினால் வியாதிகள், சுகவீனம் உண்டாகும் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.
விதியை மாற்றுவதை மாற்றும் வலிமை வாய்ந்தது. அதற்கான ஆதாரம்.
'அல்லாஹ்வின் தூதரே! ஜஃபரின் குழந்தைகளுக்கு அடிக்கடி கண்பட்டு விடுகிறது. அவர்களுக்காக நான் மந்திரிக்கலாமா? என்று அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்! விதியை வென்று விடக்கூடிய ஒன்று இருக்குமானால் கண்ணேறு அதை வென்றுவிடும்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபைத் பின் ரிபாஆ அஸ்ஸுரகீ (ரலி), நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா 3510, திர்மிதி 2136)
விதியை எதுவும் மாற்றாது, மாற்ற முடியாது. அப்படி ஏதாவது ஒன்று இருந்திருந்தால் அதை (அந்த ஒன்றை) இந்தக் கண்ணேறு மாற்றும், விதியை மாற்றாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
4. கண்திருஷ்டியிலிருந்து மீள்வது எப்படி?
எளிமையான ஒரே வழி ஃபலக், நாஸ் என்ற அல்குர்ஆனின் கடைசி இரண்டு அத்தியாங்களை ஓதுவது தான்.
'ஃபலக், நாஸ் அத்தியாயங்கள் இறங்கும் வரை கண்ணேறு, ஷைத்தான் ஆகியவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள். அவ்விரு வசனங்களும் இறங்கிய பின் அதை எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டு விட்டார்கள்' என்று அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா 3511, திர்மிதி 2135)
மேற்கண்ட அத்தியாயங்களை ஓதுவதே கண்திருஷ்டி ஏற்படாமல் இருக்க வழியுமாகும்.
5. ஓதிப்பார்த்தல்:
கண்திருஷ்டியிலிருந்து மீள்வதற்கு ஓதிப்பார்க்க அனுமதி உண்டு. அதற்குரிய ஆதாரங்கள்.
'விஷகடி, கண்ணேறு, சிரங்கு ஆகியவற்றுக்காக மந்திரிக்க நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்' என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி 2132)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீய விளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள் அல்லது எனக்குக் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5738)
'சிரங்கு, கண்ணேறு ஆகியவற்றுக்குத் தவிர மந்திரித்தல் கிடையாது' நபிமொழி. (அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), நூல்: திர்மிதி 2134)
மந்திரித்தல் ஓதிப்பார்த்தல் இரண்டும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
நபி (ஸல்) அவர்கள் அனுமதித்த முறையில் ஓதிப்பார்ப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். அதுவல்லாத முறையில் ஓதிப்பார்ப்பது தடுக்கப்பட்டதாகும். அதற்குரிய ஆதாரங்கள்.
'யார் சூடுபோட்டுக் கொள்கிறாரோ அல்லது மந்திரிக்கிறாரோ அவர் தவக்குலில் (உறுதியான நம்பிக்கையில்) இருந்து நீங்கி விட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி), நூல்கள்: அஹ்மது, நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான், ஹாகிம், திர்மிதி 2131)
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கண்திருஷ்டியை கழிப்பதற்காக கட்டப்பட்ட கயிற்றை அறுக்குமாறு கட்டளையிட்டார்கள். மிருகங்களுக்கு கூட கறுப்புக் கயிறு கட்ட நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்க வில்லை. மனிதர்களுக்கு எப்படி அதை கட்ட முடியும்.
நான் அல்;லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பிரயாணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன கண் திருஷ்டி கழிவதற்காக கட்டப்படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது (காற்று கருப்பை விரட்டுவதற்காக கட்டப்படுகின்ற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும் என்று (பொது மக்களிடையே) அறிவிப்புச் செய்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் அப்போது மக்கள் தங்கள் உறங்கும் இடத்தில் இருந்தார்கள் என்று அபூபஷீர் (ரலி) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன் என்று கூறுகிறார்கள். (நூல்: புஹாரி 3005)
'எந்த வித விசாரணையும் இன்றி சொர்க்கம் செல்லும் எழுபதினாயிரம் பேர் ஓதிப் பார்க்காது, இறைவனையே சார்ந்திருப்பவர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 5705)இங்கே ஓதிப்பார்ப்பது என்பது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையில் அமையாததை குறிக்கும். நபி (ஸல்) அவர்கள் தனக்குத் தானே ஓதிப்பார்த்திருக்கிறார்கள் என்பதிலிருந்தும் அனுமதிக்கப்பட்ட முறையில் ஓதிப்பார்க்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
6. ஓதிப்பார்க்கும் முறை:
நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வொரு இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் குல்ஹுவல்லாஹுஅஹத், குல்அவூது பிரப்பில் ஃபலக், குல்அவூது பிரப்பின் னாஸ் ஆகிய (112,113,114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம் பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி), நூல்: புஹாரி 5017)
7. நடை முறை:
நடை முறையில் கண்திருஷ்டியை கழிக்க 'தலைசுற்றிப் போடுதல்' என்ற முறை உள்ளது. இது மாற்றுமத சமூகத்திலிருந்து முஸ்லிம் சமுதாயத்தில் நுழைந்து விட்ட வழக்கமாகும். பட்ட மிளகாய், உப்பு, முச்சந்தி மண், வீட்டுக் கூறையின் ஓலை இவை போன்றவற்றை கண்திருஷ்டி பட்டவரின் தலையை மூன்று முறை சுற்றி நெருப்பில் போட்டு விடுவார்கள். இன்னும் இது போன்ற வழக்கங்களும் நடைமுறையில் உள்ளன.
இம்முறைகள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டிய மூடப்பழக்கமாகும். இதனால் கண்திருஷ்டி குணமாகாது.

ஜின்கள் - ஷெய்த்தான்கள் பற்றி அறிய வேண்டியத் தகவல்கள்

ஷைத்தான் பிடித்தல்:
ஜின்கள் நமது உடலில் புகுந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறது, அது தான் பேய் என்பது மற்றொரு சாரார் கருதுகிறார்கள். அதற்கு ஆதாரமாக இந்த குர்ஆன் வசனத்தை தருகிறார்கள்.
'யார் வட்டியை உண்கிறார்களோ அவர்கள் மறுமையில் ஷைத்தான் பிடித்தவனைப் போலவே எழுவார்கள்' (அல்குர்ஆன் 2:275)
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் தோழரும் திருக்குர்ஆன் விரிவுரையாளருமான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த வசனத்தை விளக்கும் போது, ஷைத்தானின் தீண்டுதல் அல்லது ஷைத்தான் பிடித்தல் என்பது பைத்தியம் பிடித்தல் என்று சொன்னார்கள்.
அதாவது, 'யார் வட்டியை உண்கிறார்களோ அவர்கள் மறுமையில் பைத்தியம் பிடித்தவனைப் போலவே எழுவார்கள்' என்பது பொருளாகும்.
ஜின்களாலும் பேய் பிடிக்க வாய்ப்பில்லை.
ஜின்களால் பாதிப்புக்கள்:
ஜின்களால் மனிதர்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்புக்கள் ஏற்படுகின்றது என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அப்போது தான் ஜின்கள் பற்றிய சந்தேகங்கள் முழுமையாக நீங்கும்.
ஷைத்தானின் தூண்டுதல்:
'ஆதமுடைய மக்களிடம் ஷைத்தானுக்கு ஓர் ஆதிக்கம் உண்டு. அதுபோலவே வானவருக்கும் ஒர் ஆதிக்கம் உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி), நூல்: திர்மிதி)
இந்த ஹதீஸின் படி நம் உடலில் உள்ள ஷைத்தான் தவறைச் செய்யும்படி தூண்டுவான். அதே நேரம் வானவர் அந்த தவறைச் செய்யாதே என்ற விஷயத்தை மனதில் ஏற்படுத்துவார். இரண்டும் சரிசமமான தூண்டுதல்கள் தான். அந்தத் தவறை செய்வதும் செய்யாது விடுவதும் மனிதனின் விருப்பத்தைப் பொருத்தது.
மாறாக அந்த ஷைத்தான் அந்தத் தவறை செய்யும் படி மனிதனை வற்புறுத்த முடியாது. அந்த அளவுக்கு சக்தியும் அவனுக்கு கொடுக்கப்பட வில்லை.
தூண்டுதல் மட்டும் தான் இந்த ஷைத்தானின் வேலை.
சந்தேகத்தை உண்டாக்கும் ஷைத்தான்:
பதுங்கியிருந்து வஸ்வாஸ் எனும் வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் (ஷைத்தானின்) தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 114:4-6)
நபி (ஸல்) அவர்கள் தன் மனைவியோடு பேசிக் கொண்டிருந்த போது அவர்களைக் கடந்து சென்ற தனது தோழர்களை அழைத்து இவர் எனது மனைவி இன்னார் என்று சொல்கிறார்கள். ஆச்சர்யப்பட்டுப் போன தனது தோழர்களிடம், 'ஷைத்தான் மனிதர்களின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்' என்ற விஷயத்தை சொல்கிறார்கள். (அறிவிப்பவர்: ஸபிய்யா (ரலி), நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது - ஹதீஸின் சுருக்கம்)
சந்தேகம் தன் மீது வந்து விடக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள்.
தொழுகையை கெடுக்கும் ஷைத்தான்:
ஷைத்தான் என் தொழுகையையும் ஓதுதலையும் குழப்பிக் கெடுக்கிறான் என்று நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அவன் கின்ஸப் என்ற ஷைத்தானாவான். அந்த நிலையை நீ உணர்ந்தால் அவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி உமது இடப்புறம் நீ மூன்று முறை துப்பு' என்றார்கள். நான் அவ்வாறு செய்தேன் அதை அல்லாஹ் என்னை விட்டும் நீக்கி விட்டான் என்று உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்).
மற்றொரு ஹதீஸில் தொழுகைக்காக தக்பீர் கட்டி விட்டால் ஷைத்தான் வந்து அதை நினைத்துப் பார், இதை நினைத்துப் பார் என்று சொல்லி தொழுகையை கெடுப்பான் என்று வந்துள்ளது.தொழுகையை ஷைத்தான் கெடுப்பான், ஆனால் பேய் பிடிக்க வைக்க முடியாது.
வழிகெடுக்கும் ஷைத்தான்:
'உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நான் அவர்கள் யாவரையும் நிச்சயமாக வழிகெடுப்பேன் என்று இப்லீஸ் கூறினான், எனினும் அவர்களில் அந்தரங்க சுத்தியுள்ள உன் அடியார்களைத் தவிர என்றான்' (அல்குர்ஆன் 38:82,83)
இக்லாஸ் எனும் உள்ளத்தூய்மை இல்லாதவர்களை ஷைத்தான் எளிதில் வழிகெடுத்து விடுவான் என்று இந்த குர்ஆன் வசனம் கூறுகிறது.
ஜோதிடர்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் ஜோதிடர்கள் கூறுவதில் சில உண்மைகள் உள்ளதே! எனக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இப்படி உண்மையென ஒன்றை நம்ப வைத்து நூறு பொய்களை மிகைப்படுத்திச் சொல்வார்கள். இது ஷைத்தானின் விளையாட்டாகும் என்றார்கள். (நூல்: முஸ்லிம்)
ஜோதிடர்கள் உண்மைகளை அறிய முடியாத அளவிற்கு அல்லாஹ் எரிநட்சத்திரங்களை வானத்தில் ஏற்பாடு செய்து வைத்து ஜின்களுக்கு தடையை ஏற்படுத்தி விட்டான். இனிமேல் ஜோதிடர்கள் வானத்திலிருந்து கிடைக்கும் செய்தியை அறிந்து கொள்ள முடியாது.
மொத்தத்தில் இஸ்லாத்தோடு தொடர்பில்லாத அதன் சட்டதிட்டங்களை அறிந்திராதவர்களின் மனங்களை ஷைத்தான் ஆக்கிரமிப்பு செய்வான். அவர்களை படாதபாடு படுத்துவான் என்பதை ஒருவரியில் சொல்ல முடியும்.
தீய ஜின்களிலிருந்து பாதுகாப்பு:
1. 'உங்களுக்கு ஷைத்தானிடமிருந்து ஏதேனும் ஊசலாட்டம் (தீயதைச் செய்ய) உம்மை தூண்டுமாயின் உடனே அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்வீராக' (அல்குர்ஆன் 41:36)
2. 'நீர் கூறுவீராக! என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகின்றேன்' (அல்குர்ஆன் 23:97)
3. 'நீங்கள் இரவில் நாய் ஊளையிடுவதைக் கேட்டால், கழுதை கத்துவதைக் கேட்டால் அவைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள். ஏனெனில் அவை நீங்கள் காணாத (கெட்ட)வைகளைக் காண்கின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூது)
4. 'ஆயத்துல் குர்ஸி' (2:255) வசனத்தையும் சூரத்துல் பகராவின் கடைசி இரு வசனங்களையும் (2:285,286) ஓதினால் ஷைத்தானின் தீங்குகளிலிருந்து இறைவனின் பாதுகாப்பு கிடைக்கும். (நூல்: புகாரி)
'ஆயத்துல் குர்ஸி' வசனத்தை எவர் காலைப் பொழுதை அடையும் போது கூறினாரோ அவர் மாலைப்பொழுதை அடையும் வரை ஜின்களின் தீங்குகளிலிருந்து காக்கப்படுவார். இன்னும் மாலையில் அதை எவர் கூறினாரோ அவர் காலைப் பொழுதை அடையும் வரை ஜின்களின் தீங்குகளிலிருந்து காக்கப்படுவார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: ஹாக்கிம், தப்ரானி)
5. நபி (ஸல்) அவர்கள் ஷைத்தானை விட்டும் மனித கண்ணை விட்டும் (பல வகைகளில்) பாதுகாப்புத் தேடிவந்தார்கள். ஃபலக், நாஸ் (அத்தியாயம் 113,114) அத்தியாயங்கள் இறங்கியதும் அவ்விரண்டையும் எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டுவிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: திர்மிதி, இப்னுமாஜா)
நகரங்கள்:
ஜின்கள் மனிதர்கள் வசிக்கும் நகரங்களில் அல்லது ஊர்களில் வசிக்கிறார்கள் அதற்கு ஆதாரமாக இந்த ஹதீஸ் உள்ளது.
'...நஸீபைனிலிருந்து ஜின்களின் பிரதிநிதிகள் என்னிடம் வந்தார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
இங்கே நஸீபைன் என்பது ஒர் ஊரையோ அல்லது இடத்தையோ குறிக்கும்.
குப்பை கொட்டும் இடங்கள்:
'...அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட கால்நடைகளின் எலும்புகள் உங்களின் உணவாக இருக்கின்றன. இறைச்சி நிறைந்ததாக அதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.' என்று ஜின்கள் தங்களது உணவு எது என்பது பற்றி கேட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி), நூல்: முஸ்லிம் 903)
கழிப்பிடங்கள்:
எலும்புகளாலும் கால்நடைகளின் விட்டைகளாலும் சுத்தம் செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு தடை விதித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 504)
ஜின்களின் இருப்பிடமாக கழிப்பிடங்கள் இருப்பதால் ஒரு துஆவை ஓதும் படி நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்.
'அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் ஹுப்தீ வல் ஹபாஇத்' - (பொருள்: இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.) (நூல்: முஸ்லிம் 729, திர்மிதி 6)
ஒட்டகங்கள் கட்டுமிடங்கள்:
'ஒட்டகத் தொழுவத்தில் தொழ வேண்டாம், அது ஷைத்தான் குடியிருக்கும் இடமாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அல்பர்ரா இப்னு ஆஸிப் (ரலி), நூல்: அபூதாவூது)
ஷைத்தான் என்பது கெட்ட ஜின்களைக் குறிக்கும் சொல்லாகும்.
'அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்' (அல்குர்ஆன் 18:50)
மண்ணறைகள்:
மண்ணறைகளிலும் கழிப்பறைகளிலும் தொழுவது தடுக்கப்பட்டுள்ளது' நபிமொழி (அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரீ (ரலி), நூல்கள்: திர்மிதி, அபூதாவூது)
மண்ணறைகளில் தொழுவது சிலை வணக்கத்தை ஒத்ததாக இருக்கும் அதேவேளை அங்கே ஜின்களும் குடியிருக்கிறார்கள் என்பதனாலேயே கழிப்பறையும் சேர்த்தே இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது.
காற்று மண்டலம்:
ஜின்கள் மனிதர்களிடமிருந்து வித்தியாசப்படுவது அதன் பறக்கும் சக்தியாகும். அவை முதல் வானம் வரை பறந்து செல்லும் சக்தி கொடுக்கப்பட்டுள்ளது.
'நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம் அது கடுமையான காவலாளிகளாலும் தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை நாங்கள் கண்டோம்' என்று ஜின்கள் கூறின. (அல்குர்ஆன் 72:8)
தெருக்கள்:
'(மாலையும் இரவும் சந்திக்கும்) அந்தி நேரத்தில் உங்கள் குழந்தைகளை வீட்டினுள் வைத்திருங்கள், அது ஷைத்தான் வெளிவரும் சமயம் ஆகும்' நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: முஸ்லிம்)
திறந்த வெளி:
'...(சிறுநீர் கழித்த பின்) சுத்தம் செய்வதற்காக சிறுகற்களை எடுத்துக் கொள்ளும், விட்டைகளையும் எலும்புகளையும் எடுக்காதீர்...' என்று அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
அடர்ந்த காடுகள்:
(மனிதர்கள் மலம், ஜலம், கழிக்க ஒதுங்குகின்ற) இந்த பேரீத்தமரங்கள் அடர்ந்த காடுகள் (ஜின், ஷைத்தான்கள் அடிக்கடி) வந்து போகும் பகுதிகளாகும். எனவே உங்களில் ஒருவர் (அப்படிப்பட்ட) கழிப்பிடத்திற்கு வரும்போது, அவர், 'அவூது பில்லாஹி மினல் குபுஸி வல்கபாயிஸி' என்று கூறுவாராக! என அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூது 6)
இந்த ஹதீஸை இப்னுமாஜா அவர்களும், நஸயீ அவர்கள் தனது ஸுனன் அல்குப்ராவிலும் பதிவு செய்துள்ளார்கள்.
குளியலறைகள்:
ஒரு மனிதன் அவனுடைய குளிக்குமிடத்தில் சிறுநீர் கழித்திட நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். வஸ்வாஸ் (எனும் மன ஊசலாட்டம்) இதனால் தான் ஏற்படுகிறது என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரலி), நூல்: அபூதாவூது 27, திர்மிதி 21, இப்னுமாஜா, நஸயீ, அஹ்மத்)
குளியலறையும் அடக்கத்தலத்தையும் தவிர நிலப்பரப்பு முழுவதும் தொழுமிடமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: திர்மிதி 316)
பதுங்கியிருந்து வஸ்வாஸ் எனும் வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் (ஷைத்தானின்) தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 114:4-6)
பொந்துகள்:
பொந்துக்குள் சிறுநீர் கழிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று அப்துல்லாஹ் பின் சார்ஜில் அறிவிக்கிறார்கள். பொந்துக்குள் சிறுநீர் கழிக்க தடை செய்யப்பட்டதன் காரணம் என்ன என்று (அறிவிப்பாளர்) கதாதா அவர்களிடம் கேட்கப்பட்டது. பொந்துகள் ஜின்கள் வசிக்கும் இடம் என்று சொல்லப்பட்டதாக அவர் பதில் சொன்னார். (நூல்: அபூதாவூது 29)

மார்க்க வியாபாரிகள்...


அழைப்பாளர்கள் சிந்திக்கட்டும் (ஜிஎன்)

وَآمِنُواْ بِمَا أَنزَلْتُ مُصَدِّقاً لِّمَا مَعَكُمْ وَلاَ تَكُونُواْ أَوَّلَ كَافِرٍ بِهِ وَلاَ تَشْتَرُواْ بِآيَاتِي ثَمَناً قَلِيلاً وَإِيَّايَ فَاتَّقُونِ
உங்களிடமிருப்பதை (வேதத்தை) உண்மைப் படுத்தும் விதமாக நான் அருளியதை (குர்ஆனை) நம்புங்கள்! அதை மறுப்பவர்களில் முதன்மையானவராக நீங்கள் ஆகிவிடாதீர்கள்! எனது வசனங்களை அற்பக்கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்! என்னையே அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 2:41)
தங்கள் மார்க்கத்தையும் வேதத்தையும் வியாபாரப் பொருட்களாக ஆக்கிவிட்ட நபி(ஸல்) காலத்து யூத கிறித்தவர்களை நோக்கி இந்த வசனம் பேசுகின்றது. இந்த கருத்தில் இன்னும் பல வசனங்களும் உள்ளன. (பார்க்க 5:44, 3:187, 3:199)
இவ்வசனங்கள் நேரடியாக இவ்விரு சமுதாயங்களைக் குறிப்பிட்டாலும் வேதத்தை வியாபாரமாக்கும் முஸ்லிம்களும் இதில் அடங்குவார்கள் என்பதை அறிவுடையோர் மறுக்க மாட்டார்கள். இறைவனின் இந்தத் தெளிவான கட்டளை அப்பட்டமாக அலட்சியப்படுத்தப்படும் நிலையை முஸ்லிம்களிடம் நாம் காண்கிறோம். முஸ்லிம் சமுதாயத்தில் பெரும் பகுதியினர் மார்க்கத்தையும், வேதத்தையும் விற்பவர்களாகவோ விலைக்கு வாங்குபவர்களாகவோ இருப்பதையும் காணமுடிகின்றது.
இதற்குக் காரணம் என்ன? இந்த வசனம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கவேண்டும். அல்லது அறவே இவ்வசனங்கள் புரிந்து கொள்ளப்படாமலிருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களைத் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது.
வேதத்தையும் அந்த வேதம் கற்றுத்தரும் மார்க்கத்தையும் அந்த மார்க்கத்தில் வலியுறுத்தப்படும் வணக்கங்களையும் வியாபாரமாக்கி விட்டார்கள். அந்த வியாபாரத்தையும் நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதை நாம் காண்கிறோம். அதற்கு சில ஆதாரங்களையும் வாதங்களையும் முன் வைக்கின்றனர். அவற்றைப் பார்த்து விட்டு இந்த வசனத்தின் சரியான விளக்கத்தைக் காண்போம்.
நபித்தோழர்களில் சிலர் ஒரு தண்ணீர்த் துறையைக் கடக்கலானார்கள். அந்தத் தண்ணீர்த் துறைக்குரியவர்களில் ஒருவர் விஷக்கடிக்கு ஆளாகி விட்டார். உடனே அவர்கள் நபித்தோழர்களிடம் வந்து 'உங்களில் மந்திரிப்பவர் எவருமுண்டோ?' என்று கேட்டார்கள். உடனே நபித்தோழர்களில் ஒருவர் புறப்பட்டுச் சென்று ஆட்டுக்குக் கூலியாக ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதினார். (விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்ததும்) கூலியாகப் பெற்ற ஆட்டையும் தோழர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதிருப்தியுற்று அல்லாஹ்வின் வேதத்துக்குக் கூலி வாங்கி விட்டீரே என்று கூறினர். முடிவில் மதீனாவுக்கு வந்து 'அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் அல்லாஹ்வின் வேதத்துக்குக் கூலி பெற்று விட்டார்' எனக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் கூலி பெறத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமாகும்' எனக் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.
மற்றொரு அறிவிப்பில் மந்திரிக்கச் சென்ற நபித்தோழர், அவர்களிடம் சில ஆடுகள் தர வேண்டும் என்று பேரம் பேசி அல்ஹம்து அத்தியாயத்தை ஓதிப்பார்த்ததாகவும், அவர் உடனடியாக நிவாரணம் பெற்றதும் பேசியபடி ஆடுகளைப் பெற்றதாகவும், அதைப் பங்கு வைக்குமாறு சிலர் கூறியதாகவும் அப்போது மந்திரித்தவர், 'நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதைக் கூறி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறியாமல் நாம் பங்கு வைக்க வேண்டாம்' என்று கூறியதாகவும் அவ்வாறே நபி(ஸல்) அவர்களிடம் வந்து விபரம் கூறிய போது 'அந்த அத்தியாயம் ஓதிப்பார்க்கத்தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு 'நீங்கள் செய்தது சரியானதே! அதைப் பங்கு வையுங்கள்! எனக்கும் ஒரு பங்கைத் தாருங்கள்!' என்ற கூறி சிரித்ததாகவும் கூறப்படுகின்றது. அபூஸயீத்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
காரிஜா இப்னுஸ் ஸல்த் என்பவரின் சிறிய தந்தை நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து விட்டு திரும்பும் போது ஒரு கூட்டத்தினரைக் கடந்தார்கள். அவர்களில் இரும்பு (சங்கிலியால்) கட்டப்பட்ட ஒரு பைத்தியக்காரர் இருந்தார். அவரது குடும்பத்தினர் அந்த நபித்தோழரை நோக்கி 'உங்கள் தோழராகிய நபி(ஸல்) சிறந்த மார்க்கத்தைக் கொண்டு வந்துள்ளதாக அறிகிறோம். இந்தப் பைத்தியத்திற்கு உங்களிடம் ஏதேனும் வைத்தியம் உண்டா? என்றனர். அந்த நபித்தோழர் ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை வீதம் மூன்று நாட்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதிப் பார்த்தார். பைத்தியம் விலகியது. அவர்கள் அவருக்கு இருநூறு ஆடுகள் தந்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது 'அதை நீ வைத்துக் கொள்! தவறாக ஓதிப் பார்த்து உண்பதை விட இது சத்தியத்தை ஓதிப்பார்த்த கூலியாகும்' என்றார்கள். காரிஜா அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், நஸயீ, அபூதாவூத், இப்னு ஹிப்பான், ஹாகிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
வீடு வீடாகச் சென்று குர்ஆன் ஓதிவிட்டு கூலி வாங்கலாம். ரமளானில் குர்ஆன் ஓதி தொழ வைப்பதற்கு கூலி வாங்கலாம். தொழ வைப்பதற்கு சம்பளம் வாங்கலாம் என்பதற்கு இந்த ஹதீஸ்களை ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கின்றனர். குர்ஆனுக்குக் கூலி வாங்கலாம் என்று இந்த ஹதீஸில் தெளிவாகவே கூறப்படுவதால் இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் எடுத்து வைக்கும் வேறு சில ஆதாரங்களையும் நாம் காண்போம்.
ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தன்னை நபி(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது ஒரு மனிதர் எழுந்து தங்களுக்குத் தேவையில்லை என்றால் இப்பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள் என்றார். அவளுக்கு மஹராக வழங்க ஏதும் உம்மிடம் உள்ளதா? என்று நபி(ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர் 'இந்த எனது ஆடையைத் தவிர என்னிடம் வேறு ஏதும் இல்லை என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ உனது ஆடையை அவளுக்குக் கொடுத்தால் ஆடையே இல்லாமல் நீ இருக்க வேண்டி வரும். எனவே வேறு எதையாவது தேடுவீராக என்றனர். அதற்கு அவர் எனக்கு ஏதும் கிடைக்கவில்லை என்றார். அப்படியானால் ஒரு இரும்பு மோதிரத்தையாவது தேடுவீராக என்று நபி(ஸல்) கூறினார்கள். அவர் எதுவும் கிடைக்கவில்லை என்றார். குர்ஆனில் உமக்கு ஏதேனும் தெரியுமா? என நபி(ஸல்) கேட்டார்கள். இன்னின்ன அத்தியாயங்கள் தெரியும் என்று அந்த அத்தியாயங்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டார். உம்மிடம் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக உமக்கு நான் மணமுடித்துத் தந்தேன் என்று கூறினார்கள். லஹ்ல் பின் ஸஃது(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
மணப்பெண்ணுக்கு மஹர் தொகையாக நபி(ஸல்) அவர்கள் குர்ஆனையே ஆக்கியுள்ளதால் குர்ஆன் மற்ற பொருட்களைப் போலவே நபி(ஸல்) அவர்களால் கருதப்பட்டுள்ளது. எனவே குர்ஆனுக்குக் கூலி வாங்கலாம் என்பதும் இவர்களின் வாதம்.
எனக்கு நபி(ஸல்) அவர்கள் பாங்கைக் கற்றுத் தந்தனர். அவர்கள் கற்றுத் தந்தவாறு பாங்கு சொல்லி முடித்ததும் எனக்கு ஒரு பை தந்தனர். அதில் சிறிதளவு வெள்ளி இருந்தது என்று அபூமஹ்தூரா(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
பாங்கு என்பது ஒரு வணக்கம். இந்த வணக்கத்தை செய்து முடித்தபோது நபி(ஸல்) அவர்கள் அவருக்கு கூலி கொடுத்திருப்பதால் வணக்கங்களுக்கும் வேதத்துக்கும் கூலி வாங்கலாம் என்பதும் இவர்களின் வாதம்.
இந்த ஹதீஸ்கள் யாவும் ஆதாரப்பூர்வமானவை என்பதில் ஐயமில்லை. இவர்கள் கூறுவது தான் இதன் விளக்கம் என்றால் மேற்கண்ட வசனத்திற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். மேலும் பின்வரும் ஹதீஸ்களுக்கும் எந்த அர்த்தமும் இல்லாமல் போய் விடும்.
குர்ஆனை ஓதுங்கள்! அதில் வரம்பு மீறாதீர்கள்! அதை அலட்சியப்படுத்தாதீர்கள்! அதன் மூலம் சாப்பிடாதீர்கள். அதன் மூலம் (பொருளையும் புகழையும்) பெருக்கிக் கொள்ளாதீர்கள் என்று நபி(ஸல்) கூறியதாக அப்துர்ரஹ்மான் பின் ஷிப்ல்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.
நாங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த போது எங்களிடம் நபி(ஸல்) வந்தார்கள். எங்களில் அரபியரும் அரபியல்லாதவரும் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எல்லோருமே (அதாவது இரண்டு சாரார் ஓதுவதும்) அழகாகத்தான் உள்ளது. அம்பு (வளைவின்றி நேராக ஆக்கப்படுவது) போல் குர்ஆனை நேராக ஆக்கும் கூட்டத்தினர் தோன்றுவார்கள். (அதாவது உச்சரிப்புகள் ராகங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்) அவர்கள் (இம்மையிலேயே) அதன் கூலியை அவசரமாகத் தேடுவார்கள். மறுமைக் கூலிக்காகக் காத்திருக்க மாட்டார்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். ஜாபிர்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. இதே கருத்தை ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) அறிவிப்பதாகவும் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.
தமது பாங்குக்காக கூலி எதுவும் பெறாத முஅத்தினை நீ ஏற்படுத்துவாயாக என்பதே நபி(ஸல்) அவர்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட உடன்படிக்கையில் இறுதியானதாகும் என்று உஸ்மான் பின் அபில் ஆஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா, ஹாகிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ்கள் வணக்கங்களுக்கோ குர்ஆனுக்கோ இவ்வுலகக் கூலியைப் பெறலாகாது என்று அறிவிக்கின்றன. இவ்விரண்டு வகையான ஹதீஸ்களையும் இணைத்துத் தான் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
குர்ஆன் சம்பந்தமாக எந்தவித கூலியும் பெறக்கூடாது என்றால் முதல் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். குர்ஆனை எந்தவிதத்தில் பயன்படுத்தினாலும் கூலி வாங்கலாம் என்றால் இரண்டாம் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டு வகையிலான ஹதீஸ்களில் எதையும் மறுக்காமல் பொதுவான விளக்கத்துக்கு வருவது சிரமமானதல்ல. இரண்டு வகையான ஹதீஸ்களையும் நாம் சிந்திக்கும் போது இதை விளங்கலாம்.
குர்ஆன் ஓதுவது என்பது இரண்டு வகைகளில் அமைகின்றது. ஒன்று மனிதனுக்கு உதவுவதற்காக ஓதிப்பார்த்தல் போன்ற வழிகளில் பயன்படுத்துவது. மற்றொன்று மறுமைப் பயன் கருதி ஓதுவது. முதல் வகையில் பயன்படுத்தும் போது கூலி வாங்கலாம் என்பதை முதல் ஹதீஸ்கள் கூறுகின்றன. இரண்டாவது வகையில் பயன்படுத்தினால் கூலி வாங்கக் கூடாது என்பதை இரண்டாவது வகை ஹதீஸ்கள் கூறுபின்றன என்று விளங்கிக் கொண்டால் முரண் ஏதுமில்லை.
குர்ஆனை அச்சிட்டு விற்பனை செய்வதும் அதன் தமிழாக்கத்தை அச்சிட்டு விற்பதும் அதன் போதனைகளை அச்சிட்டு விற்பதும் குர்ஆனை விற்பது என்பதில் அடங்காது. வணக்க வழிபாடுகளுக்கு கூலி வாங்குவதுடன் இதை ஒப்பு நோக்க முடியாது. அச்சுத் தொழில், புத்தக விற்பனை என்பது தொழில் என்ற முறையில் முதலீடு செய்யப்படுகின்றது. அச்சிடுவோர், அச்சுக்கோர்ப்போர், பைண்டிங் செய்வோர் ஆகியோருக்கு சம்பளம் கொடுக்கப்படுகின்றது.
தொழில் என்ற முறையில் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர குர்ஆனை விற்பது என்ற குற்றத்தில் அடங்காது. வீடுவீடாகப் போய்க் குர்ஆனை ஓதுவதற்கும் ரமளானில் தொழுகை நடத்துவதற்கும் எந்த முதலீடும் செய்யப்படுவதில்லை. அது முற்றிலும் கலப்பற்ற வணக்கமாகும். இந்த வணக்கத்தைச் செய்து விட்டு கூலி கேட்பது குர்ஆனை விற்றதாகத்தான் அமையும்.
பாங்கு சொல்லிய பிறகு அபூமஹ்தூரா(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூலி வழங்கியுள்ளார்களே வணக்கங்களுக்கு கூலி கொடுக்கலாம் என்பதற்கு இது சான்றாக உள்ளதே என்ற கேள்வி தவறாகும்.
'கூலி வாங்காத முஅத்தினை ஏற்படுத்திக் கொள்வீராக!' என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்து விட்ட பிறகு நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நீண்ட காலம் முஅத்தின்களாகப் பணிபுரிந்த பிலால்(ரலி) அப்துல்லாஹ் இப்னு உம்மிமக்தும்(ரலி) ஆகியோருக்கு கூலி எதுவும் கொடுக்காமலிருந்த பிறகும் நபி(ஸல்) அவர்கள் அபூமஹ்தூரா(ரலி) அவர்களுக்கு வழங்கியது எப்படி பாங்கின் கூலியாக இருக்க முடியும்?
புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் என்பதால் பைதுல்மால் எனும் பொது நிதியிலிருந்து நபி(ஸல்) அவர்கள் வழங்கிய அன்பளிப்பாகவே அதைக் கருத முடியும்.
இன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்கலாம். வணக்கங்களுக்குக் கூலி வாங்கலாம் என்ற வாதத்தின்படி எல்லா வணக்கங்களுக்கும் கூலி வாங்கலாம் என்று ஆகும். நான் நோன்பு வைக்கப் போகிறேன். அதற்கு ஒரு நூறு ரூபாய் தாருங்கள் என்று கேட்க முடியுமா? இவ்வாறு கேட்க முடியாது என்றால் நான் தொழப்போகிறேன். அதற்கு இவ்வளவு ரூபாய் தாருங்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? நோன்பைப் போலவே தொழுகையும் குர்ஆன் ஓதுவதும் வணக்கம் தானே.
மார்க்கத்தை வியாபாரமாக ஆக்குவோர் மற்றோர் புதுமையான வாதத்தையும் எடுத்து வைக்கிறார்கள்.
நாங்கள் குர்ஆன் ஓதிவிட்டு வாங்குவது குர்ஆனுடைய கூலி அல்ல. எங்கள் நேரத்தை ஒதுக்கியதற்காகவே வாங்குகிறோம். அந்த நேரத்தில் வேறு வேலை செய்து நாங்கள் பொருள் திரட்டியிருப்போமல்லவா. அதை விட்டு விட்டு இதற்காக நேரத்தை ஒதுக்கியதற்கே கூலி வாங்குகிறோம் என்கின்றனர்.
ஒரு வேலை செய்வதென்றால் நேரத்தை ஒதுக்காமல் எந்த வேலையையும் செய்ய முடியாது. இந்தச் சாதாரண உண்மையைக் கூட விளங்காமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.
ஒருவர் சாராயக்கடையில் கணக்கெழுதச் சென்று சம்பளம் பெறுகிறார். நான் நேரம் ஒதுக்கியதற்காகவே சம்பளம் பெறுகிறேன் என்றும் கூறுகிறார் என்றால் நாம் அதை ஏற்கமாட்டோம். மார்க்கத்தை வியாபாரமாக ஆக்கக்கூடாது என்பதும், சாராயக்கடையில் கணக்கெழுதக்கூடாது என்பதும் இரண்டுமே மார்க்கத்தின் கட்டளை தான்.
எதை வியாபாரமாக ஆக்கக் கூடாது என்று மார்க்கம் சொல்கிறதோ அந்த வழிகளில் வியாபார நோக்கத்தில் ஒருவர் நேரத்தை ஒதுக்கவும் கூடாது என்றே கொள்ள வேண்டும். இல்லை என்றால் எல்லா பித்அத்களையும் எல்லா தவறுகளையும் நியாயப்படுத்த நேரிடும்.
மஹர் சம்பந்தமான ஹதீஸிலும் மார்க்கத்தை வியாபாரமாக்கும் போக்குக்கு ஆதாரம் கிடையாது. மஹர் என்பது பெண் தீர்மானிக்க வேண்டிய விஷயம். ஒரு பெண் எவ்வளவு கூடுதலாகவும், குறைவாகவும் மஹர் கேட்கலாம். விரும்பினால் தனக்கு மஹர் எதுவும் வேண்டாம் என்றும் கூறலாம். சம்பந்தப்பட்ட ஹதீஸில் அப்பெண்மணி தனக்குள்ள இந்த உரிமையை நபி(ஸல்) அவர்களின் கையில் ஒப்படைத்து விட்டார்.
நபி(ஸல்) அவர்கள் இயன்றவரை அவரிடம் மஹர் பெற முயற்சிக்கிறார்கள். இரும்பு மோதிரமாவது கொண்டு வா என்ற அளவுக்கு இறங்கி வருகிறார்கள். எதுவும் இல்லை என்ற நிலையில் அவர் குர்ஆனை அறிந்தவர் என்பதால் மஹர் இல்லாமல் அவருக்கு மணமுடித்துக் கொடுக்கிறார்கள்.
நல்ல குணமுடைய ஒரு மணமகன் கிடைக்கும் போது 'உங்கள் நற்குணமே போதும் மஹர் வேண்டாம்' என்று ஒரு பெண் கூறினால் நற்குணம் விலை பேசப்பட்டு விட்டது என்று எப்படி கருத முடியாதோ அது போன்றது தான் இதுவும். இதையெல்லாம் மார்க்கத்தை வியாபாரமாக்குவதற்கு சான்றாகக் காட்ட முடியாது.
வணக்கமாக அமைந்துள்ள இடங்களில் குர்ஆனைப் பயன்படுத்திவிட்டு கூலி கேட்கக் கூடாது. யூத கிறித்தவர்கள் அன்று வேதத்தையும் அதன் போதனைகளையும் மறைத்து விட்டு அதன் மூலம் உலக லாபங்களை அடைந்து வந்தனர். அது கூடாது என்பது தான் மேற்கண்ட வசனத்தின் பொருள் என்பதை அறிந்து கொண்டால் குழப்பங்களுக்கு இடமில்லை.

முஸ்லிம்கள் சந்திக்கும் போது....

முஸ்லிம்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது கை குலுக்கிக் கொள்வது சுன்னத்தாகும். (இதை அரபியில் முஸாபஹா என்று சொல்வார்கள்) முஸ்லிம்களில் பலர் இரண்டு கைகளையும் பற்றிக் கொள்வதே முஸாபஹா என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது பற்றிய விளக்கக் கட்டுரை.
இரண்டு கைகளால் ‘முஸாபஹா’ செய்ய வேண்டும் என்போர் புகாரியில் இடம் பெற்றுள்ள ஒரு ஹதீஸை ஆதாரமாகக் குறிப்பிடுகின்றனர். “நபி(ஸல்) அவர்கள் இப்னு மஸ்ஊது(ரழி) அவர்களுக்கு ‘அத்தஹியாத்’ கற்றுக் கொடுக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் தனது இரு கைகளால் இப்னு மஸ்ஊது(ரழி) அவர்களின் ஒரு கையைப் பிடித்திருத்தனர்.” என்பது தான் அந்த ஹதீஸ்நபி(ஸல்) அவர்கள் தனது இரு கைகளப் பயன்படுத்திய காரணத்தால். இரு கைகளால் “முஸாபாஹா’ செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கின்றனர் சிலர். இந்த ஹதீஸை ஆராயும் போது இரண்டு கைகளால் முஸாபஹா செய்வதற்கு இந்த ஹதீஸில் எவ்வித ஆதாரமும் கிடையாது என்பதை உணரலாம். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் ‘முஸாபஹா’ செய்யும் போது இரண்டு கைகளைப் பயன்படுத்தினார்கள் என்று இந்த ஹதீஸில் குறிப்பிடப்படவில்லை. மாறாக “அத்தஹிய்யாத்” கற்றுக் கொடுக்கும் போது தனது இரு கைகளைப் பயன்படுத்தினார்கள் என்றே உள்ளது. “ஒரு ஆசிரியர், மாணவருக்கு எதையேனும் கற்றுத் கொடுக்க விரும்பினால் தனது இரு கைகளால் அவரது கையைப் பிடித்துக் கொள்ளலாம்” என்று மட்டுமே இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடியும்.“முஸாபஹாவுக்கும் அதில் ஆதாரம் உள்ளது” என்ற கருத்தை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், அந்த ஹதீஸ்படி, முஸாபஹா செய்பவர்களில் ஒருவர் இரண்டு கைகளையும், இன்னொருவர் ஒரு கையையும் பயன்படுத்த வேண்டும்” என்று தான் புரிந்து கொள்ள முடியும். அந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் இரு கைகளையும், இப்னுமஸ்ஊது ஆதாரமாக இந்த ஹதீஸைக் கருதுபவர்கள், ஒருவர் இரண்டு கைகளையும், இன்னொருவர் ஒரு கையையும் பயன்படுத்த வேண்டும்” என்று தான் முடிவு செய்ய முடியுமே தவிர இருவருமே இரண்டு கைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இதில் ஆதாரமில்லை. (யார் இரண்டு கைகளைக் கொடுப்பது, யார் ஒரு கையைக் கொடுப்பது என்பதையும் முடிவு செய்தாக வேண்டும்).ஆனால் முஸாபஹா செய்யும்போது ஒரு கையைப் பயன்படுத்துவது பற்றி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் சிலதைக் கீழே பட்டியல் போட்டுள்ளோம்.நூல் பாடம் அறிவிப்பவர்1)புகாரி தப்ஸீர் அபூசயீது இப்னு முஅல்லா(ரழி)2) புகாரி முஆனகா இப்னு அப்பாஸ்(ரழி)3) புகாரி, அஹ்மத் நேர்ச்சை அப்துல்லா இப்னு ஹிஷாம்(ரழி)4) முஸ்லிம் பழாயில் அனஸ்(ரழி)5) அபூதாவூத் கியாம் அன்னை ஆயிஷா(ரழி)6) திர்மிதீ முஸாபஹா அனஸ் (ரழி)7) அபூதாவூத் ஹுஸ்னுல்உஷ்ரத் அனஸ் (ரழி)8) இப்னு மாஜா இக்ராமூர்ஜுல் அனஸ் (ரழி)9) அஹ்மத் பாகம் 3, பக்கம் 111 அனஸ் (ரழி)10) திர்மிதீ பாகம் 2, பக்கம் 97 அப்துல்லா இப்னு மஸ்ஊது (ரழி)11) அத்காருன்னவவீ பக்கம் 228 அனஸ் (ரழி)12) தாரமீ பாகம் 2, பக்கம் 286 அனஸ் (ரழி)13) அஹ்மத் பாகம் 4, பக்கம் 289 அபூதாவூது (ரழி)14) அஹ்மத் பாகம் 5, பக்கம் 267 அபூஉமாமா (ரழி)15) தர்கீப், தர்ஹீப் பாகம் 5, பக்கம் 103 ஹுதைபா (ரழி)16) அஹ்மத் பாகம் 3, பக்கம் 142 அனஸ் (ரழி)17) அஹ்மத் பாகம் 4, பக்கம் 291 பரா இப்னு ஆஸிம்(ரழி)18) தர்கீப் தர்ஹீப் பாகம் 5, பக்கம் 104 சல்மான் பார்ஸீ (ரழி)19) அஹ்மத் பாகம் 5, பக்கம் 360 அபூஉமாமா (ரழி)20) இப்னு அஸாகிர் இப்னு உமர் (ரழி)21) திர்மிதீ பாகம் 2, பக்கம் 255 நாபிவு (ரழி)22) அஹ்மத் பாகம் 5, பக்கம் 163 அபூதர் (ரழி)இன்னும் பல ஹதீஸ்களும் ஒரு கையால் முஸாபஹா செய்வது பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இரண்டு கைகளால் முஸாபஹா செய்வதற்கு நேரடியாக எந்த ஒரு ஹதீஸையும் நாம் காண முடியவில்லை. புகாரியில் இடம் பெற்றுள்ள அந்த ஒரே ஒரு ஹதீஸும் முஸாபஹா பற்றியது அல்ல. அது முஸாபஹாவுக்கு உரியது என்று வைத்துக் கொண்டாலும் ஒரு கையால் முஸாபஹா செய்பவர்கள் தான் அந்த ஹதீஸையும் செயல்படுத்துகிறார்கள். யாரேனும் நம்மிடம் முஸாபஹாவுக்கு இரண்டு கைகளை நீட்டினால் நீங்கள் ஒரு கையை மட்டும் நீட்டுங்கள்! அந்த ஹதீஸில் உள்ளபடி அப்போதும் நாம் அமல் செய்து விட்டோம். ஏனெனில் அந்த ஹதீஸில் ஒருவர் இரண்டு கைகளையும், இன்னொருவர் ஒரு கையையும் பயன்படுத்தினார்கள் என்று தான் உள்ளது. இரண்டு நபர்களும் இரண்டு கைகளைக் கொடுக்க அந்த ஹதீஸில் ஆதாரம் எதுவும் கிடையாது.எவ்வித ஆதாரமுமில்லாமல் ஏன் மக்களிடம் இந்தப் பழக்கம் வேரூன்றியது தெரியுமா? அதற்கும் ஒரு பின்னனி உண்டு. ஹில்று (அலை) அவர்கள் பல மனிதர்களின் தோற்றத்தில் வருவார்களாம். சிலருடன் முஸாபஹா செய்வார்களாம். அவர்களால் முஸாபஹா செய்யப்பட்டு விட்டால் உடனே அவர் இறைநேசராம்! ஹில்று(அலை) அவர்களின் வலது கைப் பெருவிரலில் எலும்பு இருக்காதாம். இரண்டு கைகளால் முஸாபஹா செய்யும் போது மற்றவரின் வலது கைப் பெருவிரலை அழுத்திப் பார்க்க வேண்டுமாம். எலும்பு இல்லாவிட்டால் ஹில்று(அலை) என்று புரிந்து கொள்ள வேண்டுமாம் இந்தக் கதையை அடிப்படையாக வைத்தே இரு கைகளால் முஸாபஹா செய்வது நடைமுறைப்படுத்தப்பட்டது. எனவே ‘முஸாபஹா’ ஒரு கையால் செய்வதே சுன்னத் என்று நாம் தெரிந்து கொள்கிறோம், குன்யதுத் தாலிபீன் என்ற நூலில் அப்துல்காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள், “வலது கையால் செய்ய வேண்டியவை” என்ற தலைப்பில் முஸாபஹாவையும் சேர்த்துள்ளார்கள், இமாம் நவபீ அவர்கள் வலது கையால் முஸாபஹா செய்வதுதான் விரும்பத்தக்கது என்று கூறியுள்ளனர். இவற்றிலிருந்தும் ஒரு கையால் தான் ‘முஸாபஹா’ செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.இரண்டு கைகளால் முஸாபஹா செய்பவர்களில் சிலர், வலது கையை இடது புறமாகக் கொண்டு சென்று, இடது கையை வலது புறமாகக் கொண்டு சென்று (ஏறத்தாழ ‘பெருக்கல்’ வடிவத்தில் கைகளை வைத்துக் கொண்டு) முஸாபஹா செய்வதும், இன்னும் சிலர் வலது கையை, தன் தலைக்கு நேராக வைத்துக் கொண்டு முஸாபஹா செய்வதும், பார்க்க தமாஷாக இருக்கும். இந்த விநோதங்களை எல்லாம் எங்கிருந்து கற்றார்களோ தெரியவில்லை.சுன்னத்தான முறைப்படி நாம் ஒரு கையை நீட்டினால், ஏதோ அதிசயப் பிராணியைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள். நாகரீகமான ஒரு முஸாபஹாவை நம்மிடமிருந்து மேனாட்டவர் கற்றுக் கொண்டு செய்து வருகின்றனர். நம்மவர்கள் தான் அந்த “சுன்னத்தை” மாற்றிக் கொண்டோம். சுன்னத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஒரு கையால் முஸாபஹா செய்வோமா!முஸாபஹா செய்யும் போது எதுவும் ஓத வேண்டும் என்று எவ்வித ஆதாரமும் கிடையாது. “முஸாபஹா செய்யும் போது ஸலவாத் ஓத வேண்டும்” என்று இப்னு ஹப்பானில் இடம் பெற்றுள்ள ஹதீஸ், முற்றிலும் நிராகரிக்கப்பட்டதாகும் என்று இமாம் இப்னு ஹப்பான்(ரஹ்) அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். முஸாபஹா செய்யும் போது வேறு எந்த திக்ருகளும் ஓத வேண்டும் என்பதற்கும் ஆதாரம் கிடையாது. குறிப்பிட்ட சில தொழுகைக்குப் பின் ‘முஸாபஹா’ செய்வதற்கும் ஸஹீஹான ஆதாரங்கள் எதுவும் கிடையாது.